Leader: "மீம்ஸ்களைப் பார்க்க நேரம் ஒதுக்க விரும்பவில்லை!" - லெஜெண்ட் சரவணன்
துணைவேந்தர் நியமன வழக்கு; உயர் நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதலமைச்சருக்கு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டத்தை நிறைவேற்றி இருந்தது.
இந்தச் சட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், இந்த தடையை நீக்கி தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தரை மாநில முதல்வரே நியமிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்த தமிழக அரசு, அதனை ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுப்பியிருந்தது.
இந்தச் சட்டத்திருத்தம் உட்பட பல்வேறு மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்தன. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, 10 மசோதாக்களுக்கு அனுமதி வழங்கியது. அந்த 10 மசோதாக்களில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை மாநில முதல்வரே நியமிக்கலாம் என்ற சட்டத்திருத்தமும் அடங்கும்.
இதனைத் தொடர்ந்து மாநில முதல்வரே துணைவேந்தர்களை நியமிப்பதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் இந்தச் சட்டத்திருத்தத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முழுமையாக விசாரிக்காமல் அவசரக்கோலத்தில் இடைக்கால தடை விதித்துள்ளதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று ( பிப்.4) தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்கி இருக்கிறது.
தடையை நீக்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர். ஆறு வாரங்களில் வழக்கை விசாரித்து முடிக்கவும், அதுவரை புதிய துணைவேந்தர்களை நியமிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.














