தென்காசி: பொதுமக்களை அரிவாளால் வெட்டிய 9 பேர் கைது; மற்றொரு குற்றவாளியைச் சுட்டு...
பெரம்பலூரில் விதைக்கப்பட்ட 'ஆர்வம்' - அரசுப் பள்ளி மாணவர்களுக்கான புதிய கற்றல் உலகம்
"ஒரு குழந்தையின் தேடல் மற்றும் படைப்புத்திறன் உலகையே மாற்றியமைக்கும்!" — இந்த ஒற்றை வரியைத்தான் தாரக மந்திரமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார் 'பயிர்' அமைப்பின் நிறுவனர் செந்தில்.
இவர் நினைத்திருந்தால் டொரண்டோவிலோ பெங்களூரிலோ செட்டிலாகியிருக்கலாம். ஆனால், தன் சொந்த மண்ணின் பிள்ளைகளுக்காக பெரம்பலூர் தேனூர் கிராமத்தில், 2 ஏக்கர் பரப்பளவில், 15,000 சதுர அடியில் ஒரு அதிசய உலகத்தையே அமைத்திருக்கிறார்.
அரசுப் பள்ளிப் பிள்ளைகளுக்கு அறிவியலை அல்வா துண்டாக மாற்றியிருக்கிறது இவர்களது 'ஆர்வம் கற்றல் மையம்' (Aarvam Learning Lab).
வாருங்கள், அந்தப் புதுமை உலகிற்குள் ஒரு விசிட் அடிப்போம்!

அது என்ன ‘ஆர்வம்’?
"கற்கால மனிதர்கள் பாறை ஓவியம் வரைஞ்சாங்கன்னு புத்தகத்துல ஒரு வரியில படிச்சிட்டுப் போயிடலாம். ஆனா, அந்த மனிதர்கள் பெயிண்ட்டுக்கு எங்கே போனாங்க? நாமே ஏன் அந்தப் பிக்மெண்ட்ஸை (Pigments) அரைச்சு, ஊற வச்சு, கலர் உருவாக்கிப் பார்க்கக் கூடாது?" என்று கேட்கிறார் செந்தில்.
வெறும் வாய்பாடாகப் படிக்கும் கல்வியை மாற்றி, தொட்டுணர்ந்து கற்கும் 'அனுபவ வழிக் கற்றல்' (Experiential Learning) தான் இந்த மையத்தின் தாரக மந்திரம்.
தனியார் பள்ளிப் பிள்ளைகளுக்குக் கிடைக்கும் லேப் வசதிகள், மியூசியம் விசிட்டுகள் ஏன் நம் கிராமத்துப் பிள்ளைகளுக்குக் கிடைக்கக் கூடாது என்ற ஆதங்கத்தில் உதித்த விடை இது!
15,000 சதுர அடியில் ஒரு மினி இஸ்ரோ!
இங்குள்ள லேபிற்குள் நுழைந்தால் ஆச்சரியத்தில் கண்கள் விரிகின்றன:
• வின் டனல் (Wind tunnel): பெரும் காற்று வீசும்போது வாழை இலை ஏன் கிழிகிறது, தென்னை மரம் ஏன் வளைந்து நிமிர்கிறது, கார் டிசைன் எப்படி இருக்க வேண்டும் என்பதை பிள்ளைகள் இங்கே சின்னச் சின்ன எக்யூப்மென்ட்ஸ் மூலம் செய்து பார்க்கிறார்கள்.
• ஒளியின் மாயாஜாலம்: வெவ்வேறு வண்ண விளக்குகளுக்குக் கீழே இலைகளை வைத்து, போட்டோசிந்தசிஸ் (Photosynthesis) எப்படி நடக்கிறது என்று லைவ்-ஆகப் பார்க்கிறார்கள்.
• அகழ்வாராய்ச்சி முதல் ஓலை கைவினை வரை: அறிவியல் (STEM) மட்டுமல்ல, கூடவே மனிதநேயம் (Humanities), தொல்லியல், இசை எனப் பன்முகக் கற்றல் இங்கே சாத்தியமாகிறது.

அசத்தும் ‘ரெசிடென்ஷியல் கேம்ப்’
கடந்த கல்வி ஆண்டில் மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தின் 14 அரசுப் பள்ளிகளில் இருந்து 850 பிள்ளைகளை இவர்களே பஸ் அனுப்பி, மதிய உணவும் கொடுத்து, லேபிற்கு அழைத்து வந்து பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்.
"படிக்கிறப்ப மட்டும் கூட்டிட்டு வந்தா ஒரு பாண்டிங் வராது சார். அதான் இந்த மூணு நாள் ரெசிடென்ஷியல் கேம்ப். 100 பிள்ளைகள் இங்கேயே தங்கி, ராத்திரி 9 மணிக்கு டெலஸ்கோப் மூலமா 'நைட் ஸ்கை வாட்சிங்' பண்ணி, வானியலோட பிரமாண்டத்தை ரசிச்சாங்க!" என்கிறார் செந்தில் உற்சாகமாக.

தற்போது மே 28 முதல் மே 30 வரை நடைபெற்ற 3 நாள் 'ரெசிடென்ஷியல் கேம்ப்' (Residential Camp) மூலம் 100 குழந்தைகள் தங்கி, விண்வெளி அறிவியல் முதல் கிச்சன் கெமிஸ்ட்ரி வரை ஆழமாகக் கற்றுள்ளனர்.
மகாராஷ்டிராவில் பணிபுரியும் திவ்யா IFS அவர்கள் இந்த முகாமில் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தியுள்ளார். (குறிப்பு: கடந்த ஆகஸ்ட் 2025-ல் இஸ்ரோ ஆதித்யா-L1 மிஷன் டைரக்டர் நிகர் ஷாஜி அவர்களால் இம்மையம் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது).
பெற்றோர் - ஆசிரியர் நெகிழ்ச்சி!
"என் புள்ள டூர் போனா கூட இவ்வளவு விஷயங்கள் பேசினது இல்லைங்க. இங்க வந்துட்டுப் போன பின்னாடி 5 மணிக்கெல்லாம் எந்திருச்சு என்னென்னவோ புதுசா பேசுறான்!" என்று ஒரு அம்மா நெகிழ்ந்து போயிருக்கிறார்.













இன்னொரு பக்கம், கூடவே வரும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும், "சார், மேக்ஸ்லயும் பிசிக்ஸ்லயும் எனக்கு இந்த கான்செப்ட்டை நடத்த கஷ்டமா இருக்கு, நீங்க கொஞ்சம் உங்க ஸ்டைல்ல லேப்ல செஞ்சு காட்ட முடியுமா?" என்று செந்திலிடம் டிப்ஸ் கேட்கத் தொடங்கியிருப்பதுதான் இந்த மாடலின் ஆகச்சிறந்த வெற்றி!
வழக்கமான போலீஸ், நர்ஸ், டீச்சர் என்ற வட்டத்தைத் தாண்டி, நம் கிராமத்துப் பிள்ளைகளும் மேத்தமேட்டிகல் ஒலிம்பியாட் போக வேண்டும், சயின்டிஸ்ட் ஆக வேண்டும் என்ற கனவோடு, நண்பர்களின் சிஎஸ்ஆர் (CSR) நிதியுதவியுடன் முற்றிலும் இலவசமாக இயங்குகிறது இந்த ஆர்வம் மையம்.











