செய்திகள் :

"திமுக அரசின் துரோகப் பட்டியல் நீள்கிறது"- ஆசிரியர்கள் கைதுக்கு அன்புமணி கண்டனம்

post image

சென்னையில் போராட்டம் நடத்திய ஆசிரியர்களைக் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் பல மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆசிரியர்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

இதனால், இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர்கள் கைது
ஆசிரியர்கள் கைது

அந்த வகையில் இன்று (டிச. 26) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை தலைமை அலுவலகம் முன்பு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.

இடைநிலை ஆசிரியர்களிடம் உள்ள ஊதிய முரண்பாட்டைக் கலைய வேண்டும் எனவும் 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக கொடுத்த 311வது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களைக் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

இதற்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திமுக-விற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராடிய இடைநிலை ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசின் துரோகப் பட்டியல் நீள்கிறது!

ஊதிய முரண்பாட்டைக் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உரிமை கோரி போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

2009- மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் ஊதிய முரண்பாடு நிலவுகிறது.

31.05.2009 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. ஆனால், 01.06.2009-க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 மட்டுமே அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது.

அப்போது அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 என்ற வேறுபாட்டில் தொடங்கிய ஊதிய முரண்பாடு, இப்போது மொத்த ஊதியத்தில் ரூ.16,000க்கும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது.

ஒரே பணியை செய்யும் இருதரப்பு இடைநிலை ஆசிரியர்களிடையே இந்த அளவு ஊதிய முரண்பாடு நிலவுவது நியாயமற்றது. திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே இந்தக் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு இன்று வரை விடியல் கிடைக்கவில்லை.

இதே கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு திசம்பர் 25, 26 ஆகிய நாட்களில் சென்னையில் போராட்டம் நடத்திய போது, அவர்களை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அதன்பின் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று வாக்குறுதி (எண். 311) அளிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய வாக்குறுதி அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினே, ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது நியாயமற்றது.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் 5 நாட்களுக்கும் மேலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர்.

ஆசிரியர்கள் கைது
ஆசிரியர்கள் கைது

அதைத் தொடர்ந்து அவர்களுடன் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்பது குறித்த முடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க 3 உறுப்பினர் குழு அமைக்கப்பட்டது.

அக்குழு 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பல கட்ட போராட்டங்களை நடத்திய பிறகும் கூட இன்று வரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை;

ஊதிய முரண்பாடும் களையப்படவில்லை. மாறாக, அவர்களை மீண்டும், மீண்டும் ஏமாற்றுவதன் மூலம் திமுக அரசின் துரோகப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

எனவே, ஆசிரியர்களின் போராட்டத்தை அடக்குமுறை மூலம் ஒடுக்கி விடலாம் என்ற எண்ணத்தை திமுக அரசு கைவிட வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் என்ற அவர்களின் கோரிக்கை உடனடியாக திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்" என்று அன்புமணி தெரிவித்திருக்கிறார்.

திருவனந்தபுரம்: மேயரானார் பாஜக-வின் ராஜேஷ் - முன்னாள் பெண் டிஜிபி-க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்?

கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 9 மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெற்றது. கடந்த 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் கேரளாவில் மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் 4-ல் காங்கிரஸ் கூட்டணியும், ஒ... மேலும் பார்க்க

CPI: நூறாண்டைத் தொட்ட சிபிஐ; இந்தியாவில் வளர்ந்தது எப்படி? - வரலாறு சொல்லும் தகவல்!

இந்தியாவில் பொதுவுடைமை சித்தாந்தம், என்னதான் 1800-களின் இறுதியில் நுழைந்திருந்தாலும், அதன்பின்னர் நிறைய கம்யூனிஸ்ட் கட்சிகள் தோன்றியிருந்தாலும், பொதுவுடைமையை இந்தியாவில் படரச் செய்ததில் இந்தியக் கம்யூ... மேலும் பார்க்க

சேலம்: `பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு அன்புமணியால் அச்சுறுத்தல்!' - ராமதாஸ் தரப்பு புகார்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில், கட்சியின் சிறப்பு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சேலம் மாவட்டத்தில் வரும் 29ம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என ... மேலும் பார்க்க

தமிழ்ச் சமூக பாட்டாளி வர்க்கத்தின் நூற்றாண்டு ஒளி! - தோழர் நல்லகண்ணு பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

'அதிகாரம் கொடியது!'இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம் அது. நல்லகண்ணு உட்பட கட்சியின் தோழர்கள் அத்தனை பேரும் தலைமறைவாக இருந்தார்கள். கிராமம் கிராமமாக பதுங்கி நடந்து நடந்தே விரல்கள் கொ... மேலும் பார்க்க

``தமிழ்நாடு சிறந்த மாநிலம்தான்... மேடையில் விஜய் செய்த செயல்..." - ஆற்காடு நவாப் பேட்டி

தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் திமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கிறார். குறிப்பாக தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறியிருக்கிறது என்று கடுமையாகச் சாடுகி... மேலும் பார்க்க

6000 டன் எடை கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்; 3,500 கி.மீ. பாயும் K-4 ஏவுகணை|சோதனை நடத்திய இந்தியா

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து தாக்கும் வகையில் k - 4 எனும் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை வடிவமைத்திருக்கிறது.அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான 'ஐ.என்.எஸ். அரிகாட்'டில் (INS Arighat) இருந்த... மேலும் பார்க்க