ராஜீவ் காந்தி பதவிக்கு வேட்டு! - `டெண்டர் முதல் இன்ஸ்டா வரை...' - வெடித்துக் கிள...
`மாதவிடாய் விடுமுறை கொடுத்தால் பெண்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள்!' - உச்ச நீதிமன்றம் கருத்து
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சில மாநிலங்களில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுகிறது. சில தனியார் நிறுவனங்களும்கூட பெண்களுக்கு மாதவிடாய் கால விடுமுறை வழங்குகின்றன. ஆனால் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதி சூர்யகாந்த், ''பெண்களுக்குக் கட்டாய மாதவிடாய் விடுமுறை அளிப்பது அவர்களின் வேலைவாய்ப்பை பாதிப்பதாக அமையும். ஏனெனில் இத்தகைய சட்டத்தை நாம் உருவாக்கினால், முதலாளிகள் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்'' என்று தெரிவித்தார்.
அதோடு, ``இத்தகைய சட்டம் கொண்டு வந்தால் அது தொழிலாளர்களிடையே தாங்கள் ஆண்களை விடக்குறைந்தவர்கள் என்ற உளவியல் ரீதியான பயத்தையோ அல்லது எண்ணத்தையோ பெண்களுக்கு உருவாக்கிவிடும்.

விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது வேறு. ஆனால் நீங்கள் மாதவிடாய் விடுமுறையைச் சட்டபூர்வமாக்கும் தருணத்தில், யாரும் பெண்களை வேலைக்கு அமர்த்த மாட்டார்கள். முதலாளிகளின் மனநிலை உங்களுக்குத் தெரியாது" என்று நீதிபதி எச்சரித்தார்.
நீதிபதி ஜோய்மால்யா பக்சி கூறுகையில், "பெண்களுக்கு ஆதரவான இது போன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவைதான். ஆனால் வேலைச் சந்தையின் யதார்த்தத்தைப் பாருங்கள். ஒரு மனித வளம் எந்தளவுக்கு ஈர்ப்பில்லாததாக மாறுகிறதோ, அந்தளவுக்குச் சந்தையில் அவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பு குறையும். ஒரு வணிக மாதிரியான கண்ணோட்டத்தில் இதைப் பாருங்கள். எந்த முதலாளியாவது இதில் மகிழ்ச்சியாக இருப்பாரா?" என்று கேள்வி எழுப்பினார்.
குறிப்பாக, ``மாணவிகளாக இருந்தாலும் சரி அல்லது பணிபுரியும் பெண்களாக இருந்தாலும் சரி, மாதவிடாய் காலத்தில் அவர்களுக்கு விடுப்பு வழங்கப்படுவதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்று மனுதாரர் கோருகிறார். ஆனால் இத்தகைய கோரிக்கைகள், அச்சத்தை உருவாக்குவதற்காக செய்யப்படுபவை ஆகும். இது போன்ற சட்டத்தால் பெண்களை கீழானவர்கள் என்று அழைப்பார்கள்" என்றும், ``மாதவிடாய் என்பது அவர்களுக்கு நடக்கும் ஏதோ ஒரு கெட்ட விஷயம் என்று கூறுவார்கள்" என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
மூத்த வழக்கறிஞர் எம்.ஆர். ஷம்ஷாத் இது கூறுகையில் 2023-ஆம் ஆண்டு முதல் கேரள அரசு அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களிலும் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறையை வழங்கியதைக் குறிப்பிட்டார். எனினும், இவை தன்னார்வ அடிப்படையிலான நடவடிக்கை என்று தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார். மேலும் இவற்றை 'சட்டப்படி கட்டாயமானவை என்று அறிவிக்கும்போது, யாரும் அவர்களுக்கு வேலை வழங்க முன்வர மாட்டார்கள். நீதித்துறையிலோ அல்லது அரசுப் பணிகளிலோ யாரும் அவர்களைச் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அதோடு அவர்களின் தொழில் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும்.
நீங்கள் வீட்டிலேயே இருங்கங்கள் என்று கூறிவிடுவார்கள்''என்றும் நீதிபதி எச்சரித்தார். கடந்த ஜனவரி மாதத்தில், மாதவிடாய் சுகாதாரத்தை 'ஒரு பெண் குழந்தையின் வாழ்வுரிமை, கண்ணியம், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதி' என அங்கீகரித்து, உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியது. அதோடு அனைத்து அரசாங்கங்களும் இலவச சுகாதார நாப்கின்கள், செயல்படும் நிலையில் பெண்களுக்கு தனி கழிப்பறைகள் மற்றும் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை உறுதி செய்யுமாறு நீதிமன்றம் கட்டாய வழிகாட்டுதல்களையும் பிறப்பித்தது.





















