கரூர் : 2021-ல் 4/4 பெற்ற செந்தில் பாலாஜி; தவெக வருகைக்குப் பின்.! | இப்போது முந...
மல்லுக்கட்டும் கழகங்கள்; விஜய் குறிவைக்கும் தொகுதியில்.! - திருச்சி மாவட்ட நிலவரம் | முந்துவது யார்?
முந்துவது யார்?
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'
மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் மலைக்கோட்டை மாவட்டமான திருச்சியில் ஒன்பது சட்டமன்ற தொகுதிகள் அமைந்துள்ளன.
'திருச்சி என்றால் திருப்பம்' என்று அரசியல் கட்சிகள் மாநாடு, கட்சி நிகழ்ச்சிகள் நடத்தும் 'சென்டிமென்ட்' மாவட்டமாக திருச்சி அமைந்துள்ளது.
த.வெ.க தலைவர் முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கியது, தி.மு.க, ம.தி.மு.க, நாம் தமிழர் கட்சிகள் மாநாடுகள் நடத்தியது, பிரதமர் கலந்துகொண்ட என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் என்று நடப்பு தேர்தலை மையப்படுத்தி, அனல் பறக்கும் மாவட்டமாக திருச்சி மாறியிருக்கிறது.

இங்குள்ள 9 சட்டமன்ற தொகுதிகளையும் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-வும், அதன் கூட்டணி கட்சிகளும் வென்றெடுத்துள்ளது. இந்நிலையில், வரும் தேர்தலில் யார் யாருக்கு சீட், யாருக்கு தொகுதிகள் பலமாக இருக்கின்றன என்று பார்ப்போமா?
1. மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி
கொள்ளிடம் வடகரையில் அமைந்துள்ள இந்த தொகுதியில் பிரசித்திப்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. அதோடு, அரிசி ஆலைகளும் இங்கும் நிறைய அமைந்துள்ளன. இந்த தொகுதி மக்கள் நெல், பருத்தி, மக்காசோளம் போன்ற பயிர்களை சாகுபடி செய்வதை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.
முத்தரையர், பட்டியல் சமுகத்தினர், கவுண்டர்கள், செட்டியார், ரெட்டியார், இஸ்லாமியர் உள்ளிட்ட சமூகத்தினர் வாக்குகள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இடத்தில் இருக்கின்றனர்.
இந்த தொகுதியின் தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ-வான கதிரவன் மறுபடியும் சீட் கேட்கிறார். அவருக்குத்தான் சீட் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்கிறார்கள். இருந்தாலும் இவரைத்தவிர, முசிறி கிழக்கு ஒன்றிய செயலாளர் காட்டுக்குளம் கணேசணும் சீட் பெறும் ரேஸில் இருக்கிறார்.

அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் டி.பி.பூனாட்சி, முன்னாள் எம்.எல்.ஏ பரமேஸ்வரி, கடந்த எம்.பி தேர்தலில் பெரம்பலூரில் போட்டியிட்ட என்.டி.சந்திரமோகன் ஆகியோர் சீட் பெறும் முயற்சியில் இருக்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சி சார்பில் இரா.தேன்மொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
த.வெ.க சார்பில் மண்ணச்சநல்லூர் தொகுதி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில் ஆகியோர் சீட் கேட்கிறார்கள்.
ஆளும் தரப்பு மேல் சில அதிருப்தி வாக்குகள் இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் பலம், தி.மு.க-வின் வாக்குகள், அதிருப்தி வாக்குகள் பிரிவது உள்ளிட்ட காரணங்களால், இப்போதைக்கு உதயசூரியன் இந்த தொகுதியில் சற்று பிரகாசிக்கிறது.
2. லால்குடி சட்டமன்ற தொகுதி :
லால்குடி தொகுதியில் நெல், வாழை, கரும்பு, சோளம், பருத்தி என்று மக்களின் வாழ்வாதாரத்துக்கு பல பயிர்கள் பயிர் செய்யப்படுகின்றன. கொள்ளிடம் ஆறு இந்த தொகுதியில் பாய்கிறது. லால்குடி தொகுதியில் உடையார், முத்தரையர், பட்டியல் சமூகத்தினர், முக்குலத்தோர், இஸ்லாமியர்கள் என்று வாக்குகளை நிர்ணயிக்கும் இடத்தில அடுத்தடுத்து பல்வேறு சமூக மக்கள் வசிக்கின்றனர்.
இந்த தொகுதியில் தொடர்ந்து நான்காவது முறையாக எம்.எல்.ஏ-வாக இருக்கும் சௌந்தர பாண்டியன் தி.மு.க-வில் மறுபடியும் சீட் கேட்கிறார். ஆனால், இவருக்கு சீட் கிடைக்கவிடாமல் தடுக்கும் வேலைகளில் அமைச்சர் கே.என்.நேரு தரப்பு ஈடுப்பட்டு வருவதாக தி.மு.க-வில் திகுதிகு கிளம்பியிருக்கிறது.

இவரைத்தவிர, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மத்திய மாவட்ட கலை இலக்கிய அமைப்பாளர் துரை.கந்தசாமி, பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கருணாநிதி ஆகியோர் சீட் பெற கடுமையாக முயற்சிக்கிறார்கள். கூட்டணிக் கட்சிகள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி இந்த தொகுதியை கேட்டு வருகிறது.
அதேபோல், சமீபத்தில் அ.தி.மு.க-வில் இணைந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் இந்த தொகுதியில் போட்டியிட போவதாக சொல்கிறார்கள். இவரைத்தவிர, தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ராஜேஷ் தங்கராஜன், புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் தின்னக்குளம் டி.என்.சிவகுமார், லால்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் 'சூப்பர்' டி.என்.டி நடேசன், லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் அசோகன் ஆகியோர் சீட் கேட்கிறார்கள்.
அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா-வும் சீட் பெயர் முயற்சிப்பதால், கடந்தமுறை போட்டியிட்ட டி.ஆர்.தர்மராஜ் சீட் கேட்டு ஃபைட் செய்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் மதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
த.வெ.க சார்பில் லால்குடி தொகுதி மாவட்டச் செயலாளர் விக்னேஷ் சீட் கேட்டு முயற்சித்து வருகிறார்.
அறிமுகம் இல்லாத நாம் தமிழர், த.வெ.க வேட்பாளர்கள் களம் காண இருப்பதால், பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
இப்போதைக்கு இந்த தொகுதியில் உதயசூரியன் சற்று பிரகாசிக்கிறது.
3. மணப்பாறை சட்டமன்ற தொகுதி
முறுக்கு, மாட்டுச்சந்தை, பால்கோவா, அதிகமாக நடைபெறும் பால் உற்பத்தி ஆகிய விஷயங்களுக்கு பெயர்பெற்ற தொகுதி மணப்பாறை. இந்த தொகுதியில் காய்கறி, சிறுதானியங்கள், பூ, கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி என்று பல விவசாயம் செய்யப்படுகிறது.
ஊராளிக் கவுண்டர், பட்டியல் சமூகத்தினர், முத்தரையர், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், முக்குலத்தோர், உடையார், செட்டியார் என்று அடுத்தடுத்து வாக்குகளை நிர்ணயிக்கும் இடத்தில பல சமூகத்தினர் உள்ளனர்.
தி.மு.க கூட்டணியில் எம்.எல்.ஏ-வாக இருக்கும் அப்துல் சமது மறுபடியும் ம.ம.க சார்பில் சீட்டுக்காக முயற்சிக்கிறார்.

ஒருவேளை இந்த தொகுதி தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டால், தி.மு.க தெற்கு மாவட்ட அவைத்தலைவர் பண்ணப்பட்டி கோவிந்தராஜன், மணப்பாறை முன்னாள் ஒன்றிய சேர்மன் அமிர்தவள்ளி, வையம்பட்டி முன்னாள் ஒன்றிய சேர்மன் ராஜலட்சுமி, தெற்கு மாவட்ட பொருளாளர் குணசேகரன், முன்னாள் கவுன்சிலர் பாலசுப்ரமணியன் ஆகியோரில் யாரேனும் ஒருவருக்கு சீட் என்கிறார்கள்.
அதேபோல், காங்கிரஸூம் இந்த தொகுதியில் கண் பதித்திருப்பதால் அந்த கட்சி சார்பில் திருச்சி தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் கோவிந்தராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் ரமேஷ்குமார், தெற்கு மாவட்ட துணைத் தலைவர் 'மிலிட்டரி' முருகன் ஆகியோரும் சீட்டை பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.
ம.தி.மு.க-வும், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் இந்த தொகுதியை கேட்டு வருவதால், அந்த கட்சிகளின் சார்பில் முறையே தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கமும், ஆளூர் ஷானவாஸூம் சீட் கேட்கிறார்களாம்.

அ.தி.மு.க-வில் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், முன்னாள் எம்.எல்.ஏ இரா.சந்திரசேகர், மருத்துவர் அணி மாநில துணை செயலாளர் மருத்துவர் விஜயகுமார், மருங்காபுரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சின்னசாமி ஆகியோர் சீட் பெறும் ரேஸில் முன்னணியில் இருக்கிறார்கள்.
நாம் தமிழர் காட்சி சார்பில் அருணகிரி வேட்பாளராகியிருக்கிறார்.
த.வெ.க சார்பில் அந்த கட்சியின் மணப்பாறை தொகுதி மாவட்டச் செயலாளர் கதிரவன் தான் வேட்பாளர் என்கிறார்கள்.
இப்போதைய சூழலில், இந்த தொகுதியில் அதிமுக - திமுக கூட்டணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தவெக, நாம் தமிழர் கட்சிகள் பெறும் வாக்குகளும் வெத்தி தோல்வியில் பங்காற்றும் என்று அறிய முடிகிறது.
4. துறையூர்(தனி) சட்டமன்ற தொகுதி :
திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் (தனி) தொகுதியில் உள்ள பகுதிகள் மட்டும் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக அறியப்படுகிறது. விவசாயத்தை பிரதானமாக கொண்ட இந்த தொகுதியில் சிறுதானியங்கள், பருத்தி, வெங்காயம், நெல் ஆகிய பயிர்கள் அதிகம் பயிரிடப்படுகின்றன. பச்சைமலை இந்த தொகுதியில் தான் அமைந்துள்ளது.
அதேபோல், தொகுதியில் பட்டியல் சமூகத்தினர், முத்தரையர், வெள்ளாளர், இஸ்லாமியர் என்று வெற்றியை நிர்ணயிக்கும் இடத்தில் அடுத்தடுத்த சமூக மக்கள் இருக்கிறார்கள்.
தி.மு.க-வை பொறுத்தமட்டில் கடந்த இரண்டு முறையாக தொடர்ந்து எம்.எல்.ஏ-வாக இருப்பவரும், சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான ஸ்டாலின் குமார் மீண்டும் சீட் கேட்கிறார்.

இவரைத் தவிர, துறையூர் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் சரண்யா மோகன்தாஸ், தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணியின் வடக்கு மாவட்ட அமைப்பாளர் செ.சுரேஷ்குமார் ஆகியோரும் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள்.
அ.தி.மு.கவை பொறுத்தமட்டில், எம்.ஜி.ஆர் மன்ற வடக்கு மாவட்ட செயலாளர் அறிவழகன் விஜய், துறையூர் நகர்மன்ற உறுப்பினரும், பொதுக்குழு உறுப்பினருமான சரோஜா இளங்கோவன், மருத்துவர் மணியம்மை, முன்னாள் எம்.எல்.ஏ இந்திராகாந்தி ஆகியோர் சீட் பெறும் முயற்சியில் முன்னணியில் இருக்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தனியார் பள்ளி ஆசிரியை கௌசல்யா வேட்பாளராக்கப்பட்டிருக்கிறார்.
த.வெ.க சார்பில் குடமுருட்டி கரிகாலனின் மனைவி பிச்சை ரத்தினம், கவியரசன் ஆகியோர் சீட்டுக்காக முட்டி மோதுகிறார்கள்.
இப்போதுள்ள சூழலில், இந்த தொகுதியில் திமுக அதிமுக இடையே கடும் போட்டி நிலவுவதை காணமுடிகிறது. வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விஷயங்கள் தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படும் என தெரிகிறது.
5. முசிறி சட்டமன்ற தொகுதி:
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாக முசிறி சட்டமன்ற தொகுதி அமைந்துள்ளது. காவிரி கரையையொட்டி அமைந்துள்ளதால், விவசாயம் முக்கியத் தொழிலாக இருக்கிறது. வாழை, வெற்றிலை, நெல், மானாவரி பயிர்கள், வெங்காயம், கோரை என்று பல விவசாயம் சார்ந்த பணிகள் நடக்கிறது.
முத்தரையர், பட்டியல் சமூகம், வெள்ளாளர், பிள்ளைமார், ரெட்டியார், செட்டியார், உடையார், கவுண்டர்கள், இஸ்லாமியர்கள் என்று அடுத்தடுத்து பல சமூக மக்கள் பரவலாக உள்ளனர்.
தி.மு.க சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான காடுவெட்டி தியாகராஜன் மறுபடியும் சீட் கேட்கிறார்.

இவரைத்தவிர, தா.பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர்.சேகரன், தொட்டியம் பேரூராட்சி துணைத்தலைவர் ராஜேஷ், முன்னாள் அமைச்சர் செல்வராஜின் மகன் கருணைராஜா, முசிறி மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் சீட் பெற கடுமையாக முயற்சிக்கிறார்கள்.
காங்கிரஸூம் இந்த தொகுதியை கேட்டு வருவதால், அந்த கட்சியின் சார்பில் வடக்கு மாவட்ட தலைவர் எரிகுளம் சரவணன், முன்னாள் எம்.பி அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிஸ் ஆகியோர் சீட் கேட்கிறார்கள்.
அ.தி.மு.க-வை பொறுத்தமட்டில், முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி முதன்மையில் இருக்கிறார். இவரைத்தவிர, சிவானி கல்லூரி தாளாளர் செல்வராஜ் பிள்ளை, முசிறி நகரச் செயலாளர் 'ஸ்வீட் ராஜா' மாணிக்கம், முசிறி மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் தீவிரமாக முயற்சி செய்கிறார்கள்.
அ.ம.மு.க சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரன் டி.டி.வி.தினகரன் மூலம் இந்த தொகுதியை பெற முயற்சித்து வருகிறார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் பாக்கியலட்சுமி வேட்பாளராக்கப்பட்டிருக்கிறார்.
த.வெ.க சார்பில் முசிறி தொகுதி மாவட்டச் செயலாளர் ஜெகன்மோகனுக்கு தான் சீட் என்கிறார்கள்.
அ.தி.மு.க கூட்டணியில் முன்னாள் அமைச்சர் சிவபதி வேட்பாளர் என்றால், தொகுதி சமபலத்தோடு தேர்தலை எதிர்கொள்ளும். வேறு வேட்பாளர் அறிவிக்கப்பட்டாலோ, கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டலோ, திமுக கூட்டணி முந்தும் சூழலே உள்ளது.
6. ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலால் புகழ்பெற்ற இந்த தொகுதியில் காவிரியும், அதன் கிளை ஆறான கொள்ளிடம் ஆறும் பாய்கின்றன.
மக்களை கவரும் வண்ணத்துப்பூச்சி பூங்கா இந்த தொகுதியில் தான் அமைந்துள்ளது. தவிர, முன்னால் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011 - ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற தொகுதி.
இங்கு, நெல், வாழை, பூ, காய்கறி என்று பல விவசாயப் பொருட்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
ஸ்ரீரங்கம் தொகுதியில் முத்தரையர், உடையார், பட்டியல் சமூகத்தினர், வெள்ளாளர், பிராமணர்கள், கிறிஸ்தவர்கள் என்று அடுத்தடுத்து வாக்குகளை நிர்ணயிக்கும் இடங்களில் பல சமூகத்தினர் வசிக்கிறார்கள்.
தி.மு.க சார்பில் பழனியாண்டி மறுபடியும் சீட் பெறும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார்.

இவரைத் தவிர, தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை அமைப்பாளர் என்.ஆனந்த், மத்திய மாவட்ட பொருளாளர் துரைராஜ் ஆகியோர் சீட் பெறும் முயற்சியில் இருக்கிறார்கள். இந்திய கம்னியூஸ்ட் கட்சியும் இந்த தொகுதியை கேட்டு தங்களது தலைமைக்கு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறது.
அதேபோல், அ.தி.மு.க-வில் முன்னாள் அரசு கொறடாவும், கட்சியின் அமைப்புச் செயலாளருமான மனோகரன், வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி, முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான எஸ்.வளர்மதி ஆகியோர் சீட் பெறும் முயற்சியில் முன்னணியில் இருக்கிறார்கள்.
பா.ஜ.க-வும் இந்த தொகுதியை கேட்டு அ.தி.மு.க தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
நாம் தமிழர் கட்சி சார்பில் தர்மராஜ் வேட்பாளராகி இருக்கிறார்.

த.வெ.க சார்பில் சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் வேட்பாளர் லிஸ்டில் முதன்மையில் இருக்கிறார்.
முக்கியத் தலைகள் மோதும் தொகுதி என்பதால், இப்போதைக்கு தொகுதியில் சமபலத்துடன் போட்டி கடுமையானதாக உள்ளது நிலவுகிறது.
7. திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி:
பிரசித்திப்பெற்ற திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில், ரயில்வே ஜங்ஷன், மத்திய பேருந்து நிலையம், கல்வி நிலையங்கள் ஆகியவை இந்த தொகுதியின் அடையாளமாக விளங்குகின்றன. அதேபோல், வியாபார தலங்கள், அதன்மூலம் கிடைக்கும் வேலை ஆகியவை இங்குள்ள மக்களின் வாழ்வாதாரமாக அமைந்துள்ளது.

இந்த தொகுதியில் கிறிஸ்தவ வெள்ளாளர்கள், பட்டியல் சமூகத்தினர், இஸ்லாமியர்கள், யாதவர்கள், பிள்ளைமார் என்று அடுத்தடுத்து வாக்குகளை நிர்ணயிக்கும் இடத்தில் பல சமூகத்தினர் உள்ளனர். கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரான இனிகோ இருதயராஜ், இந்த தொகுதியின் எம்.எல்.ஏ-வாக, உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றார்.
லோக்கல் தி.மு.க-வினர் இந்த தொகுதியை கேட்டு அடம் பிடித்தாலும் முதல்வரோடு உள்ள நெருக்கத்தால் மறுபடியும் இனிகோ இருதயராஜூக்கு தான் சீட் என்கிறார்கள். தொகுதியில் அவர் வேலையையும் தொடங்கிவிட்டார்.
அதேநேரம், தி.மு.க-வுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டால் கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன், திருச்சி மேயர் அன்பழகன் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். காங்கிரஸூம் இந்த தொகுதியை கேட்டு காய் நகர்த்தி வருவதால் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிஸ் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். ம.தி.மு.க-வும் இந்த தொகுதிக்காக மல்லுக்கு நிற்பதால், அந்த கட்சியின் துணைபொதுச் செயலாளர் மருத்துவர் ரொஹையாவும் சீட் கேட்கிறார்.

அ.தி.மு.க-வில் மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசனுக்கு தான் சீட் என்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கிருஷ்ணசாமி வேட்பாளராகியிருக்கிறார்.
த.வெ.க தரப்பில் விஜய் களமிறங்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. அவர் நிற்கவில்லை என்றால், ஜெரால்டு மில்டன் வேட்பாளராகலாம் என்கிறார்கள்.
இப்போதைய சூழலில், இந்த தொகுதியில் உதயசூரியன் சற்று பிரகாசிக்கிறது. எனினும் வேட்பாளர் தேர்வும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
8. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி:
காவிரி ஆறு, பி.ஹெச்.எல், கனரக உலோக தொழிற்சாலை, பொன்மலை ரயில்வே பணிமனை, படைக்கல தொழிற்சாலை, தேசிய தொழில்நுட்பக் கழகம், ஐ.ஐ.எம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், துவாக்குடியில் அரசு கலைக்கல்லூரி, அரசு ஐ.டி.ஐ என்று பல அடையாளங்கள் திருவெறும்பூர் தொகுதிக்கு உள்ளன.
இதைத்தவிர, இந்த தொகுதியில் உள்ள சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் வேலை, நெல் விவசாயம் ஆகிவற்றால் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் அமைந்துள்ளது.

இந்த தொகுதியில் முக்குலத்தோர், பட்டியல் சமூகத்தினர், சோழிய வெள்ளாளர், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், யாதவர்கள், முத்தரையர் என்று வாக்குகளை நிர்ணயிக்கும் இடத்தில அடுத்தடுத்து பல சமூகத்தினர் உள்ளனர்.
தி.மு.க சார்பில் தொடர்ந்து இரண்டுமுறை எம்.எல்.ஏ-வாகவும், தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் இருந்து வரும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு தான் சீட் என்கிறார்கள். அவர் மட்டும் தான் சீட் கேட்டிருக்கிறார்.
அ.தி.மு.க சார்பில் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், புறநகர் தெற்கு மாவட்ட ஜெ பேரவை செயலாளர் சூரியூர் ராஜா என்கிற மணிகண்டன், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி.கார்த்திக், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.ராவணன், கூத்தப்பார் பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார், துவாக்குடி நகர செயலாளர் எஸ்.பி பாண்டியன் ஆகியோர் சீட் கேட்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ் வேட்பாளராகியிருக்கிறார்.

த.வெ.க சார்பில் இந்த தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்குடைய தி.மு.க முன்னாள் பொறுப்பாளரான நவல்பட்டு விஜி வேட்பாளராகலாம் என்கிறார்கள். அவர் வேட்பாளராகும்பட்சத்தில் அன்பில் மகேஸூக்கு டஃப் ஃபைட் கொடுப்பார் என்கிறார்கள்.
இருந்தாலும், இப்போதைய சூழலில் உறுதியான தி.மு.க கூட்டணி கட்சிகளின் பலத்தால், உதயசூரியன் சற்று பிரகாசிக்கிறது.
9. திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி:
திருச்சி மேற்கு தொகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், மாவட்ட தலைமை மருத்துவமனை, மாநகராட்சி மைய அலுவலகம், தலைமை ரயில் நிலையம் என்று முக்கிய மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்கள் மற்றும் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் அமைந்துள்ளன.
வியாபார நிறுவனங்கள், அதுசம்மந்தப்பட்ட வேலைவாய்ப்புகள் என இந்த தொகுதி மக்களின் வாழ்வாதாரம் அமைந்துள்ளது. இந்த தொகுதியில் முக்குலத்தோர், பட்டியல் சமூகத்தினர், பிள்ளைமார், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் என்று அடுத்தடுத்து வாக்குகளை நிர்ணயிக்கும் இடத்தில் பல சமூகத்தினர் உள்ளனர்.
இந்த தொகுதியில் வெற்றிப்பெற்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கும் கே.என்.நேரு, இந்த தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றிருக்கிறார். தி.மு.க சார்பில் கே.என்.நேருவுக்கு தான் சீட் என்பதால், அவர் அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்.

அ.தி.மு.க சார்பில் மருத்துவ அணியின் மாநகர் மாவட்ட செயலாளர் மருத்துவர் செந்தில், தில்லை நகர் பகுதி கழக செயலாளர் எம்.ஆர்.ஆர் முஸ்தபா, ஜங்க்ஷன் பகுதி கழக செயலாளர் 'நாகநாதர்' ஏ.பாண்டி ஆகியோர் சீட் பெறும் ரேஸில் முன்னணியில் இருக்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சி சார்பில் புவனேஸ்வரி வேட்பாளராகியிருக்கிறார்.
த.வெ.க சார்பில் ஷேக் அலாவுதீனும், அப்பாதுரை ராவுத்தரும் வேட்பாளர் ரேஸில் இருக்கிறார். மற்ற கட்சிகளில் டஃப் கொடுக்காத வேட்பாளர்கள் நிறுத்தப்படலாம் என்பதால், இந்த தொகுதியில் உதயசூரியனுக்கு இப்போதைக்கு ஏறுமுகம் தெரிகிறது.
திருச்சி யாருக்கு?
கடந்தமுறை, இந்த மாவட்டத்தில் 9 - க்கு 9 என்று மொத்தமாக தி.மு.க கூட்டணி அறுவடை செய்திருந்தாலும், இந்தமுறை புதிய கட்சிகளின் வரவுகள், கூட்டணி மாறுபாடுகள், சிதறும் ஆளுங்கட்சி எதிர்ப்பு வாக்குகள் என்று பல அம்சங்களால் சில தொகுதிகளில் சமபலத்தோடு திராவிட கட்சிகளும், த.வெ.க-வும் இருக்கின்றன.

இருந்தாலும், வேட்பாளர்கள், வைட்டமின் 'ப' , முடிவாகும் கூட்டணி கட்சிகளின் பலம் ஆகியவை மாறும்போது, இங்குள்ள தொகுதிகளின் வெற்றிவாய்ப்பு மாறுபடவும் அதிக வாய்ப்புள்ளது. மொத்தத்தில், இந்த மாவட்டத்தில் அதிகமான தொகுதிகளில் இப்போதைக்கு தி.மு.க முன்னிலை வகிப்பதாக தெரிகிறது.!













