நெல்லை: 4 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் - மதபோதகருக்கு மரண தண்டனை!
தொகுதி மறுவரையறை : ``தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம் தான் காங்கிரஸின் நிலைபாடு.!" - ப.சிதம்பரம்
கடந்த 2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க பா.ஜ.க அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த மார்ச் மாதம் தொகுதி மறுவரையறை மசோதாவை பா.ஜ.க அரசு கொண்டு வந்த போது, நாடாளுமன்றத்தில் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில், பெரும்பான்மை ஆதரவு கிடைக்காததால் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தன் பலத்தைப் பெருக்கிக்கொண்ட பா.ஜ.க அரசு தற்போது மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவர தீவிரமாக செயலாற்றி வருகிறது எனக் கூறப்படுகிறது.

இதுசம்பந்தமாக தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் தனி தீர்மானமும் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானத்தின் போது, ``தொகுதி எண்ணிக்கைகளை மாற்றாமல் அப்படியே 543 என்ற எண்ணிக்கையிலேயே தொடர வேண்டும். இதுவே தமிழகத்தின் ஒருமித்த குரல்" எனப் பேசியிருந்தார். தி.மு.க-வும் முதல்வர் விஜய்யின் தீர்மானத்தை ஆதரித்தது.
இதற்கிடையில், தென் மண்டல நிர்வாகக்குழு கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலைமையில் கோவளத்தில் நேற்று நடந்தது. தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், ``மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படக் கூடாது. தொகுதி மறுவரையறையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ சதவீதம் குறையாது என்பதற்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் கொடுக்கப்பட வேண்டும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

தொகுதி மறுவறையறை நடத்தக்கூடாது என தவெக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கும் விதமாக, 'தென்மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பது போன்ற கோரிக்கையை முதல்வர் விஜய் முன்வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தன் எக்ஸ் பக்கத்தில், ``மக்களவைத் தொகுதி மறுவரையைப் பொருத்துத் தமிழ்நாடு சட்டசபையின் தீர்மானமும் காங்கிரஸ் செயற்குழுவின் தீர்மானமும் ஒரே நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன. மக்களவையின் எண்ணிக்கை 543, தமிழ்நாட்டின் தொகுதிகள் 39 என்பவற்றில் எந்த மாற்றமும் கூடாது. இன்றைய எண்களை 25 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்பது தான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டை தமிழ்நாட்டின் ஆளும் கட்சியும் (தவெக) பிரதான எதிர்க்கட்சியும் (திமுக) ஆதரிக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

















