தருமபுரி : அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 9 மாணவர்கள் பாதிப்பு! - தலைமையாசிரி...
பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை - கோவை போலீஸ் கைது!
திருப்பூரை சேர்ந்தவர் மணிவேந்தன்(32). காவலரான இவர், கோவை மாநகர காவல் துறைக்கு உட்பட்ட போத்தனூர் விசாரணைப் பிரிவு காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக உள்ளார். அவர் வேலை விஷயமாக ஆகஸ்ட் 5ம் தேதி காலை பொள்ளாச்சிக்கு சென்றார். பின்னர் காவலர் மணிவேந்தன் பொள்ளாச்சியில் இருந்து தனியார் பேருந்து மூலம் கோவை திரும்பினார். அப்போது அவர் காவலர் சீருடையில் இருந்தார். இந்நிலையில் அவர் பயணித்த பேருந்து கிணத்துக்கடவு நிறுத்தத்தில் நின்றபோது, கல்லூரி மாணவிகள் பலர் ஏறியுள்ளார்கள். அப்போது மணிவேந்தன் கோவையைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவிக்கு பேருந்தில் ஏற உதவி செய்தார். பின்னர் அந்த மாணவி பேருந்தில் ஏறி உள்ளே வந்தார்.
அச்சமயத்தில் பேருந்தில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது அந்த கல்லூரி மாணவிக்கு உதவுவது போல் காவலர் மணிவேந்தன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், செய்வது அறியாமல் திகைத்தார். பின்னர் மதுக்கரை காவல் எல்லையில் உள்ள ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்றவுடன், மாணவி அதிலிருந்து கீழே இறங்கினார். அங்கு இருந்த சக மாணவிகளிடம் தெரிவித்தார். அவர்கள் காவலரை கண்டித்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவி தன் பெற்றோரிடமும் தெரிவித்தார். இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பாலியல் சீண்டல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மணிவேந்தனை கைது செய்தனர். மாணவிக்குப் பாலியல் தொல்லை தந்த காவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




















