தவெக தேனீர் விருந்தைப் புறக்கணிக்க காரணம் என்ன? - சிபிஐ வீரபாண்டியன் விளக்கம்
"தவெக செய்வது Horse Trading அல்ல, Horse Racing" - பிரவீன் சக்கரவர்த்தி விளக்கம்
கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைவது என்பது, த.வெ.க, அ.தி.மு.க கட்சிக்குள் நடைபெறும் விஷயம். ஏதாவது தவறு நடந்தால், அப்போது நாங்கள் பேசுவோம்.
இப்பொழுது தவெக, அதிமுக இடையே நடைபெறக்கூடிய பிரச்னையில், இப்பொழுது நாங்கள் பேசுவது சரியாக இருக்காது. அ.தி.மு.க எம்.பி இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் எந்த அடிப்படையில் மனு கொடுத்து உள்ளார்? எந்த அடிப்படையில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது? எம்.எல்.ஏ-க்கள் சொந்தமாகச் சுயமாக முடிவெடுத்து வேற கட்சிக்குச் செல்கின்றனர்.
நேற்று யார் மீது முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளது? தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், த.வெ.க எம்.எல்.ஏ-வை நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஓட்டு போட சொல்லியதாக வழக்கு போட்டு இருக்கின்றனர்.
பணம் கொடுத்து வாங்குவதுதான் குதிரைப் பேரம், அதுதான் ஹார்ஸ் டிரேடிங். பணம் கொடுப்பதாகச் சொல்வதே தவறு, சட்டப்படி இந்தப் பேச்சு எடுத்தாலே தவறு. எம்.எல்.ஏ-க்கள் சுயமாக வேறு கட்சிக்குப் போகின்றனர், இது ஹார்ஸ் ரேசிங்.

தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகளால் இந்த 50 நாட்களில் யாரைக் கேட்டாலும் ஊழல் குறைந்து இருக்கிறது எனச் சொல்கின்றனர், அரசு அலுவலகங்களில் வேலை விரைவாக நடக்கிறது எனச் சாதாரண மக்கள் பேசுகின்றனர். 50 நாட்களில் இது எவ்வளவு பெரிய புரட்சி? சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகரித்து இருக்கின்றது என்பது தவறு.
இதுவரை என்ன நடந்து கொண்டிருந்ததோ, அது அப்படியே நடந்து கொண்டு இருக்கிறது. சிங்கப் பெண் திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அமல்படுத்தவே நேரம் ஆகும். 5 ஆண்டுகளில் நடந்ததை 50 நாள்களில் ஒப்பிடுவது சரியாக இருக்காது. 50 நாள்களிலேயே லஞ்சத்தை ஒழித்து இருப்பது ஆச்சரியமானது” என்றார்.
த.வெ.க வாசிங் மெசின் எனக் கனிமொழி எக்ஸ் பதிவு குறித்த கேள்விக்கு, “அவர் சொல்வதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. 2026 மக்கள் தீர்ப்பு மாற்றம் வேண்டும், தி.மு.க எதிர்க்கட்சியில் உட்கார வேண்டும் என்பதுதான். ஏன் திமுக பயப்படுகிறது? எதிர்க்கட்சியின் அமர என்ன பயம்? எதைக் கண்டுபிடித்து விடுவார்கள் என பயம்? தி.மு.க, அ.தி.மு.க பேச்சுவார்த்தை நடத்தி ஏன் ஆட்சியைப் பிடிக்க பதற்றப்படுகின்றனர்?” எனப் பதிலளித்தார்.
கல்லா பெட்டி கூட்டணி என விஜய்யால் விமர்சிக்கப்பட்டர்கள் த.வெ.க வசம் சென்றது குறித்த கேள்விக்கு, “காங்கிரஸ் ஆதரவு கொடுத்து இருக்கிறது. நேற்றைய தினம் தேநீர் பார்ட்டியில் கூட்டணி கட்சியினருக்கு மரியாதையும், மதிப்பும் கொடுத்தனர். 60 ஆண்டு காலத்தில் இதெல்லாம் நடந்தது கிடையாது. இந்த 50 நாள்களில் சிறப்பான துவக்கம் நடந்துள்ளது” எனப் பதிலளித்தார்.














