"பிரதமர் வேட்பாளரை இந்தியா கூட்டணிதான் முடிவு செய்யும்"- தவெக கூட்டத்திற்குப் பி...
மதுரை: 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு; கொலை வழக்காக பதிவுசெய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!
மதுரை மாவட்டம், ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்ற பள்ளி மாணவரின் சடலம் முட்புதர் குட்டையில் இருந்து திங்கள்கிழமை மீட்கப்பட்டது. இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் உடல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்தை கொலை வழக்காக மாற்றிட கோரியும், விசாரணை அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும், விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் எனக் கோரியும் `தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம்' சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறையைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் கைதுசெய்ய கோரியும் பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்துப் பேசிய தமிழ்செல்வனின் வழக்கறிஞர், “தமிழ்செல்வன் மரணத்தை கொலை வழக்காகப் பதிவுசெய்ய வேண்டும். பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில் மாணவி ஒருவரின் தந்தை மீது சந்தேகம் உள்ளது. ஆனால் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த மறுத்து வருகின்றனர்.

ஆணவப் படுகொலை என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும். மாணவனை மிரட்டிய மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்த இளைஞர்களை கைதுசெய்து விசாரணை நடத்த வேண்டும்.
மேலும் மாணவனின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் குற்றவாளிகளை கைதுசெய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்” என்றார்.

மாணவனின் தாயார் யோகலட்சுமி பேசும்போது, “ எனது மகனுடன் சென்ற நபர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மட்டுமே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்ற எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. எனது மகனை மிரட்டிய மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் குறித்து எந்த விசாரணை நடத்தப்படவில்லை. எனவே எனது மகன் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைதுசெய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்




















