ஜோலார்பேட்டை: சிதிலமடைந்த `அம்மா’ பூங்கா... சமூகவிரோத கூடமாக மாறிய அவலம் - கண்டு...
மது போதையில் ஆம்னி பேருந்துகளை இயக்கிய டிரைவர்கள்; காட்டிக்கொடுத்த மூச்சு பரிசோதனை கருவி!
தூத்துக்குடி நகர போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீஸார் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் முன்பு இரவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தூத்துக்குடியில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி டிரைவர்களுக்கு மூச்சு பரிசோதனை கருவி மூலம் சோதனை செய்தனர்.

திருச்செந்தூர், உடன்குடி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை செல்லும் 3 ஆம்னி பேருந்து டிரைவர்களைப் பரிசோதனை செய்ததில் 3 பேருந்து டிரைவர்களும் மதுபோதையில் இருந்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து மது போதையில் ஆம்னி பேருந்துகளை ஓட்டி வந்த டிரைவர்கள் மீது அபாயகரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
3 டிரைவர்களுக்கும் தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டதுடன் அவர்களின் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து போலீஸாரே 3 பேருந்துகளையும் இயக்கி ஓரமாக நிறுத்தி வைத்தனர். பேருந்து சுமார் 2 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் மாற்று டிரைவர்கள் வரவழைக்கப்பட்டு 3 பேருந்துகளும் சென்னைக்கு இயக்கப்பட்டன.
"3 டிரைவர்கள் சென்னை வரை ஆம்னி பேருந்துகளை இயக்கியிருந்தால் ஒருவேளை விபத்து கூட ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. போக்குவரத்து போலீஸாரின் சோதனையினால் டிரைவர்கள் சிக்கிக் கொண்டனர்” என்றனர் பயணிகள்.


















