`எடப்பாடி பழனிசாமிக்கு அட்வைஸ்; விஜய் மீது மறைமுக விமர்சனம்' - உதயநிதி ஸ்பீச் ஹை...
தேமுதிக: ``2026 தேர்தலுக்குத் தயார், 234 தொகுதியும் எங்கள் இலக்கு" - பிரேமலதா கொடுத்த அப்டேட்
தேமுதிகவின் இளைஞர் அணிச் செயலாளரான விஜய பிரபாகரனின் 34-வது பிறந்தநாள் இன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. விஜய பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு கட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதற்கிடையில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``இன்றைக்கு விஜய பிரபாகருடைய பிறந்த நாள். விமானம் ரத்து போன்ற சிக்கலால் விஜய பிரபாகரன் இன்னும் சென்னை வந்து சேரமுடியவில்லை.

மும்பையில் அதிகாலை 4 மணியிலிருந்து விமான நிலையத்தில் காத்திருக்கிறார். இன்று மாலைக்குள் சென்னை வந்துவிடுவார். தம்பியை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.
இந்த மாதம் 28-ம் தேதி கேப்டனுடைய குரு பூஜை நிகழ்ச்சி இருக்கிறது. தமிழ்நாடு முழுவதிலிருந்தும், நிர்வாகிகள் தொண்டர்கள் வருகிறார்கள். அதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.
ஏற்கெனவே மூன்று கட்டம் 'உள்ளம் தேடி இல்லம் நாடி' மற்றும் 'மக்களைத் தேடி மக்கள் தலைவர்' ரத யாத்திரையை முடித்திருக்கிறோம்.
ஜனவரி 9 கடலூரில் நடக்கின்ற மாநாடுக்கும் தயாராகி வருகிறோம். அந்த மாநாடுதான் இப்போதைக்கு எங்களுடைய அடுத்த இலக்கு. அந்த மாநாட்டில் ஒரு நல்ல ஒரு அறிவிப்பு நிச்சயமாக வழங்குவோம்.
கேப்டன் இருந்த காலத்திலிருந்து தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகளும், மத்தியில் இருக்கும் கட்சிகளும் தோழமை கட்சிகள்தான். அந்த வகையில எல்லாருமே தோழமையோடு, நட்புணர்வோடு பழகிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இன்னும் கூட்டணி குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. உரிய நேரத்தில் நல்ல ஒரு தகவலை அறிவிப்போம்.

எங்கள் கழக நிர்வாகிகள் அனைவரும் களத்தில் இருக்கிறார்கள். ஒருவருடமாக இந்தத் தேர்தலுக்காக தயாராகிக்கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் 68000 பூத்திலும் பூத் கமிட்டி அமைத்திருக்கிறோம்.
எனவே, தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை மட்டும் இப்போது உங்களிடம் உறுதியாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 234 தொகுதிகளும் எங்கள் இலக்குதான்.
காங்கிரஸ் - தாவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்றால் அது குறித்து அவர்களிடம்தான் பேச வேண்டும். எங்களுக்கு எந்தக் கருத்தும் கிடையாது. எல்லா கட்சியும் எங்களுக்கு நட்புதான் என்பதால், உரிய நேரத்தில் தெளிவாக பதில் சொல்லவோம்." என்றார்.











