திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும...
திருப்பரங்குன்றம்: "நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்?" - அமைச்சர் ரகுபதி விளக்கம்!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென எழுந்த கோரிக்கையும் அதைத்தொடர்ந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பும் பேசுபொருளாகியிருக்கிறது.
இந்த சூழலில் தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறவேற்றாததைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் விதமாக செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் ரகுபதி.
2014 தீர்ப்பை சுட்டிக்காட்டிய ரகுபதி
ரகுபதி, "கார்த்திகை திருநாளை ஒட்டி திருப்பரங்குன்றம் பகுதியில் எழுந்த சர்ச்சை இன்றைக்கு தமிழகத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. மதவாத சக்திகள், இந்துத்துவா அமைப்புகள் தமிழ்நாட்டில் காலூன்ற எதைக் கையிலே எடுப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கார்த்திகை தீபம் என்பது தமிழ்க் கடவுள் முருகனுக்காக கொண்டாடப்படும் திருவிழாவே தவிர, இந்தியாவில் இருக்கிற இந்துக்களுடைய பண்டிகை அல்ல. உலகெங்கும் இருக்கக்கூடிய தமிழர்கள் கார்த்திகை திருவிழாவை கொண்டாடுவார்கள். இதில் இந்துத்துவாவுக்கு எந்த வேலையுமே கிடையாது." எனப் பேசினார்.
தொடர்ந்து திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றாதது குறித்துப் பேசியவர், "இப்பொழுது திடீரென்று திருபரங்குன்றத்திலே கார்த்திகை தீபத்தை ஒட்டி ஒரு பிரச்னையை கிளப்பி இருக்கிறார்கள். நீதிமன்றத்தை அணுகி ஒரு உத்தரவை வாங்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள்.
2014 ஆம் ஆண்டு நீதி அரசர்கள் பவானி சுப்பராயன் அவர்களும் நீதி அரசர் கல்யாண சுந்தரம் அவர்களும், 'எந்த இடத்திலே வழக்கப்படி கார்த்திகை தீபத்தை ஏற்றிக் கொண்டிருக்கிறோமோ, அதே இடத்திலேயே தான் ஏற்ற வேண்டும்' என ஒரு தீர்ப்பை தந்திருக்கிறார்கள்.
நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள். சட்டத்தின் ஆட்சி தமிழ்நாட்டிலே நடக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள். 2014ம் ஆண்டு இரண்டு நீதிபதிகளின் டிவிஷன் பென்சால் கொடுக்கப்பட்ட தீர்ப்பை மேல்முறையீடு செய்யாமல் புதிதாக ஒரு ஒற்றை நீதிபதி தீர்ப்பளித்து, வழக்கத்தை மாற்ற வேண்டுமென்றால் அதை நாங்கள் எப்படி நிறைவேற்ற முடியும். அப்படி அனுமதித்தால் தமிழக அரசின் மீது என்ன குற்றச்சாட்டு வரும் என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் 2014ம் ஆண்டு தீர்ப்பின்படி நடந்துகொள்கிறோம்." எனப் பேசினார்.












