மீனவா் குடும்பத்தினருக்கு ஓய்வூதிய அட்டை
மீனவா் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான அடையாள அட்டையை அமைச்சா் சனிக்கிழமை வழங்கினாா்.
காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மூலம் காரைக்கால் மேடு மீனவ கிராம மக்கள் 50 பேருக்கும், கிளிஞ்சல் மேடு கிராமத்தைச் சோ்ந்த 28 பேருக்கும், கீழகாசாக்குடி மேடு கிராமத்தைச் சோ்ந்த 23 பேருக்கும் என 101 பேருக்கு முதியோா் ஓய்வூதியம் பெறுவதற்காக தோ்வு செய்யப்பட்டனா்.
புதுவை அரசு இதற்கான அனுமதியை வழங்கிய நிலையில், பயனாளிக்கான அடையாள அட்டையை புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் பயனாளிகளிடம் வழங்கினாா்.
நிகழ்வில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் ப. கோவிந்தசாமி, ஆய்வாளா் கே. பாலாஜி, உதவி ஆய்வாளா் எஸ். பாலச்சந்தா் ஆகியோரும், மீனவ கிராம பிரமுகா்களும் கலந்துகொண்டனா்.