"பொருளாதார மந்த நிலையை விட அணு ஆயுதம் மிகப்பெரிய பேரழிவு" - ஈரான் போர் குறித்து ...
Dharman: "'நான் கமல் படம் செய்கிறேன்' என ரஜினி தூங்காமல் வேலை செய்கிறார்" - கமல்ஹாசன்
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்தப் படத்திற்கு 'தர்மன்' என்று தலைப்பிட்டிருக்கிறார்கள்.

ராஜ்கமல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா இன்று சென்னை ராஜ்கமல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கமல்ஹாசன் பேசுகையில், "இந்தப் படத்தைத் தயாரிக்கும் அளவிற்கு என்னை மார்க்கெட்டில் வைத்திருந்ததற்கு நன்றி. ரஜினி ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார்.
இரண்டு படங்களில் இருவரும் ஒரே நிலைக்கு வந்துவிட்டோம். ஒரு முறை நாங்கள் இருவரும் முடிவு செய்தோம். 'நீங்கள் தயாரிக்கணும். நான் நடிக்கணும்' என்றார் ரஜினி. அப்படியே பேசி வந்தோம்.
40 வருடம் கடந்துவிட்டது. ராஜ்கமல் ஆபீஸைத் திறந்து வைப்பதற்கும் ரஜினிதான் வந்தார். அப்போதும் நாங்கள் இருவரும் சேரும் படம் பற்றி ரஜினியிடம் கேட்டேன். இப்போது இரண்டு படங்களை நாங்கள் செய்கிறோம்.
ஏ.வி.எம். வேப்பமரத்தின் அடியில் அமர்ந்து வளர்ந்தவர்கள், இன்றைக்கு இங்கு வந்திருக்கிறோம். இது யாருடைய கருணை என்பது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் சினிமாவுக்குள் வருவோம் எனத் தெரியும்.

ஆனால், இவ்வளவு பெரியதாக நாங்கள் வருவோம் என நினைக்கவில்லை." என்றவர், "'நான் கமல் படம் செய்கிறேன்' என ரஜினி தூங்காமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். எனக்காக அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். தயாரிப்பாளராக என்னுடைய பெயரைக் குறிப்பிட்டிருக்கலாம்.
ஆனால், வேலைகளை ரஜினியும் மகேந்திரனும்தான் செய்திருக்கிறார்கள். சந்திரஹாசனுடைய இரங்கல் கூட்டத்திற்கு வந்தபோது ரஜினி, 'இனி கமல் என்ன செய்யப் போகிறார்' எனக் கவலைப்பட்டார்.
அப்போது நான் மகேந்திரனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு இன்னொரு சகோதரர் கிடைத்துவிட்டார் எனத் தோன்றியது" என்றவர், "எல்லா பலத்தையும் இப்போது அஸ்வத் மாரிமுத்துவிடம் கொடுத்திருக்கிறோம்.
இது எவ்வளவு பெரிய பொறுப்பு என்பது அவருக்குத் தெரியும். அனிருத்தின் இசையை சினிமாவுக்கு மட்டுமல்ல, இப்போது கால்பந்து போட்டிக்கும் பயன்படுத்துகிறார்கள். அந்தளவிற்கு சர்வதேச அளவிற்கு உயர்ந்துவிட்டார்" எனப் பகிர்ந்து கொண்டார்.
















