தவெக அமைச்சரவையில் இடம்பெறும் திருமாவளவன்? திருச்சி கிழக்கில் இடைத் தேர்தலில் போ...
`திருமணம் செய்து வைப்பதாகக்கூறி வரவழைத்து கொன்றோம்' மகளின் கண்முன்னே காதலனை கொலை செய்த தந்தை
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகிலுள்ள கரடிகுளத்தைச் சேர்ந்தவர் சஞ்சய். சென்னையில் சிற்பக்கலைஞராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் பக்கது ஊரான கெச்சிலாபுரத்தைச் சேர்ந்த உறவினர் கனகலெட்சுமியும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த சஞ்சய், கடந்த 17-ம் தேதி மீண்டும் சென்னைக்குச் செல்ல பேருந்திற்காக கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவருடன் பேச வந்த காதலியின் தந்தை, சித்தப்பா மற்றும் உறவினர்களுக்கும் அவருக்கும் தகராறு ஏற்படவே சஞ்சய் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இக்கொலைச் சம்பவத்தைப் பார்த்த பேருந்திற்காக காத்திருந்த சக பயணிகள் அலறியடித்து ஓடினர். இதனையடுத்து கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட காதலியின் தந்தை குமார், சித்தப்பா மாரிமுத்து மற்றும் உறவினர் சங்கரநாராயணன் ஆகியோரை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
கனகலெட்சுமியின் தந்தை குமார் போலீஸாரின் விசாரணையில், “எனது மகள் கனகலெட்சுமியும் உறவுக்கார பையனான சஞ்சய்யும் காதலித்து வந்தனர். அவர் சென்னையில் சிற்பக்கலைஞராக வேலை பார்த்து வந்தார்.
சஞ்சய்க்கு மது, கஞ்சா போன்ற பழக்கங்கள் இருந்ததால், அவனுக்கு மகளை திருமணம் செய்து கொடுக்க விருப்பம் இல்லை. மகளிடம் கூறியும் கேட்காமல் அவனை திருமணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். இருவரும் தொடர்ந்து போனில் பேசி வந்தனர். இந்த நிலையில் கோவில்பட்டியில் உள்ள எனது தம்பி மாரிமுத்துவின் வீட்டில் சில மாதம் தங்கியிருக்கும்படி அனுப்பி வைத்தோம். ஆனால், சஞ்சய்யைத்தான் திருமணம் செய்வேன் என்பதில் உறுதியாக இருந்தாள்.
தம்பி வீட்டிற்குச் சென்றும் போனில் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில்தான், கடந்த வாரம் விடுமுறையில் வந்த சஞ்சய் கடந்த 17-ம் தேதி ஊருக்கு செல்வதாக மகளிடம் கூறியுள்ளார். ”சஞ்சய் சென்னைக்குப் போக வேண்டாம், உனக்கும் அவனுக்கும் திருமணம் செய்து வைக்கிறேன். அவனிடம் திருமணம் குறித்துப் பேச வேண்டும். அவனை கோவில்பட்டி பேருந்து நிலையத்திற்கு வரச்சொல்” என என் மகளிடம் சொன்னேன்.

அவளும் அதை நம்பி ஊருக்குச் செல்ல பேருந்திற்காகக் காத்திருந்தவனை நாங்கள் வரும் வரை காத்திருக்கும்படி சொன்னாள். அவனும் சரி எனச் சொன்னான். ஆட்டோவில் என் மகளுடன் பேருந்து நிலையத்திற்குச் சென்றோம். அங்கு காத்திருந்த சஞ்சய்யை தனியாக அழைத்துச் சென்றோம்.
“தம்பி.. இனிமேல் என் மகளிடம் பேசுவதை நிறுத்திக்கொள். இது கடைசி எச்சரிக்கை” என சொன்னோம். ஆனால், அவன் அதெல்லாம் நிறுத்த முடியாது எனச் சொன்னதும் எங்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனே கத்தியால் கழுத்து, கை, முதுகு ஆகிய பகுதிகளில் குத்தினோம்” என விசாரணையின் போது கூறி போலீஸாரையே அதிர வைத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெறு வருகிறது. !

















