Leader: "மீம்ஸ்களைப் பார்க்க நேரம் ஒதுக்க விரும்பவில்லை!" - லெஜெண்ட் சரவணன்
`தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதாம்; உண்மைதான், ஏனெனில்...' - நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் உரை!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. அதில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் உரையாற்றினார். மாநிலங்களவையில் அவர் ஆற்றும் முதல் உரை இது என்பதால் கூடுதல் கவனம் பெற்றது. ஆங்கிலத்தில் பேசிய அவர், ``இங்கு வரமுடியாமல் போன எம் தமிழர் தலைவர்களுக்கும், என் நண்பர் ஸ்டாலினுக்கும் நன்றி. உயர்ந்த உங்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்ற ஒரு சாமானியனின் ஆர்வத்தை மன்னித்துவிடுங்கள். ஆனால், வரலாற்றின் போக்கை மாற்றியதும், ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளை வீழ்த்தியதும் இந்தச் சாமானியர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தண்டி யாத்திரையை நினைவுகூருங்கள்.

இப்போது நாம் நிகழ்காலத்தைப் பார்ப்போம். எனது உடனடி கவலை வரவிருக்கும் தேர்தல்கள் பற்றியது. எங்களின் தற்போதைய நிலையை 'உயிரோடு இருப்பவர்களின் மரண வாக்குமூலம்' என்று அழைக்கிறேன். நாங்கள் வாக்களிக்க விரும்புகிறோம், ஆனால் தேர்தல் ஆணையம் எழுத்துப் பிழைகளையும் முகவரிகளையும் காரணம் காட்டி எங்களது வாக்களிக்கும் உரிமையையே கேள்விக்குள்ளாக்குகிறது.
'ஸ்பெல்' என்பது ஒரு சொல்லாகவும் இருக்கலாம் அல்லது ஒரு மந்திரமாகவும் இருக்கலாம். நவீன இலக்கியமும் இணையமும் உள்ளடக்கத்திற்காக எழுத்துப் பிழைகளை மன்னிக்கின்றன, ஆனால் தேர்தல் ஆணையம் மன்னிப்பதில்லை. 'EC' என்றால் 'ஆங்கிலப் பயிற்சியாளர்கள்' (English Coaches) என்று அர்த்தமல்ல. பீகார் ஏற்கனவே பல 'வாழும் பிணங்களின்' (வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள்) தேசமாகிவிட்டது.
இந்த நோய் நாடு முழுவதும் பரவுவதை நாங்கள் விரும்பவில்லை. வங்காளத்தைச் சேர்ந்த எனது சகோதரியும் (தீதி) இதையேதான் புலம்புகிறார். இதற்காக அவர் உச்ச நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிலும் கிட்டத்தட்ட ஒரு கோடி 'வாழும் பிணங்கள்' காகித அளவில் உருவாக்கப்பட்டு விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம்.
எனது தேசம் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இந்த அவைக்குள் வந்து தங்கள் மக்களுக்காகப் பேசுவதற்கு கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. எனக்கு அந்தத் திரைத்துறையின் வாயிலாக இந்தக் கதவு திறந்தது. பரமக்குடியிலிருந்து வந்த ஒரு குழந்தையைச் சினிமா புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அந்தச் சினிமாதான் எனக்குத் தமிழ் வரலாற்றை அறிமுகப்படுத்தியது. அப்போதுதான் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்ற அரசியலமைப்பு வாக்குறுதிக்கும், யதார்த்தத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை நான் உணர்ந்தேன்.
எனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய ஆசிரியர்களில் ஒருவர் அரசியல் தலைவர் சி.என். அண்ணாதுரை. 'துரை' (Durai) என்றால் பிரெஞ்சு மொழியில் அரசன் என்று பொருள். அவர் அரசராகப் பிறக்கவில்லை, ஆனால் தமிழர்களாகிய நாங்கள் அவரை எங்கள் மனங்களில் அரசராக அரியணையில் ஏற்றினோம். எமது மொழி, கலாசாரம் மற்றும் உரிமைகள் மீதான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எப்படி எதிர்கொள்வது என்று அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.
57 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நான் உங்கள் முன்னால் பேசுகிறேன். 1969, பிப்ரவரி 3-ம் தேதி அவர் மறைந்த தினம். எனது சித்தாந்தத்தின் தந்தைகளில் ஒருவரை இழந்த நான் அப்போது 14 வயது சிறுவன். இன்று அவர் பேசிய அதே அவையில் நான் பேசுகிறேன். இது மேடை அச்சம் அல்ல, உணர்ச்சிகளால் நான் நடுங்குகிறேன். எனக்குள் இருக்கும் உணர்ச்சிப் பெருக்கெடுத்து உங்களைத் புண்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே நான் இதையெல்லாம் எழுதி வைத்திருக்கிறேன்.

இன்று அண்ணாவின் மகனாகவும், காந்தி மற்றும் பெரியாரின் கொள்ளுப் பேரனாகவும் உங்கள் முன் நிற்கிறேன். எனது அன்பு நண்பர் மு.க ஸ்டாலினுக்கு எனது நன்றி.
பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய நான், பொருளாதாரம் பற்றிப் பேசத் தகுதியற்றவன் என்று நீங்கள் சொல்லலாம். இருந்தாலும், ஒரு மாணவனாக எனக்கு ஒரு கருத்து உண்டு. கோபமில்லாமல் இந்தப் பேச்சை எழுத காந்தி உதவினார், தர்க்கத்தை (Logic) சேர்க்க பெரியார் உதவினார், இந்த அவையைப் புரிந்துகொள்ள அண்ணா உதவினார்.
கடைசியாக ஒன்று, மொழிப்போர் என்ற காலம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். ஏனெனில் செயற்கை நுண்ணறிவு (AI) வந்துவிட்டது. ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வசதி இப்போது உள்ளது. பாரதப் பிரதமர் காசி தமிழ்ச் சங்கமத்தில் பேசியபோது, அவரது பேச்சு ஐந்து நிமிடங்களில் தமிழில் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டது. எனவே, மொழியை வைத்து மோதலை உருவாக்க நினைப்பவர்கள் தங்களது சொந்தக் கற்பனை உலகில் வாழ்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்." என்றார்.

தமிழில் உரையைத் தொடர்ந்தவர், ``நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகுதான் உங்கள் பிச்சை பாத்திரம் உருவாக்கப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாது என்கிரீர்கள். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே... தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது.
தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். ஓட்டையும் நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்று இது 'உம் வினை உம்மை சுடுக'. எங்கள் நாடு நீடூழி வாழும், உம் வினை உம்மைச் சுடுக, ஓட்டப்பம் வீட்டைச் சுடுக. 'வந்தீர் வென்றீர் செல்வீர்' இது உலக நியதி, அரசியல் நியதியும்கூட. வீழ்க வளமுடன் (கமல் பேசியது அப்படியே). தமிழ் என்றும் வாழும் நலமுடன்." என்றார்.














