புதுச்சேரி: ஆளி விதை களி, கேழ்வரகு லாமிங்டன் கேக்… ருசியில் மிரட்டி முந்திய மூன்...
தென்காசி: நகை, பணம் கொள்ளை; மீண்டும் அதே வீட்டின் முன்பு வீசிச் சென்ற ’பர்தா கொள்ளையன்!’
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள பாம்புக்கோயில் சந்தையைச் சேர்ந்தவர் மாரியப்பன். அப்பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார். கடந்த 6-ம் தேதி காலை சுமார் 10 மணியளவில் தன் மனைவி பார்வதியுடன் தன் உறவினர் வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நெல்லை மாவட்டம், வீரவநல்லூருக்குச் சென்றுள்ளார். வீட்டில் மாரியப்பனின் தாயார் 80 வயதான மாரியம்மாள் மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்டு சுமார் 11 மணியளவில் பர்தா உடை அணிந்த மர்மநபர் ஒருவர், மாரியம்மாளை தாக்கிவிட்டு பீரோவின் மேலே வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து திறந்து பீரோவில் உள்ள 26 சவரன் தங்கநகை மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

கொள்ளையன் தாக்கியதில் மயக்கமடைந்த மாரியம்மாள் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து வெளியே வந்து கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர், மாரியப்பனுக்கு தகவல் கூறினர். மாரியப்பன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் மாரியப்பன் புகார் அளித்தார்.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், பீரோ இருக்கும் இடம், பீரோவின் சாவி வைக்கும் இடம் தெரிந்த நபரே பீரோவை திறந்து நகை, பணத்தை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். நகை, பணத்தை தவிர வேறெந்த பொருளும் திருடுபோகவில்லை எனவே, மாரியப்பனுக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமான நபர் யாரோ ஒருவர்தான் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க முடியும் என போலீஸார் சந்தேகித்தனர். அவரது பக்கத்து வீடுகளைச் சேர்ந்த நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மாரிப்பனின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த டீக்கடைக்காரர், மாரியப்பனின் வீட்டின் முன்பு ஒரு சாக்குமூட்டை கிடப்பதைப் பார்த்து அவருக்கு தகவல் கூறினார்.

அந்த சாக்குமூட்டையை மாரியப்பன் பிரித்துப் பார்த்தபோது அதில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், பணம் அப்படியே இருந்துள்ளது. இருப்பினும், சி.சி.டி.வி காட்சிப்பதிவுகள் மூலம் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற அந்த பர்தா கொள்ளையன் யார்? நகைகள், பணத்தை மீண்டும் மாரியப்பனின் வீட்டின் முன்பு சாக்கு மூட்டையில் போட்டுச் சென்றது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



















