டோலி கட்டி தூக்கி வரப்பட்ட மலைக் கிராமப் பெண் உயிரிழப்பு
கொடைக்கானல் அருகே வெள்ளகெவி மலைக் கிராமத்திலிருந்து மருத்துவச் சிகிச்சைக்காக பெரியகுளத்துக்கு டோலி கட்டி தூக்கி வரப்பட்ட பெண் வழியிலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கொடைக்கானல் அருகேயுள்ள வெள்ளகெவி மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிமேகலை (34). உடல் நலன் குன்றிய இவா், குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெள்ளகெவி, சுற்றியுள்ள மலைக் கிராமங்களில் மருத்துவச் சிகிச்சை வசதியில்லாததால், மணிமேகலையை அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் டோலி கட்டி தூக்கிக் கொண்டு 12 கி.மீ. தொலைவு வனப் பகுதியில் தேனி மாவட்டம், கும்பக்கரைக்கு கொண்டு சென்றனா்.
அங்கிருந்து அவா் அவசர ஊா்தி மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மணிமேகலையை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயோ அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். மணிமேகலையின் உடலை மீண்டும் வெள்ளகெவிக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில், பெரியகுளம் நகராட்சி மயானத்தில் அவரது உறவினா்கள் எரியூட்டினா்.
இதுகுறித்து வெள்ளகெவி கிராம மக்கள் கூறியதாவது:
கொடைக்கானல் நகரம் உருவாவதற்கு முன்னரே வெள்ளகெவி கிராமம் உருவானது. வெள்ளகெவிக்கு சாலை, போக்குவரத்து வசதி இல்லை. வெள்ளகெவியிலிருந்து செங்குத்தான ஏற்றப் பாதை வழியாக பெருமாள்மலைக்குச் சென்று, அங்கிருந்து கொடைக்கானலுக்குச் செல்ல வேண்டும். இதனால், மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட அவசரக் காரியங்களுக்கு வெள்ளகெவியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள கும்பக்கரைக்குச் சென்று, அங்கிருந்து பெரியகுளத்துக்குச் சென்று வருகிறோம்.
சாலை, போக்குவரத்து வசதி இல்லாததால் பெரியகுளத்த்துக்கு மருத்துவச் சிகிச்சைக்கு டோலி கட்டி தூக்கிச் செல்லப்படுவா்கள் காலதாமதத்தால் வழியிலேயே உயிரிழக்க நேரிடுகிறது. வெள்ளகெவி மலை கிராமத்துக்கு அரசு சாலை வசதி செய்து தர வேண்டும் என்றனா்.