பெரம்பலூரில் விதைக்கப்பட்ட 'ஆர்வம்' - அரசுப் பள்ளி மாணவர்களுக்கான புதிய கற்றல் உ...
Don 3 விவகாரம்: "இனி அவருடன் பணியாற்ற விரும்பவில்லை"- ரன்வீர் சிங்கின் சமரசத்தை ஏற்க பர்ஹான் மறுப்பு
நடிகர் ஷாருக்கான் நடித்து பெரிய அளவில் ஹிட்டான டான் படத்தின் மூன்றாவது பகுதியாக டான் 3 படத்தை எடுக்க இயக்குநர் பர்ஹான் அக்தர் முடிவு செய்து ஷாருக்கானை அனுகினார். ஆனால் அதில் நடிக்க ஷாருக்கான் மறுத்துவிட்டார்.
இதையடுத்து நடிகர் ரன்வீர் சிங் இப்படத்தில் நடிக்க சம்மதித்தார். படப்பிடிப்புக்கான வேலைகள் முழு வேகத்தில் நடந்து கொண்டிருந்தன. ஆனால் படப்பிடிப்பு தொடங்க இரண்டு வாரமே இருந்த நிலையில் திடீரென அப்படத்தில் நடிக்க முடியாது என்று ரன்வீர் சிங் தெரிவித்துவிட்டார்.
இதனால் படப்பிடிப்புக்கான வேலைகளைத் தொடங்கியதில் தனக்கு 45 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி அத்தொகையைக் கொடுக்க வேண்டும் என்று ரன்வீர் சிங்கிடம் பர்ஹான் அக்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விவகாரத்தில் இரு தரப்பினர் இடையே பேசி தீர்வு காண முன்னணி நடிகர்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் முடியவில்லை. பர்ஹான் அக்தர் தரப்பில் திரைப்பட ஊழியர்கள் சங்கத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதனால் ரன்வீர் சிங்கிற்கு திரைப்பட ஊழியர் சங்கம் தடை விதித்து இருக்கிறது. இவ்விவகாரத்தில் நடிகர் சல்மான் கானும் சமரசம் செய்ய முயன்றார். இரு தரப்பினரிடமும் சல்மான் கான் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.
சமீபத்தில் இரு தரப்பினரிடமும் பேசி, தங்களது பிரச்னைகளைச் சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளுமாறு சல்மான் கான் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இவ்விவகாரத்தில் எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் அல்லது திரைப்பட அமைப்பின் தலையீடும் இல்லாமல், ரன்வீர் மற்றும் பர்ஹான் தங்களது கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ளுமாறு சல்மான் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இவ்விவகாரத்தில் பிடிகொடுக்காமல் இருந்து வந்த ரன்வீர் சிங் இப்போது இறங்கி வந்து இருக்கிறார்.
பர்ஹான் அக்தரின் மற்றொரு படத்தில் நடித்து கொடுக்க தயாராக இருப்பதாகவும், பர்ஹான் அக்தரின் சகோதரி சோயா அக்தர் படம் ஒன்றிலும் நடித்து கொடுக்க தயாராக இருப்பதாக ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை பர்ஹான் அக்தர் நிராகரித்துவிட்டார்.
பர்ஹான் அக்தர் மற்றும் அவரது சகோதரி சோயா அக்தர் ஆகிய இரண்டு பேரும் இனி ரன்வீர் சிங்குடன் பணியாற்ற தயாராக இல்லை என்று தெரிவித்துவிட்டனர். இதனால் நிலைமை மேலும் சிக்கலாகி இருக்கிறது.
டான் 3 படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாகி வந்ததாலும், படத்திற்கான கதை முழுமையடையவில்லை என்றும் கூறி இப்படத்தில் இருந்து ரன்வீர் சிங் விலகியதாகக் கூறப்படுகிறது. திரைப்பட ஊழியர் சங்கத்தின் தடையால் ரன்வீர் சிங் தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை ஹைதராபாத்திற்கு மாற்றி இருக்கிறார்.















