Nepal Flash Flood | நதி தன் பாதையை மாற்றுமா? கோசி என்னும் "துயர ஆறு" | Decode
'திரவ கான்கிரீட்' வெள்ளம்... 1.2 கிமீ தூரம் பாய்ந்த பனிப்பாறை; நேபாளத்தைச் சேதப்படுத்தியது எப்படி?
நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் அங்கு சுற்றுலா சென்று இருந்தனர். இந்த வெள்ளத்தைத் தொடர்ந்து 288 இந்தியர்கள் உட்பட 1500 பேரை இதுவரை காணவில்லை. அவர்களைத் தொடர்புகொள்ள அவர்களது உறவினர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். புதன்கிழமை நேபாளத்தின் ரசுவா மாவட்டம் மற்றும் நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் ஒரு பனிப்பாறை சரிவால் உண்டானது.
அந்தப் பனிப்பாறையின் மூன்றில் இரண்டு பங்கு உயரமான பனிப்பாறை உடைந்து 1.2 கிமீ பயணம் செய்து லெண்டே கோலா நதியில் கலந்தது. இது தொடர்பான செயற்கை கோள் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

பனிப்பாறை சரிந்து ஒரு சக்திவாய்ந்த நீரோடையாக மாறி போட் கோஷி-திரிசூலி பகுதியை அழித்தது தெளிவாகப் பதிவாகி இருக்கிறது. பனிப்பாறையின் மூன்றில் இரண்டு பங்கு உடைந்துவிட்டதை இஸ்ரோவின் புகைப்படங்கள் காட்டியது.
கடந்த 24ம் தேதி சென்டினல்-2 செயற்கை கோள் அனுப்பிய படம் பனிப்பாறை அப்படியே இருப்பதைக் காட்டியது, ஆகஸ்ட் 26 அன்று பேரழிவிற்குப் பிறகு எடுக்கப்பட்ட லேண்ட்சாட்-9 படம் பனிப்பாறை உடைந்த மண்டலத்தைக் குறிக்கும் ஒரு பெரிய வடுவைக் காட்டியது. சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் பனிப்பாறையின் ஒரு பெரிய பகுதி உடைந்தது. தோராயமாக 200 சதுர மீட்டர் பனிக்கட்டி உடைந்து பின்னர் 1.2 கிமீ செங்குத்தாக பள்ளத்தாக்கு தரையில் விழுந்தது.
செங்குத்தாக விழுந்ததால் ஈர்ப்பு சக்தி காரணமாக பனியானது துண்டு துண்டாக மாறியது. சரிந்து வந்த பாறைகள், பனி, வண்டல், மரங்கள் மற்றும் பிற குப்பைகளை எடுத்துக்கொண்டு வந்ததால் அது ஒரு மிகப் பெரிய குப்பை ஓட்டமாக மாற்றியதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். கீழ்நோக்கி கொண்டு செல்லப்பட்ட பெரிய அளவிலான பொருள் வெள்ளத்தின் தன்மையை அடிப்படையில் மாற்றியது.
சாதாரண வெள்ளநீரைப் போல அல்லாமல், கலவையில் அதிக அளவில் சேறு, பாறைகள், பனிக்கட்டிகள் மற்றும் குப்பைகள் இருந்ததால் அது மிகவும் அடர்த்தியாகவும் அழிவுகரமானதாகவும் மாறியது. டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் புவியியல் வல்லுனர் ஹாதிம் ஷெரீஃப் இது குறித்து கூறுகையில், ''இதுபோன்று வேகமாக நகரும் சேறு மற்றும் வெள்ளம் "திரவ கான்கிரீட் போன்றது" ஆகும். ஏனெனில் அவை வாகனங்கள், கட்டிடங்கள் மற்றும் பெரிய பாறைகளைக்கூட உருட்டி கொண்டு வரும்'' என்று தெரிவித்தார். பனிச்சரிவு நில அதிர்வு கருவிகளில் பதிவு செய்யும் அளவுக்குச் சக்திவாய்ந்ததாக இருந்தது.
நேபாள பேரழிவு வெறுமனே ஒரு நதி நிரம்பி வழிவதில்லை. இது கடல் மட்டத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர்களுக்கு மேல் பனிப்பாறை உடைந்து தொடங்கிய ஒரு சங்கிலி எதிர்வினை ஆகும். பனிப்பாறையின் ஒரு பெரிய பகுதி உடைந்து ஒரு கிலோமீட்டருக்கு மேல் மலைப்பகுதியில் விழுந்து, பனியை பனிச்சரிவாக மாற்றியது.
பனிச்சரிவு குப்பை ஓட்டமாக மாறியது, மேலும் குப்பைகள் "திரவ கான்கிரீட்" வெள்ளமாக வந்து கிராமங்களை அழித்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 472 ஆக அதிகரித்துள்ளது.
பனிப்பாறை உடைந்து திபெத்-நேபாள எல்லையில் புதிய ஏரி உருவாகி இருக்கிறது என்றும், அது உடையும் அபாயம் இருப்பதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். திபெத்-நேபாள எல்லையில் 'லெவல்-IV' எச்சரிக்கையை சீனா எழுப்பி இருக்கிறது. புதன் கிழமை பனி சரிவான உருவான தடுப்பு ஏரி, இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில், கீழ்நிலைப் பகுதிகளை உடைத்து வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக சீனா தெரிவித்து இருக்கிறது.
















