செய்திகள் :

நூறு சாமி விமர்சனம்: அம்மா, சாமியல்ல மனுஷி! நெகிழ வைக்கிறதா மறுமணம் குறித்த எமோஷனல் டிராமா?

post image

கள்ளக்குறிச்சியில் வசித்து வரும் செல்வி (ஸ்வாசிகா), கணவன் இறந்த பிறகு தனது இரு மகன்களையும் அக்கறையாக வளர்த்து ஆளாக்குகிறார். பாஸ்கர் (அஜய் திஷான்) மற்றும் விவேக் (சக்தி) வளர்ந்து விவரம் அறிந்த வயதில், தனக்கு மறுமணம் செய்ய விருப்பம் என்று தெரிவிக்கிறார் செல்வி. ஆனால், முதலில் அம்மாவின் மனவோட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் கடிந்துவிடுகிறார் மூத்த மகன் பாஸ்கர்.

Nooru Saami Review | நூறு சாமி விமர்சனம்
Nooru Saami Review | நூறு சாமி விமர்சனம்

சில வருடங்களுக்குப் பிறகு அம்மாவின் நிலைமை பாஸ்கருக்குப் புரிய வருகிறது. அதனையடுத்து அம்மாவுக்கு மறுமணம் செய்து வைப்பதற்கான வேலைகளிலும் அவர் இறங்குகிறார். ஆனால், இந்த முறை மறுமணம் பற்றிய முடிவை மறுக்கிறார் செல்வி. இதன் பிறகு நடந்தது என்ன, செல்வி மறுமணம் செய்துகொண்டாரா, அதனால் செல்வி சந்திக்கும் இன்னல்கள் என்ன என்பதைப் பேசுகிறது இயக்குநர் சசி இயக்கியிருக்கும் இந்த 'நூறு சாமி'.

அப்பாவித்தனம் நிரம்பிய உடல்மொழி, எப்போதும் வியர்வை படிந்த முகம், ஓய்வின்றி மகன்களுக்காக அலைந்து திரியும் குணம் எனப் படத்தை நகர்த்திக் கூட்டிச் செல்கிறார் ஸ்வாசிகா. அதில் தயக்கம், நடுக்கம், ஏக்கம், வெளிக்காட்டிக்கொள்ளாத ஆசை எனப் பல உணர்வுகளில் பயணித்திருப்பவர், நடிப்பில் பெரும் விளைச்சலையும் தந்திருக்கிறார். கண்டிப்பு மற்றும் அக்கறையுடன் மகன்களுக்காகவும், மகன்களைச் சுற்றியும் யோசிக்கும் இடங்களில் கலங்கவும் வைக்கிறார். ஆனால், அவரின் டப்பிங்கிற்கு கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மூத்த மகனாக அஜய் திஷான் பொறுப்பும் தெளிவும் கொண்டவராக வருகிறார்.

Nooru Saami Review | நூறு சாமி விமர்சனம்
Nooru Saami Review | நூறு சாமி விமர்சனம்

இளைய மகனாக சக்தி துறுதுறு விளையாட்டுத்தனம் கொண்டவராக வந்து போகிறார். இவரும், நடிப்பில் சில இடங்களில் ஓகே சொல்ல வைத்தாலும், பல இடங்களில் செயற்கைத்தனம் படிந்த பக்கங்களையே படித்துப் போகிறார்கள். சிறியதொரு கதாபாத்திரத்தில் சர்ப்ரைஸ் விஜய் ஆண்டனி! தனது வழக்கமான பாணியுடன் சில அப்பாவித்தனமான முகபாவனைகளையும் காட்டிருக்கிறார். இவர்களைத் தாண்டி, காவ்யா அனில், பாடினி குமார், பாலாஜி சக்திவேல், கருணாஸ், பகவதி பெருமாள், ஜென்சன், தாமரைச்செல்வி, ஆகியோர் அவரவர் பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.

நான்கு சுவருக்குள் பிடிபட்டிருக்கும் செல்வியின் மனப் போராட்டங்களைத் திரைச் சட்டகத்திற்குள் அடக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தர்ஷன் கிர்லோஷ். செல்வியின் 17 வருட வாழ்க்கையைப் பதிவு செய்யும் கதைக்கு, தொய்வை ஏற்படுத்தாத வகையில் "ஹை ஸ்பீடு" கத்திரி போட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஹரிஷ் யுவராஜ்.

Nooru Saami Review | நூறு சாமி விமர்சனம்
Nooru Saami Review | நூறு சாமி விமர்சனம்

இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் இசையில் வந்திருக்கும் பாடல்களில் 'அம்மா அம்மாதான்', 'மாயக் கனவோ' பாடல்களில் கரும்பு போலத் தித்திப்பு! பின்னணி இசையிலும் தேர்ந்த 'கீ'களை அழுத்தி நல்ல டிரீட்மெண்ட் தந்திருக்கிறார். வெல்கம் டு கோலிவுட் பாலாஜி ஸ்ரீராம்!

கள்ளக்குறிச்சி அருகே நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர். கணவனின் மறைவுக்குப் பிறகு தனது இரு மகன்களைக் கண்டிப்புடனும், பொறுப்பாகவும் வளர்க்கும் செல்வியிடமிருந்து படம் விரியத் தொடங்குகிறது. கல்வியே அவர்களின் முன்னேற்றத்திற்கு ஒரே வழி என்று உணரும் செல்வி, அவர்களைப் படிக்க வைக்க ஓய்வு பார்க்காமல் கடினமாக உழைக்கிறார். ஸ்வாசிகாவின் அழுத்தமான நடிப்பும், பாலாஜி ஸ்ரீராமின் 'அம்மா அம்மாதான்' பாடலும், இந்த மாண்டேஜ் காட்சிகளைத் தாக்கம் மிகுந்ததாக மாற்றியிருக்கின்றன.

Nooru Saami Review | நூறு சாமி விமர்சனம்
Nooru Saami Review | நூறு சாமி விமர்சனம்

கணவனை இழந்து தனியாக வாழும் பெண்களிடம் ஆதிக்க எண்ணத்துடன் ஆண்கள் செலுத்தும் அழுத்தங்கள், அப்படியான விஷயங்கள் அந்தப் பெண்ணின் வாழ்க்கையை எத்தனை வலி மிகுந்ததாக மாற்றுகின்றன என்பதையும் நேர்த்தியான காட்சிகளின் வழி உணர்த்தியிருக்கிறார் இயக்குநர் சசி. மறுமணம் செய்துகொள்ள நினைக்கும் பெண்கள் மீது ஆண்கள் வைக்கும் எதிர்மறைப் பார்வைகள், அதன் மூலம் அழுத்தங்களைத் திணித்து இந்தச் சமூகம் விதிக்கும் நிபந்தனைகள் போன்றவற்றையும் இந்தச் சினிமா காட்சிப்படுத்துகிறது. பெண்களை ஒடுக்க நினைக்கும் ஆணாதிக்கச் சிந்தனைகளுக்குப் பின்னிருக்கும் சாதியக் கட்டமைப்பு, பெண்களின் விருப்பத்தைக் கேளாமல், அதற்குள் குடும்ப கௌரவம் போன்றவற்றைத் திணிப்பது உள்ளிட்ட பல லேயர்களையும் பேசுகிறது திரைக்கதை.

எலிக்கூண்டைப் பிடித்திருக்கும் அம்மா, நிஜமாகவே அந்த எலியைப் போலக் கூண்டில் சிக்குண்டிருக்கிறார் என்பதை வசனங்களால் விளக்கிய இடம், தனிமையில் செல்வி மின்விசிறியுடன் நிகழ்த்தும் உரையாடல்கள், "என் புருஷனைக் கொன்னுருந்தாகூட கொஞ்ச வருஷம்தான் ஜெயிலுக்குப் போயிருப்பேன். ஆனா, அவர் இறந்தது என் ஆயுளுக்கான சிறை" என செல்வி உதிர்க்கும் சொற்கள் வலி மிகுந்தவை. அதேபோல அம்மாவுக்கு உண்மையை உணர்த்த பாஸ்கர் பேசும் வசனங்களும் ஆழம் மிக்கவை. வெல்டன் எழுத்தாளர் சசி!

Nooru Saami Review | நூறு சாமி விமர்சனம்
Nooru Saami Review | நூறு சாமி விமர்சனம்

ஆனால், சில இடங்களில் காமெடி டிரீட்மெண்ட்டைக் கையாண்ட விதம் இந்த 'நூறு சாமி'யின் பலத்தை இழக்கச் செய்திருக்கிறது. படத்தின் முக்கியமான எமோஷனல் காட்சிகள் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு இடையூறாகவும் மாறியிருக்கின்றன இந்தக் காமெடி காட்சிகள். செல்வியின் மறுமணம் பற்றி பாஸ்கர் மற்றும் விவேக் கருத்தைப் பரிமாறிக்கொள்ளும் காட்சிகள் உள்ளிட்ட சில இடங்கள் ஸ்டேஜ் செய்யப்பட்ட விதம், டிராமடிக் உணர்வையே ஏற்படுத்துகிறது. அதோடு, யூடியூபில் மூழ்கியிருக்கும் குடும்பம், அவர்களால் ஏற்படும் விஷயங்கள் ஆகியவற்றில் சுவாரஸ்ய டச் இல்லாததால் அலுப்பை மட்டுமே முறிக்க வைக்கிறது. அதேபோல யார் பார்வையிலிருந்து கதை சொல்லப்படுகிறது என்பதையும், முன்னுக்குப் பின்னாக நகரும் காலகட்ட குழப்பங்களையும் சற்றே களைந்திருக்கலாம்.

மறுமணம் செய்துகொள்ள நினைக்கும் பெண்ணின் கதையை, அவர் பக்கமிருந்து சொல்லும் இந்த 'நூறு சாமி'யை அதற்காகவே பூஜிக்கலாம்.

OM: `உண்மை சம்பவங்கள்... தனுஷ் கேரக்டர் பெயர் அண்ணாமலை?' - ராஜ்குமார் பெரியசாமி கூறியதென்ன?

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், சாய் பல்லவி, மம்மூட்டி, ஸ்ரீலீலா நடிப்பில் வெளியாக உள்ள படம் 'ஓம்'. சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு விழா நேற்று ... மேலும் பார்க்க

அரசன்: மிரட்டலான மூன்றாவது கெட்டப்; வெற்றிமாறன் குட்புக்கில் இடம்பிடித்த சிலம்பரசன் - Arasan அப்டேட்

உற்சாகத்தில் இருக்கிறார் சிலம்பரசன். தயாரிப்பாளர் தாணு, வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்துள்ள 'அரசன்' படப்பிடிப்பு சென்னையில் சீறிப்பாய்ந்து போய்க் கொண்டிருக்கிறது. சிலம்பரசன்வடசென்னையை மையமாக வைத்து 'அரச... மேலும் பார்க்க

Samantha: "சமந்தா ஒரு பெண் என்பதைத் தாண்டி ஒரு போராளி!" - நடிகை கெளதமி

சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்ஷன் படமான 'மா இண்டி பங்காரம்' ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். கடைசியாக சமந்தா நடிப்பில் 'க... மேலும் பார்க்க

`விஜய் சார், இதைவிட பெரிய ஏதோ ஒன்றிற்காகவே உருவாக்கப்பட்டவர் என்று...' - முதல்வரைச் சந்தித்த சமந்தா

நடிகை சமந்தா முதல்வர் விஜய்யை இன்று (ஜூன். 17) நேரில் சந்தித்திருக்கிறார். இதனை நெகிழ்ச்சியாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். புகைப்படத்துடன் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "இன்... மேலும் பார்க்க

Engal Thangam: "தமிழில் நிறைய நல்ல படங்கள் பண்ணனும்னு பசியோடு இருக்கேன்!" - சென்னையில் சமந்தா

சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்ஷன் படமான 'மா இண்டி பங்காரம்' ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். கடைசியாக சமந்தா நடிப்பில் 'க... மேலும் பார்க்க