Leader: "மீம்ஸ்களைப் பார்க்க நேரம் ஒதுக்க விரும்பவில்லை!" - லெஜெண்ட் சரவணன்
`தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு நிதி ஒதுக்காததற்கு காரணம் இதுதான்!’ - முதல்வர் ஸ்டாலின் கூறிய விளக்கம்
விழுப்புரம் மாவட்டம், கொள்ளார் கிராமத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் பயன்கள் வழங்குதல், என் கனவு என் எதிர்காலம் என்ற இணையத்தளம் துவக்குதல் மற்றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் விழா இன்று நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பயனாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய முதல்வர் ஸ்டாலின், ``2021 சட்டமன்றத் தேர்தலின்போது தொலைநோக்குப் பார்வையுடன் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியிருக்கிறோம்.
அதேசமயம் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாத பலவற்றையும் முத்திரை திட்டங்களாக செய்து கொடுத்திருக்கிறோம். தி.மு.க-வைப் பொறுத்தவரை சட்டங்களையும், பெரிய பெரிய திட்டங்களையும் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களின் ஒவ்வொருவரின் தேவைகளையும் நிறைவேற்றுவோம்.

அதற்காகத்தான் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் வந்து உங்கள் கோரிக்கைகளைக் கேட்டு, அதை மனுக்களாக வாங்கியிருக்கிறேன்.
அந்தப் பயணத்தில் நான் கோரிக்கை மனுக்களை மட்டும் வாங்கவில்லை. தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையையும் பெற்று திராவிட மாடல் அரசை அமைத்தோம். அந்த கோரிக்கைகளை நூறு நாட்களுக்குள் தீர்த்து வைக்க வேண்டுமென்று பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறையை உருவாக்கினேன்.
அந்த துறையின் மூலமாக மக்களிடம் இருந்து பெற்ற 4,57,641 மனுக்களுக்கு நூறு நாட்களில் தீர்வு கண்டோம். அந்தத் துறையின் மூலம் மூலம் 1.49 கோடி மனுக்களுக்கு தீர்வு கண்டிருக்கிறோம் என்பதை பெருமையுடன் கூறுகிறேன்.
இப்படி நாம் ஒருபுறம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக திட்டமிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மற்றொருபுறம் ஒன்றிய பா.ஜ.க அரசும், அதன் கூட்டாளிகளும் அந்த வளர்ச்சியைக் கெடுக்க அனைத்து செயல்களையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதன் சமீபத்திய உதாரணம்தான் ஒன்றிய அரசு தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட். அதில் பெயரளவுக்குக் கூட தமிழ்நாட்டுக்கு எந்த வளர்ச்சித் திட்டமும் இல்லை. இதற்கு முன்பு ஒப்புக்காகவாவது திருக்குறளை சொன்னார்கள்.
இந்தமுறை அதுவும் இல்லை. பொதுவாக தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதியை ஒதுக்குவது பா.ஜ.க-வின் தந்திரங்களில் ஒன்று. பீகார், ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களுக்கு அப்படித்தான் நிதி ஒதுக்கினார்கள். அதன்பிறகு அதை செய்தார்களா என்று பார்த்தால், அதையும் செய்திருக்கமாட்டார்கள்.

பா.ஜ.க வழக்கமாக செய்யும் அந்த ஸ்டண்ட்டைக் கூட தமிழ்நாட்டுக்கு செய்யவில்லை. அந்த அளவுக்கு தமிழ் மீதும், தமிழர்கள் மீதும், தமிழ் நாட்டின் மீதும் அவர்களுக்கு அவ்வளவு வெறுப்பு. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக இருக்கிறது.
இந்தியாவின் வளர்ச்சிக்காக நாம் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஒன்றிய அரசுக்கு வரி வருவாயை வாரி வழங்கும் நம் மாநிலத்திற்கு மிக மிக சொற்பமான பங்கைத்தான் திருப்பித் தருகிறார்கள்.
எப்படியும் தேர்தலில் தோற்கத்தானே போகிறோம். அப்புறம் ஏன் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். அவர்கள் தோற்கத்தான் போகிறார்கள் அதுதான் உண்மை. உங்கள் ஆதரவுடன் தமிழ்நாட்டில் அடுத்து அமையப் போவது திராவிட மாடல் 2.0 அரசுதான்" என்றார்.














