யார் துரோகி? TTV தினகரன் Vs சசிகலா நடப்பது என்ன? | Political Pulse
புதுச்சேரியில் நாளை பந்த்! ஸ்தம்பிக்கப்போகும் `பிரெஞ்சு சிட்டி’ - தொழிற்சங்கங்கள் போர்க்கொடி
மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்திருக்கும் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.
அந்தப் போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கத்தினர், போக்குவரத்துத் தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள், மற்றும் பாதுகாப்பு தளவாட தொழிலாளர்கள் நலச் சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

அதனடிப்படையில் புதுச்சேரி மாநிலத்திலும் நாளை பந்த் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர், ``மத்திய அரசுக்கு எதிராக நாளை நாடு முழுவதும் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் சுமார் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்கின்றனர்.
புதுச்சேரியில் சுமார் 5 லட்சம் பேர் அமைப்பு சாரா தொழிலாளர்களாக இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கான சமூக பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படவில்லை. அனைத்து விஷயத்திலும் தொழிலாளர்களுக்கு விரோதமாகவே அரசு செயல்படுகிறது.
புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஒப்பந்த ஆசிரியர்கள், ஆஷா ஊழியர்கள், செவிலியர்கள், பொதுப்பணித்துறை ஊழியர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடி வருகின்றனர்.
புதுச்சேரி தொழிலாளர் துறைக்கு நிரந்தரமான ஆணையர் நியமிக்கப்படவில்லை. இப்படி இந்த ஆட்சியில் நடக்கும் அவலங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்தையும் கண்டித்துத்தான் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவிருக்கிறது.

வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் தொழிற்சங்கத்தினர் பஸ், ஆட்டோ மற்றும் டெம்போ வாகனங்களை இயக்க மாட்டார்கள். வேலைக்கும் செல்ல மாட்டார்கள். அதேபோல தொழிற்பேட்டைகளும் முற்றிலும் இயங்காது.
மேலும் இந்தப் போராட்டத்திற்கு `இந்தியா' கூட்டணி ஆதரவு தெரிவித்திருக்கிறது. புதிய பேருந்து நிலையம், வில்லியனூர், அரியாங்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், சேதராப்பட்டு மற்றும் காரைக்கால் என ஒன்பது இடங்களில் நாளை மறியல் போராட்டம் நடைபெறும்" என்றார்.

















