"அப்பா, என்னைக் காப்பாத்துங்க; இவங்க என்ன கொன்றுவாங்க" - குழந்தை பெற்ற பெண் மருத...
நெல்லை: இளைஞர் தலை துண்டித்துக் கொலை; விசாரணையில் பகீர்; போலீஸ் குவிப்பால் பதற்றம்; நடந்தது என்ன?
நெல்லை, மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான இவர், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு விஜயலெட்சுமி என்ற மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை ஊரில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த பாஸ்கர், ஆற்றில் குளிக்கச் செல்வதாகக் கூறிவிட்டு தச்சநல்லூர் பைபாஸ் சாலை நோக்கி தனது பைக்கில் சென்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 இளைஞர்கள் பாஸ்கரை வழிமறித்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தலையைத் துண்டித்துள்ளனர். பின்னர், அவரது தலையை எடுத்துக் கொண்டு 150 மீட்டர் தொலைவில் பாஸ்கர் வீட்டுக்குச் செல்லும் வழியில் உள்ள வாழவந்த அம்மன் கோயில் சந்திப்பில் வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தச்சநல்லூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்ட பாஸ்கருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் மின் கம்பங்களில் சாதிய அடையாளமான வர்ணங்கள் தீட்டப்பட்டது தொடர்பாகவும், அது தொடர்பாக பாஸ்கர் போலீஸாருக்கு தகவல் கூறியதால் அழிக்கப்பட்டது தொடர்பாகவும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது தெரிய வந்தது.
இதற்கிடையில் இக்கொலைச் சம்பவம் தொடர்பாக மணிகண்டன் மற்றும் பொன்ராஜ் ஆகிய இரண்டு பேர் அரிவாளுடன் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.

இதனையடுத்து மணிமூர்த்தீஸ்வரம், கட்டுடையார் குடியிருப்புப் பகுதிகளில் பதற்றம் நிலவியதால் பாதுகாப்பிற்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம், “மணிமூர்த்தீஸ்வரம் மற்றும் கட்டுரையார் குடியிருப்புப் பகுதிகளில் அடிதடி உள்ளிட்ட அசம்பாவிதம் நடந்தால் போலீஸுக்கு தகவல் கூறும் இன்பார்மராக பாஸ்கர் இருந்து வந்தாராம்.
முன்விரோதம் காரணமாக பாஸ்கர் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை வெட்டிக் கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதுதொடர்பான வழக்கு, நெல்லை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும் கட்டுரையார் குடியிருப்பைச் சேர்ந்த மணிகண்டன், பொன்ராஜ் ஆகியோருடன் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது.

மணிகண்டன், பொன்ராஜ் ஆகியோர் அந்தப் பகுதியில் கபடி போட்டி நடத்த ஏற்பாடு செய்ததாகவும் அதை பாஸ்கர் தடுத்ததாகவும் அதனால் அவர்களுக்குள் மேலும் மோதல் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில சம்பவங்களையும் காரணங்களாகச் சொல்கிறார்கள் அப்பகுதியினர். முன்விரோதமே இதற்கு முக்கிய காரணமாக விசாரணையில் தெரிய வருகிறது. சரணடைந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் சிலரைத் தேடி வருகிறோம்” என்றனர்.




















