பீகார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அதிகாலையில் தீ விபத்து: 4 நோயாளிக...
சென்னை அயனாவரம் பரசுராம லிங்கேஸ்வரர் கோயில்: சாபங்கள் தீரும்... கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்!
சென்னை இன்று நவநாகரிகமான நகரமானத் திகழ்கிறது. ஆனால் ஆதியில் இத்தலம் மிகவும் பழைமையான சிவ மற்றும் விஷ்ணு ஆலயங்கள் கொண்ட புண்ணிய பூமி. அதற்கு சாட்சியாக சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் மிகவும் பழைமையான சிவாலயங்கள் பல உள்ளன.
அப்படி ஒரு ஆலயம் தான் அயனாவரத்தில் உள்ள பரசுராம லிங்கேஸ்வரர் திருக்கோயில். 1,000 வருடம் பழைமை வாய்ந்ததாகக் கூறப்படும் இந்தத் தலம் தற்போது புனரமைக்கப்பட்டுப் புதுப்பொலிவுடன் திகழ்கிறது.
வாருங்கள் அந்தத் தலத்தின் மகிமையானது என்கின்றன கல்வெட்டு ஆதாரங்கள்.
விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் தன் தந்தையின் ஆணையை ஏற்று தன் தாயைக் கொன்றார். அதனால் உண்டான பாவம் நீங்கும் பொருட்டு பரசுராமர் சிவபூஜை செய்ய வேண்டியதாயிற்று.
அதற்காக அவர் தானே ஒரு லிங்கத்தை உருவாக்கி அதற்கு மனமுருக பூஜை செய்து தன் பாவம் நீங்கப் பிரார்த்தித்தார். அதன் காரணமாக அவருக்கு சாபவிமோசனம் கிடைத்தது என்கிறது தலபுராணம்.

அதேபோன்று உயிர்களைப் படைக்கும் பிரம்மதேவனுக்கும் ஒருமுறை சாபம் உண்டானது. அதன் காரணமாக அவருக்குப் படைப்புத்தொழில் தடைப்பட்டது. பிரம்மன் தன் சாபம் நீங்கப் பல்வேறு தலங்களில் சென்று வழிபாடு செய்தார். இறுதியாக இங்கு வந்து வழிபட்டபோது அவர் சாபம் நீங்கியது.
பிரம்மன் மகிழ்ந்து இந்த ஈசனுக்கு ஆராதனைகள் செய்து மகிழ்ந்தான். அயனாகிய பிரம்மன் வழிபட்ட இடம் இது என்பதால் இதற்கு அயன்புரம் என்கிற பெயர் உண்டானது. அதுவே பின்னாளில் அயனாவரம் என்று மருவியது என்கிறார்கள் பக்தர்கள்.
இக்கோயிலின் மூலவர் லிங்கவடிவில் காட்சி அருளும் ஈசனைத் தீண்டாத் திருமேனி லிங்கம் என்றும் அழைக்கின்றனர். இச்சிவலிங்கத்திற்கு அரச்சனை மற்றும் அபிசேகம் செய்ய அர்ச்சகர்கள் லிங்கத்தினைத் தொடுவதில்லை. இச்சிவலிங்கம் பருவகாலத்திற்கு தக்கவாறு நிறம் மாறும் தன்மையுடையது.
ஆவணி முதல் மார்கழி மாதம் வரை சிவலிங்கம் கருப்பு நிறமாகவும், பங்குனி முதல் ஆடி மாதம் வரை பொன் நிறமாகவும் காட்சியளிக்கும் என்கிறார்கள் பக்தர்கள். இந்த அற்புதத்தைக் காண பல்வேறு பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

அழகிய ராஜகோபுரம் நம்மை வரவேற்கும். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த ராஜகோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. கோயிலின் தீர்த்தக்குளம் குளம் சாலையின் மறுபுறத்தில் உள்ளது. ராஜகோபுரத்திற்குப் பிறகு கொடிமரம், பலிபீடம் மற்றும் ரிஷபம் ஆகியவை உள்ளன.
ரிஷப தேவரை தரிசனம் செய்து மகா மண்டபத்தில் நுழையலாம். மகா மண்டபத்தில் கிழக்குப் பக்க நுழைவாயிலின் இருபுறமும் மகா கணபதி மற்றும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சுப்பிரமணியர் சந்நிதிகள் அமைந்துள்ளன.
வெளிப் பிராகாரத்தில் நாகர்கள், சுயம்பு, சண்டிகேஸ்வரர், பட்டீஸ்வரர், கால பைரவர், நவகிரகங்கள், சனீஸ்வரர், சந்திரன், சூரியன் ஆகியோர் சந்நிதிகொண்டு அருள்கின்றனர்.
மேலும் அர்த்த மண்டபத்தில் நடராஜர், பாலசுப்ரமணியர், உற்சவ மூர்த்திகள் காட்சி அருள்கின்றன. பாலசுப்ரமணியர் 4 திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்கிறார். மேல் கைகள் அட்சமாலை மற்றும் கமண்டலம் தாங்கி நிற்க கீழ் வலது கை அபய ஹஸ்தம், மற்றும் இடது கையில் கடி ஹஸ்தம் காட்டி அருள்கிறார் பாலசுப்பிரமண்யர்.
இந்தத் திருக்கோலத்தை பிரம்ம சாஸ்தா என்று போற்றுவர். இவரை வழிபட்டால் கல்வியில் மேன்மை உண்டாகும். ஞானம் ஸித்திக்கும்.

தொண்டைநாட்டில் உள்ள பெரும்பாலான கஜபிருஷ்ட விமானங்கள் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டவை; எனவே, இக்கோயிலும் 8 முதல் 9-ம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் புனரமைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். அர்த்த மண்டபமும் மகா மண்டபமும் சோழர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம்.
இவற்றின் தூண்கள் சதுர மற்றும் எண்கோண வடிவில் உள்ளன. மகா மண்டபத்தின் இடது புற கிழக்கு நுழைவாயிலில், உடைந்த தூண் ஒன்றின் துண்டு நிறுவப்பட்டுள்ளது. இந்தத் தூண் விஜயநகர காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்கிறார்கள்.
இப்படி சரித்திரப் புகழும் புராண சிறப்பும் வாய்ந்த இந்தத் தலத்துக்கு ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்வில் ஞானமும் கல்வியும் செல்வமும் சேர்ந்து கிடைக்கும். முன்வினை சாபங்கள் தீரும்.




















