AI மீது 'மாயக் காதல்': அமெரிக்கத் தொழிலதிபர் தற்கொலை - கூகுள் மீது வழக்கு
`முடிவெடுக்கும் பிசிசிஐ' - சச்சின் சாதனையைத் தகர்க்க வரும் வைபவ் சூர்யவன்ஷி!
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அவ்வப்போது சில அதிசயங்கள் நடக்கும். 1989-ல் 16 வயதில் சச்சின் டெண்டுல்கர் களமிறங்கியபோது ஒட்டுமொத்த உலகமே வியந்தது. இப்போது, சரியாக 37 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே போன்றதொரு வரலாற்றுச் சாதனையை முறியடிக்கத் தயாராகி வருகிறார் பீகாரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி.

ஐபிஎல் 2026 ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் வைபவ், அந்த அணியின் முதுகெலும்பாக மாறியுள்ளார். நடப்புத் தொடரில் அவர் விளையாடும் விதம் சர்வதேச வீரர்களையே திகைக்க வைத்துள்ளது. வெறும் 4 போட்டிகளில் 200 ரன்களைக் குவித்துள்ள வைபவ், 260-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்தியுள்ளார்.
வைபவின் இந்த அசாத்தியமான திறமையைக் கண்ட இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) தேர்வுக்குழு, அவரை நேரடியாக இந்திய சீனியர் அணியில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. ஜூன் மாதம் நடைபெறவுள்ள அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டி20 அணியில் வைபவ் சூர்யவன்ஷி பெயர் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டாம் கட்ட வீரர்களைக் கொண்ட இந்திய அணி இந்தத் தொடரில் பங்கேற்கும் என்பதால், வைபவை சர்வதேச அரங்கில் அறிமுகப்படுத்த இதுவே சரியான தருணம் என பிசிசிஐ கருதுகிறது. மேலும், ஜிம்பாப்வே தொடரிலும் அவர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.
சச்சின் சாதனை முறியடிக்கப்படுமா?
வைபவ் சூர்யவன்ஷி இப்போது இந்திய அணியில் அறிமுகமானால், இந்தியாவிற்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய மிக இளம் வீரர் என்ற சாதனையைப் படைப்பார். சச்சின் தனது 16 வயது 205 நாட்களில் அறிமுகமானார். தற்போது வைபவ் சூர்யவன்ஷிக்கு 15 வயது மட்டுமே ஆகிறது. ஒருவேளை அவர் அயர்லாந்து தொடரில் விளையாடினால், சச்சினின் பல கால சாதனையை முறியடித்து புதிய சரித்திரம் படைப்பார்.

வைபவ் சூர்யவன்ஷியின் வருகை இந்திய கிரிக்கெட்டில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. அயர்லாந்து மண்ணில் அவர் இந்திய நீல நிறச் சட்டையை அணிந்து களம் காணும் அந்த வரலாற்று தருணத்திற்காக ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


















