`எடப்பாடிதான் எங்கள் தலைவர்; மாற்றுக் கருத்து இல்லை’ - வேலுமணி அணியில் இருந்து த...
தொழிலதிபர் அதானி மீதான வழக்கை கைவிட அமெரிக்கா முடிவு!
தொழிலதிபர் கெளதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் மீது அமெரிக்காவில் லஞ்சப் புகார் எழுந்தது. இரண்டு பேரும் இந்தியாவில் சோலார் மின் திட்டங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டி இருந்தனர். இதனை மறைத்து அமெரிக்கா நிறுவனங்களிடம் அத்திட்டங்களுக்காக நிதி திரட்டியதாகவும் அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டி இருந்தது.
அதோடு அமெரிக்க பங்கு பரிவர்த்தனை கமிஷனும் அதானி மீது குற்றம் சாட்டி இருந்தது. 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அரசு தலைமை வழக்கறிஞர் கோர்ட்டில் இது தொடர்பாக குற்றம் சாட்டி இருந்தார்.
எனவே அவர்கள் கோர்ட்டில் ஆஜராக அமெரிக்க கோர்ட் சம்மன் அனுப்பியது. ஆனால் அதானியோ அல்லது அவரது உறவினர் சாகரோ கோர்டில் ஆஜராகவில்லை. தற்போது திடீர் திருப்பமாக அமெரிக்க நீதித்துறை அதானி மீதான குற்றச்சாட்டுக்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளது.

இந்த வாரத்தில் அதானி மீதான புகார்களை கைவிடுவது தொடர்பாக அமெரிக்க நீதித்துறை அறிவிக்க இருக்கிறது. இதே போன்று அமெரிக்க பங்கு பரிவர்த்தனை கமிஷனும் அதானி மற்றும் சாகர் மீதான குற்றச்சாட்டுக்களை கைவிடுவது தொடர்பாக தீர்மானம் கொண்டு வர இருக்கிறது.
அதேசமயம் குற்றச்சாட்டுக்களை கைவிட்டாலும் அபராத தொகை விதிக்கப்படலாம் என்று பங்கு பரிவர்த்தனை கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் குற்றச்சாட்டில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று ஆரம்பத்தில் இருந்தே அதானி தெரிவித்து வருகிறார்.
அதோடு அமெரிக்க கோர்ட் அனுப்பிய சம்மனை ஏற்று அங்குள்ள கோர்ட்டிலும் ஆஜராகவில்லை. கடைசியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் அதானியின் வழக்கறிஞர் இப்புகார்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். அதானி மீதான வழக்கை அமெரிக்கா திரும்ப பெறுவது இருநாடுகளிடையேயான உறவில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இப்பிரச்சனையால் அதானி அமெரிக்கா செல்வதை தவிர்த்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



















