'DMK-ல் Manoj Pandian' 4 மண்டலத்தில் 4 பேர், Stalin மெகா ஸ்கெட்ச்! | Elangovan E...
சிவகார்த்திகேயன் வாழ்த்து; வைரலாகும் ஸ்மிருதி மந்தனாவின் பேச்சு
கடந்த ஞாயிற்று கிழமை (நவ. 2) நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது.
கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியை கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்தினர்.
அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயனும் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக இந்திய மகளிர் அணிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஏழு ஆண்டுகளுக்கு முன் அருண்ராஜா காமராஜ் 'கனா' படத்தின் மூலம் பெண்களின் கிரிக்கெட் உலகம் குறித்துப் பேசியிருந்தார்.
பெண்கள் கிரிக்கெட் குறித்து எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் அதுதான். எங்கள் SK புரொடக்ஷன் நிறுவனத்தின் முதல் திரைப்படமாகவும் இருந்தது.
இந்திய மகளிர் அணியின் இந்த வெற்றி உண்மையிலேயே மகிழ்வான உணர்வைத் தருகிறது" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான 'கனா' படம் பெண்கள் கிரிக்கெட்டை மையப்டுத்தியது.
7 வருடத்திற்கு முன் 'கனா' திரைப்படம் குறித்து அந்தப் பட விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பேசியிருந்தார்.

"இந்த மாதிரி ஒரு டாப்பிக்கை தேர்வு செய்ததற்கு சிவகார்த்திகேயன் சார், அருண்ராஜா சாருக்கு நன்றி.
நீங்கள் வைத்திருக்கும் டைட்டிலைப் போலவே நிறைய பெண்களுக்கு கிரிக்கெட் என்பது கனவாக இருக்கிறது.
இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்பதும் கனவாக இருக்கிறது. இந்தப் படத்தை போன்று பெண்களின் கிரிக்கெட் குறித்து பேச வேண்டிய நிறைய படங்கள் வர வேண்டும்" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



















