'புலி' சேர்த்த குட்டீஸ் பட்டாளம்! விஜய்யின் பெருங்கடமைக்கு வாழ்த்து
திருமணத்துக்கு ரூ.17 கோடிக்கு அரண்மனை முன்பதிவு - வருங்கால கணவனை, காதலன் துணையோடு கொன்ற மணப்பெண்
மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த தொழிலதிபர் அகர்வால் மகன் கேதன் அகர்வாலுக்கும், ஷியா கோயல் என்ற பெண்ணிற்கும் இடையே வரும் நவம்பர் மாதம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு முன்பு தம்பதியினர் அடிக்கடி வெளியிடங்களுக்கு சென்று வந்தனர். வழக்கம்போல் இருவரும் புனே அருகில் உள்ள லோஹாட் கோட்டைக்கு சென்றனர்.
அந்த கோட்டை மலை உச்சியில் இருக்கிறது. அந்த கோட்டைக்கு செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்தி ஷியா கோயல் தனது வருங்கால கணவனை அழைத்துச்சென்றார். அங்கு அவர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டனர். மலை உச்சியில் இருந்து கோட்டையில் இருந்தபோது கடுமையாக வீசிய காற்று காரணமாக கேதன் தவறி 400 அடி பள்ளத்தில் விழுந்துவிட்டதாக ஷியா போலீஸில் தெரிவித்தார்.
3 நாட்கள் போராடி கேதன் உடல் பள்ளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து ஷியா சொன்ன வாக்குமூலம் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் சொன்ன வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. இதனால் இந்த மரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணையை தொடங்கினர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் ஷியா மற்றும் கேதன் இருந்த இடத்தில் ஷியாவுடன் வேலை செய்யும் சேதன் என்பவரும் உடன் இருந்தது மொபைல் போன் சிக்னல் மூலம் தெரிய வந்தது.
அதோடு ஷியாவும், சேதனும் அடிக்கடி போனில் பேசி இருப்பதும், அவர்கள் இருவரும் காதலிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஷியாவிற்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லாவிட்டாலும், பணக்கார மணமகன் என்பதால் வேறு வழியில்லாமல் இத்திருமணத்திற்கு சம்மதித்தார். ஆனாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் கட்டாயப்படுத்தி கேதனை ஷியா மலைப்பகுதிக்கு கட்டாயப்படுத்தி அழைத்து சென்று மேலிருந்து காதலனுடன் சேர்ந்து கேதனை கீழே தள்ளி கொலை செய்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி சந்தீப் சிங் கூறுகையில்,''கேதன், சியாவுடன் காதலில் இருந்துள்ளார். இருவருக்கும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் திருமணம் நடைபெறவிருந்தது. திருமண விழாவிற்காக ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள ஒரு அரண்மனையை ரூ.17 கோடிக்கு முன்பதிவு செய்து இருந்தனர். அதோடு விருந்தினர்களை அழைத்துச்செல்ல இரண்டு விமானங்களும் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் ஷியா தான் வேலை செய்த இடத்தில் சேதன் என்பவரையும் காதலித்து வந்துள்ளார். அவர்களது உறவுக்கு கேதன் அகர்வால் தடையாக இருந்துள்ளார். எனவே சேதனும், ஷியாவும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி கேதன் அகர்வாலை மலையில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ளனர். சாதாரணமான ஒரு சுற்றுலா செல்வது போலக் கூறி, ஷியா கேதனை லோஹாகட் கோட்டைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் சேதனையும் ஷியா அந்த இடத்திற்கு வரவழைத்துள்ளார். அதன்பின், அவ்விருவரும் கேதனைப் பின்னாலிருந்து பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டுள்ளனர். இச்சம்பவம் ஒரு விபத்து போலத் தோற்றமளிக்கும் வகையில் திட்டமிட்டு நடத்தப்பட்டது''என்று தெரிவித்தார்.
முதல் முயற்சி தோல்வி
கேதன் அகர்வாலை ஏற்கனவே கடந்த 14ம் தேதி ஷியா அதே மலைப்பகுதியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயற்சி செய்ததாக கேதனின் தந்தை விஷால் அகர்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,''ஜூன் 14 அன்று, அவர்கள் இருவரும் தனியாகக் கோட்டைக்குச் சென்றனர். அங்கு ஷியா கேதனைத் பள்ளத்தில் தள்ளிவிட்டார். தள்ளப்பட்டதும், கேதன் ஒரு புதரைப் பிடித்துக்கொண்டு தப்பினான். இதனால் ரகசியம் வெளியாகிவிடுமோ என்று பயந்த ஷியா, 'பாம்பு, பாம்பு' என்று கத்தினாள்.
பாஸ்போர்டை திருடி மறைத்துவைப்பு
ஷியாவும், கேதனும் பாலி தீவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்தனர். அங்கு அவர்கள் திருமணத்திற்கு முந்தைய புகைப்படங்கள் எடுக்க திட்டமிட்டு இருந்தனர். இருவரும் புனே விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். ஆனால் புனே விமான நிலையத்தில் சென்றுபார்த்தபோது கேதனின் பாஸ்போர்ட்டை காணவில்லை. விமான நிலையத்திற்கு காரில் செல்லும் அனைவரும் ஹோட்டலில் சாப்பிட இறங்கினர். அந்நேரம் ஷியா மட்டும் தனது மொபைலை காரில் விட்டுவிட்டு வந்துவிட்டதாக கூறி காருக்கு சென்று வந்தார். அதன் பிறகு விமான நிலையத்திற்கு சென்ற போது கேதன் பாஸ்போர்ட் மட்டும் காணவில்லை. ஷியா திட்டமிட்டு கேதன் பாஸ்போர்ட்டை திருடி வைத்துக்கொண்டு அந்த பயணத்தை தவிர்த்தார்" என விஷால் அகர்வால் தெரிவித்தார்.



















