புதுச்சேரியில் நாளை பந்த்! ஸ்தம்பிக்கப்போகும் `பிரெஞ்சு சிட்டி’ - தொழிற்சங்கங்கள...
திருமணத்தை அரசியல் கூட்டணியோடு ஒப்பிட்டு பேசுவதா? - வாசகர் வாய்ஸ்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
"அங்கும் இங்கும் பாதை உண்டு
இன்று நீ எந்த பக்கம்...?
ஞாயிறு உண்டு திங்கள் உண்டு
எந்த நாள் உந்தன் நாளோ...?"
'அவர்கள்' படத்துக்காக கவியரசர் ரசிகர்கள் முன்னிலையில் பாலச்சந்தர் அவர்கள் சூழல் சொல்ல மெல்லிசை மன்னர் மெட்டமைக்க எழுதிய பாடல் இது.
சரியான முடிவெடுக்க முடியாதவர்கள், முடிவெடுக்க தெரியாதவர்களுக்கான பாடல்.
தேமுதிகவின் இன்றைய நிலைக்கு மிகப்பொருத்தமான பாடல் இது. பலர் அக்கட்சியைப் பார்த்து கேட்கும் கேள்வி இதுதான். திமுகவா...அதிமுகவா...எது உங்கள் பாதை...? செய்தியாளர்களின் கேள்விக்கு நல்ல முடிவை விரைவில் அறிவிப்பேன். தொண்டர்கள் விரும்பும் கூட்டணி அமைப்பேன். தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார் திருமதி பிரேமலதா.

கூட்டணி விவகாரத்தில் தேமுதிக நிலைப்பாடு சமீபகாலங்களில் அதிகம் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகிறது. அதை அவர்கள் பார்ப்பார்களா... இல்லையா... என்ற சந்தேகமும் வருகிறது. விஜயகாந்த் தனக்கென 8 சதவீத வாக்கு வங்கியை வைத்திருந்தார். 2016 ல் மக்கள் நலக் கூட்டணி அமைத்த போது அது சரிவைக் கண்டது. அவர் உடல் நலம் குன்றிய பிறகு வாக்கு வங்கி இன்னும் சரிவை சந்தித்தது.
திருமதி பிரேமலதா அவர்கள் தற்போது கட்சியை நடத்தி வருகிறார். எதற்காக என்பது அவருக்கே தெரியுமா...? கடலூரில் மாநாடு நடத்தி பெரிய கூட்டத்தை கூட்டினார்.
கூட்டம் அப்படியே ஓட்டாக மாறுமா...? அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. மாநாட்டில் தொண்டர்கள் கருத்துப்படி முடிவு எடுப்பேன் என்றார். எந்தவித அறிவிப்பும் இதுவரையில் இல்லை. 'தேமுதிமுக இடம்பெறும் கூட்டணிதான் வெற்றி பெறும்' -அரசியல்வாதிகள் வழக்கமாக சொல்லும் மிகச் சிறந்த ஜோக்கை இவரும் சொல்லிவிட்டார்.
சமீபத்தில் தேமுதிக என் பிள்ளை, அதை எங்கே கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது ஒரு அம்மாவாக எனக்குத் தெரியும் என்று சொல்லி இருக்கிறார். கூட்டணி என்பதை கல்யாணத்தோடு ஒப்பிட்டு பேசி இருக்கிறார். இதைக் கேட்டதும்..."
"கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே வேடிக்கை நமக்கு அதில் வேறென்ன இருக்கு...டேக் இட் ஈஸி..." - சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் வாலி அவர்கள் எழுதிய பாடல் நினைவுக்கு வந்தது. கல்யாணத்தை கிண்டல் செய்யும் ஒரு ஆணுக்கு ஒரு பெண் அதன் புனிதத்தைசொல்லி பதிலடி கொடுப்பது போல பாடல் அமைந்திருக்கும். இன்று ஒரு பெண்ணே புனிதமான திருமணத்தை அரசியல் கூட்டணியோடு ஒப்பிட்டு பேசி இருப்பது வேதனைக்குரிய விஷயம்.
கூட்டணி என்பது தற்காலிகமானது. அரசியலை புனிதமாக மாற்றுவதற்காக அல்ல, தங்களை தங்கள் கட்சியை வளர்த்துக்கொள்வதற்காக. அப்படிப்பட்ட கூட்டணி விவகாரத்தில் தேமுதிகவின் போக்கு மேலும் மேலும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
"கடவுள் அமைத்து வைத்த மேடை...இணைக்கும் கல்யாண மாலை.. இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று..." - திருமணம் தொடர்பாக கவியரசர் எழுதிய மிகச் சிறந்த பாடல். யார் யார் இல்வாழ்க்கையில் கணவன் மனைவியாக இணையவேண்டும் என்பது என்றோ இறைவனால் தீர்மானிக்கப்பட்டது என்பதை அதில் சொல்லியிருக்கிறார்.

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும் சொல்வார்கள்.
அப்படிப்பட்ட புனிதமான ஒரு பந்தத்தை அரசியலில் அமைக்கப்படும் கூட்டணியோடு எப்படி உதாரணமாக சொல்ல முடியும். வாழ்க்கை கூட்டணி நிரந்தரமானது. அரசியல் கூட்டணி தேர்தல் முடிந்து முடிவுகள் தெரியும் வரையில் மட்டுமே. அதன் பிறகு தொடரலாம்... தொடராமலும் போகலாம்.
அடுத்த தேர்தலில் வேறு கூட்டணி மாறலாம். இதுதான் கடந்த 50 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
'அந்த வானத்தைப் போல மனம் படைத்த மன்னவனே' பாடலில் மிகப்பெரிய மனிதன் ஒருவன் தாலி மூலமாக ஒரு ஏழைப்பெண்ணை திருமணம் செய்து கொள்வது 'விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம்ன்னு காட்டி இருப்பார்கள்.
அந்த உயரமான ஒன்றை..(அதுவும் கட்சியின் நிறுவனர் நடித்த மிகச்சிறந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ) சாதாரண அரசியல் கூட்டணியோடு ஒப்பிட்டு பேசி இருப்பது சரியல்ல.
விஜயகாந்த் கட்சியை எதற்காக தொடங்கினாரோ அதுவே சிதைந்து போகும் அளவுக்கு வேலை செய்துக்கொண்டே இருக்கிறார்கள்.
















