"தெலுங்கு மக்கள் என்னை தமிழ் பொண்ணுன்னு தான் நினைச்சுக்கிட்டு இருக்காங்க, ஆனா..!...
திருவள்ளூர்: ஜாமீனில் வந்தவர் வெட்டிக் கொலை - பட்டப்பகலில் நடந்த கொடூரம்!
திருவள்ளூர் அருகே சிட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி என்கிற ரூபன் (33). இவர், குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்குச் சென்றவர். தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார். அதனால் வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்திட பைக்கில் வெங்கல் காவல் நிலையத்துக்குச் சென்றார். பின்னர், அங்கு கையெழுத்திட்டு விட்டு தன்னுடைய நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் மாரி பைக்கில் தாமரைப்பாக்கம் கூட்டு ரோடு பகுதியில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது மாரியின் பைக் மீது அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று மோதியது. இதில் மாரியும் அவரின் நண்பர் வெங்கடேசும் பைக்கிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

இந்தச் சமயத்தில் காரிலிருந்து இறங்கிய ஒரு கும்பல், மாரியை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி சாய்த்தது. ரத்த வெள்ளத்தில் மிதந்த மாரி, துடி துடித்து உயிரிழந்தார். பின்னர் காரில் வந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றது. அப்போது ஒரு வீட்டின் சுவரில் கார் இடித்து மோதி நின்றது. அதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காரிலிருந்தவர்களை சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். இதில் இரண்டு பேர் தப்பி ஓட மூன்று பேர் பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டனர். பின்னர் அவர்களை வெங்கல் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
இதற்கிடையில் மாரி கொலை குறித்து தகவல் அறிந்த வெங்கல் போலீஸார், அவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், கொலை வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்தனர். மாரியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மூன்று பேரை பொதுமக்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததால் அவர்களிடம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் பழிக்குப்பழியாக கொலை நடந்தது தெரியவந்திருக்கிறது.
பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




















