கல்வி, வேலைவாய்ப்பு : சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமத்திற்கு மலேசிய துணைத் தூதரக...
"நான் திருமணம் செய்த பெண்கள் மதம் மாறவில்லை" - பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு ஆமீர் கான் பதிலடி
பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சமீபத்தில் தன்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த கெளரி என்ற பெங்களூரு பெண்ணை குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.
இத்திருமணம் குறித்து மகாராஷ்டிரா பா.ஜ.க அமைச்சர் நிதேஷ் ரானே அளித்திருந்த பேட்டியில், ஆமீர் கான் காதல் ஜிஹாத்தில் ஈடுபடுவதாகவும், காதல் ஜிஹாத்தின் தூதர் என்றும் பேசி சர்ச்சையைக் கிளப்பியிருந்தார்.
தற்போது இந்தச் சர்ச்சைக்கு ஆமீர் கான் பதிலளித்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், ''எனது குடும்பம் எப்போதும் மதங்களுக்கு இடையேயான உறவுகளை ஏற்றுக்கொள்கிறது. எனது திருமணங்கள் எதுவும் மத மாற்றத்தில் ஈடுபடவில்லை.

எனது குடும்ப உறுப்பினர்கள் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களை திருமணம் செய்து கொண்டுள்ளனர். இத்திருமணத்தில் எந்த மத மாற்றமும் இருந்ததில்லை. உண்மை என்னவென்றால், எங்களுடைய குடும்பம் மிகவும் வித்தியாசமானது. எனது சகோதரிகள் இருவரும் இந்துக்களை திருமணம் செய்தவர்கள்.
எனது மகளும் இந்துவை மணந்துள்ளார். எனது உறவினர் மன்சூர் ஒரு கிறிஸ்தவரை மணந்துள்ளார். நான் சிவில் திருமணம் செய்து கொண்டதால் கௌரி, கிரண் அல்லது ரீனா மூவரும் தங்கள் மதத்தை மாற்றவில்லை. கௌரி இந்து இல்லை, அவர் பிறப்பால் கிறிஸ்தவர். ஆனால் கிறிஸ்தவ மதத்தை அவர் பின்பற்றுவதும் இல்லை'' என்று குறிப்பிட்டார்.
ஆமீர் முதலில் ரீனா தத்தாவை 1986ம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால் 2002 விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் 2005ம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் கிரண் ராவைத் திருமணம் செய்து 2021ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்தனர்.
கடந்த ஆண்டு கெளரியைத் தனது துணை என்று ஆமீர் கான் அறிவித்து தற்போது திருமணம் செய்து கொண்டார். ஆனால் மூன்று பேருமே இஸ்லாம் மதத்திற்கு மாறி பெயரை மாற்றிக்கொள்ளவில்லை. அதேசமயம் விவாகரத்து செய்து கொண்ட இரு பெண்களும் ஆமீர் கானுடன் ஒரே கட்டிடத்தில் வேறு வேறு வீட்டில் வசித்து வருகின்றனர்.




















