`ஆசிரியையின் ரூ.74 லட்ச சம்பளம்; திரும்ப செலுத்த சொன்ன கல்வித்துறை' - ரத்து செய்...
ஒரு 'தலை' காதல் கதையும், பொருட்செலவில்லாத காதலர் தின கொண்டாட்டமும்!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
ஒருவரின் "தலை' போன நாளினைத்தான் கா''தலை'ப் போற்றும் 'காதலர் தினமாக' நாம் கொண்டாடுகிறோம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
கி.பி.270 ம் ஆண்டில் ரோமாபுரி நாட்டை கிளாடியுஸ் மிமி என்ற மன்னன் ஆண்டு வந்தான்.அவனுக்கு காதல் மீது என்ன வெறுப்போ..வருத்தமோ தெரியவில்லை. ரோமாபுரி நாட்டில் இளைஞர்கள், இளைஞிகள் யாரும் காதலிக்கக் கூடாது, திருமணம் செய்யக் கூடாது என கடுமையான சட்ட திட்டங்கள் விதித்தான்.
ஆனாலும்,ஷாஜகான் திரைப்படத்தில் காதலர்களை சேர்த்து வைக்கும் ஒரு 'விஜய்' மாதிரி அப்போது ரோமாபுரி நாட்டில் "வாலண்டைன்" என்பவர் இருந்தார். அவர் ஒரு பாதிரியார்.
அவர்,காதலைப் புரிந்தவராகவும்,காதலர் இதயங்களை அறிந்தவராகவும் இருந்ததனால் கிளாடியுஸ் மிமி அரசனுக்கு தெரியாமல் காதலர்களுக்கு ரகசியமாக திருமணங்கள் செய்து வைத்தார்.
காதலர்களின் ஆபத்பாந்தவனாகவே வாழ்ந்த அவரின் காதலை,காதலர்களை கொண்டாடும் செயல் கிளாடியுஸ் மிமிக்கு தெரிய வர,காதலைக் கொண்டாடும் வாலண்டைன் தலையை துண்டாடும் ஆணைக்கு கையொப்பம் இட்டார்.

சிறையில் அடைத்த வாலண்டைன்னுக்கும், சிறைக் காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் காதல் அரும்ப,சிறைக் காவலரின் முகம் சுருங்க அஸ்டோரியசை சிறைக் காவலில் வைத்தான்,சிறைக் காவலையே தொழிலாகக் கொண்ட சிறைக் காவலன்.வீட்டுச் சிறையில் இருந்து மீள முடியாமல் அஸ்டோரியஸ் தவித்தாள்,துடித்தாள்.
சிறைக்குள் இருந்தபடி வாலண்டைன் தவித்தார்.பலரின் கண்களில் மண்ணைத் தூவி காதலி அஸ்டோரியசுக்கு காதல் ரசம் சொட்டச் சொட்ட வாலண்டைன் அனுப்பிய வாழ்த்து அட்டைகளே முதல் காதல் வாழ்த்து அட்டைகள் என இன்றும் கருதப்படுகிறது.
காதலர்களை சேர்த்து வைத்து திருமணம் புரிந்தமை, சிறைக் காவலரின் மகள் அஸ்டோரியஸை காதலித்து வாழ்த்து மடல் அனுப்பிய "மகா" குற்றத்திற்காக வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு பிப்ரவரி 14 ல் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.அந்த நாளைதான் ஆயிரக்கணக்கான தலைமுறைகள் கடந்தும் "வாலண்டைன் டே" எனும் "காதலர் தினம்!" உலகமெங்கும் உள்ள காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
காதலர்களிடையே வாழ்த்து அட்டைகளுக்கு அற்புதங்களை நிகழ்த்தும் ஒரு மாய சக்தி எப்போதுமே இருந்திருக்கிறது.

ரசனையான வாசகங்கள்தான் பின்னாளில் கவிதைகளாகிப் போயின. காதலர்கள் காதல் கடிதங்களையும், காதல் கவிதைகளையும்,காதல் குறுஞ்செய்திகளையும், காதல் பரிசுகளையும் இன்றளவும் கொண்டாடவே செய்கிறார்கள்.
என்றாலும் காதல் கடிதங்களும்,காதல் கவிதைகளும் பெரும்பாலான எளிய வாழ்வு கொண்ட காதலர்கள் எளிதாகவும் இனிதாகவும் அதிக பொருட்செலவின்றி,அதீத பொருள்மிக்கதொன்றாய் பரிமாறிக் கொண்டு,காதலர் தினத்தில் அகமும், முகமும் மலர பரவசப்பட்டுப் போகிறார்கள்.
'யெஸ் ஆர் நோ' டைப்பாகிப் போன இன்றைய காதலர்களின் அணுகுமுறைகளில்.
செம்பருத்திப்பூவின் படம் வரைந்து பாகம் குறிப்பது மாதிரி கடினமாகவே இருந்தது அன்றைய காதலர்களின் கொடுமையும்,கடுமையும் தாங்கிய பொழுதுகள்.
கைகள் நடுநடுங்க தானோ அல்லது தனது நண்பன் மூலமோ காதல் கடிதம் தந்து உடன்படாமல் அடி வாங்கி மரணக்கோலம் பூண்டவர்களும் உண்டு. மெல்ல புன்னகைத்து,வெட்கித் தலை சாய்த்து,ஓர விழிப் பார்வையில் காதலி சம்மதம் சொல்ல மணக்கோலம் கொண்டவர்களும் உண்டு.

காதலொரு மாயக்கண்ணாடி,இதில் முகம் பார்க்காத மனிதர்களே இல்லை என சொல்லலாம். அந்தக் கண்ணாடி சிலரை உடைத்திருக்கிறது.சிலரை படைத்திருக்கிறது. அது ஹீரோவையும்,ஜீரோவையும் உருவாக்கி இருக்கிறது. அந்த மாயக்கண்ணாடியின் ரசம் மங்காததுதான் காலம் தந்த எக்காலத்துக்குமான காதலின் வரம்! சூரியனைச் சுற்றியபடி பூமி இருந்தாலும் காதலைச் சுற்றியபடியே எனது பெரும்பாலான கவிதைகள் இருந்து விடுவதுண்டு.
அப்படியான சில காதல் கவிதைகளைத்தான் உங்களின் கண்களின் மூலம் இதயத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறேன்.
வாருங்கள் வாசகர்களே..
*கவிதைகளை வாசிப்போம்!*
*காதலை நேசிப்போம்!*
(1)
நீ மேடையில்
பாடிய பிறகுதான்
புரிந்தது...
மயில்களில்
குயில்களும் உண்டென!
(2)
மழை பிடிக்கும்
என்றாய்.
குடைகளையே
பிடிப்பதில்லை
எனக்கு!
(3)
நீ குளத்தில்
இறங்கினாய்.
ஓடிக் கொண்டிருந்த.
மீன்களெல்லாம்
ஆடதொடங்கின.
(4)
கிழிந்த
அட்டைகளும்
வாழ்த்தட்டைகளாகும்...
நீ தரும்போது!
.
(5)
யுத்தத்தில்
வீழ்ந்தவனை விட
.
முத்தத்தில்
வீழ்ந்தவன் மேல்!
(6)
கொளுத்தும்
வெயிலுக்கு
இளநீர் நல்லதாம்.
.
நீ தொட்ட.
தண்ணீர் கொடு!..
(7)
மூங்கில் காட்டில்
நீ தொட்ட
மூங்கில்களெல்லாம்
புல்லாங்குழல்களான
அதிசயம் பாரேன்!
(8)
தேநீர்
தந்தாய்.
அது
தேனீர்
ஆனது!
(9)
நீ அனுப்புகிற
கடிதங்களை
பிரிக்கிற
போதெல்லாம்
நிரம்ப யோசிக்கிறேன்.
நீ ஒட்ட..
நான் பிரிப்பதா?
(10)
மூடிய
உதடுகள்
பேசிக் கொண்டன..
மௌனத்தைப் பற்றி!




















