அலி கமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் நூலிழையில் தப்பிய மொஜ்தபா; `அன்று' நடந்தது என்...
முட்டிமோதும் வேலுமணி, செந்தில் பாலாஜி; குறிவைக்கும் பாஜக! - கோவை மாவட்ட களநிலவரம் | முந்துவது யார்?
முந்துவது யார்?
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'
1. கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி
கோவை மாவட்டத்தின் இதயப் பகுதியான தெற்கு தொகுதியில் சிறுபான்மை மக்கள், வட இந்தியர்கள், அருந்ததியர், கவுண்டர், நாயுடு, தேவர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் கணிசமாக வசிக்கிறார்கள்.
தொகுதியின் சிட்டிங் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதிக்கு தாவ தயாராகிவிட்டார்.
அ.தி.மு.க மாநகர் மாவட்டச் செயலாளரும், கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான அம்மன் அர்ஜுனன் மீண்டும் போட்டியிடும் முனைப்பில் களத்தில் வேகம் காட்ட தொடங்கியுள்ளனர்.


தி.மு.க கூட்டணியில் கடந்த 2 முறை இந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கி தோல்வியை சந்தித்தனர். இந்தமுறை காங்கிரஸ் கட்சிக்கு நோ சொல்லிவிட்டு, தி.மு.கவே நேரடியாக களம் காண்கிறது.
ஐ.டி விங் இணைச்செயலாளர் டாக்டர் மகேந்திரன், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைச் செயலாளர் மீனா ஜெயகுமார், திருமலை ராஜா என பல நிர்வாகிகள் மல்லு கட்டுகிறார்கள்.
நாம் தமிழர் கட்சி சார்பில் பேரறிவாளன் என்கிற இளைஞர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2021 தேர்தலில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டு அதிக வாக்குகள் வாங்கியுள்ளார்.
வானதி மற்றும் அம்மன் மீதுள்ள அதிருப்தி த.வெ.க பிரிக்கும் வாக்குகள், திமுக-வின் கூட்டணி பலம் ஆகியவை சேர்ந்து தற்போது தி.மு.க-வுக்கு சாதகமாக அமையலாம் என்ற நிலை உள்ளது.
2. கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி
குறு சிறு தொழிற்சாலைகள் நிறைந்த கோவை வடக்கு தொகுதியில் முதலியார், கவுண்டர், அருந்ததியர், பிராமணர்கள், சமுதாய மக்கள் கணிசமாக இருக்கிறார்கள்.
அ.தி.மு.க-வில் கோவை வடக்கு தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் தெற்கு தொகுதிக்கு மாறுகிறார்.
தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தொகுதிக்குள் ஆக்டிவாக வலம் வருகிறார். அ.தி.மு.கவில் வேலுமணியின் வலதுகரமான சந்திரசேகரும் தொகுதிக்கு தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.


தி.மு.கவில் ஐ.டி விங் மாநில துணைச்செயலாளர் தமிழ்மறை, மாநில மருத்துவரணி துணைச் செயலாளர் டாக்டர் கோகுல், வடவள்ளி பகுதி செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.பி முருகன் ஆகியோர் முயற்சி செய்கிறார்கள்.
நாம் தமிழர் மற்றும் த.வெ.க கட்சிகளும் இங்கு கணிசமான வாக்குகளை பெற வாய்ப்புள்ளது.
வானதிக்கு சீட் கொடுக்க சந்திரசேகர் தரப்பும், சந்திரசேகருக்கு சீட் கொடுப்பதற்கு வானதி தரப்பும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
வானதிக்கு எதிராக பா.ஜ.கவினரும் போர் கொடி தூக்கி வருகிறார்கள். அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் உள்ள மைனஸ்களை பயன்படுத்திக் கொண்டால் தி.மு.க வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதே இப்போதைய நிலையாக உள்ளது.
3. சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி
தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் நிறைந்த சிங்காநல்லூர் தொகுதியில் நாயுடு மற்றும் கவுண்டர் சமுதாய மக்கள் கணிசமாக வசிக்கிறார்கள்.
அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ கே.ஆர். ஜெயராம் மீண்டும் போட்டியிட முனைப்பு காட்டுகிறார். பா.ஜ.க சார்பில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


தி.மு.கவில் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் செந்தமிழ்செல்வன், தீர்மானக்குழு செயலாளர் நா. கார்த்தி போட்டி போடுகிறார்கள்.
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்தத் தொகுதிக்கு முயற்சி செய்கிறார்கள்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்ற ஒரே தொகுதி இதுதான்.
தி.மு.க - அ.தி.மு.க நேரடியாக போட்டியிட்டால் தி.மு.க வெற்றி பெறவும், தி.மு.க சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்தால் மீண்டும் அ.தி.மு.க வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது என்பதே தற்போதய கள எதார்த்தமாக உள்ளது.
4. சூலூர் சட்டமன்ற தொகுதி
கிராமப் பகுதிகளை அதிகம் கொண்ட சூலூர் தொகுதியில் கவுண்டர், அருந்ததியர் சமுதாய மக்கள் கணிசமாக வசிக்கிறார்கள்.
அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ கந்தசாமி மீண்டும் போட்டியிடுவதற்காக முழு வீச்சில் பணிகளை செய்து வருகிறார்.
தி.மு.க-வில் கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் போட்டியிட வாய்ப்புள்ளது.


தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வும் சூலூர் தொகுதியை கேட்கிறார்கள். இங்கு த.வெ.க மற்றும் நாம் தமிழர் வாக்குகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றே தெரிகிறது.
தொகுதியில் அ.தி.மு.கவுக்கு உள்ள அசைக்க முடியாத செல்வாக்கும், கந்தசாமிக்கு கிடைத்துள்ள எளிமையான எம்.எல்.ஏ என்கிற பெயரும் மீண்டும் இரட்டை இலையை துளிர்க்க வைக்க வாய்ப்புள்ளது.
5. கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி
கோவை மாவட்டத்தின் மிகப்பெரிய தொகுதியான கவுண்டம்பாளையத்தில் கவுண்டர், நாயுடு, ஒக்கலிக கவுடர், இருளர் பழங்குடி மக்கள் கணிசமாக வசிக்கிறார்கள்.
அ.தி.மு.க-வில் கோவை வடக்கு மாவட்டச் செயலாளரும், சிட்டிங் எம்.எல்.ஏவுமான பி.ஆர்.ஜி அருண்குமார் மீண்டும் களம் காணவுள்ளார். இந்தத் தொகுதியையும் பா.ஜ.க குறி வைக்கிறது. "இங்கு அண்ணாமலை கூட போட்டியிடலாம்" என அருண்குமாரே சூசமாக கூறியுள்ளார்.


தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி மகனும், மாவட்ட துணைச் செயலாளருமான அசோக் பாபு, அ.தி.மு.க-வில் இருந்து வந்துள்ள செந்தில் கார்த்திகேயன் பெயர்கள் அடிபடுகின்றன.
கட்சி கட்டமைப்பு, அருண்குமார் மீதான டீசன்ட் இமேஜ் இங்கு அ.தி.மு.கவை மீண்டும் கரையேற்ற வாய்ப்புள்ளது.
6. தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி
கிராமப் பகுதியும், மாநகரும் சேர்ந்த தொண்டாமுத்தூர் தொகுதியில் சிறுபான்மை மக்கள், அருந்ததியர் கவுண்டர், ஒக்கலிக கவுடர் சமுதாயத்தினர் கணிசமாக வாழ்ந்து வருகிறார்கள்.
அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சரும், சிட்டிங் எம்.எல்.ஏவுமான எஸ்.பி. வேலுமணி தொடர்ந்து நான்காவது முறையாக அங்கு போட்டியிடவுள்ளார். அவரை எதிர்ப்பதற்கு தி.மு.க-வில் சரியான வேட்பாளர் கிடைக்காமல் கடந்தமுறை வெளியூர்களில் இருந்து வேட்பாளரை இறக்கியது.


இந்தமுறை தி.மு.க கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி வேட்பாளராக களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
மற்ற தொகுதிகளில் இல்லாதளவுக்கு அதிகளவு பரிசு பொருள்களை வேலுமணி கொட்டி கொண்டிருக்கிறார்.
தொண்டாமுத்தூர் மீண்டும் அ.தி.மு.க வசம் செல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.
7. மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி
கோவை மாவட்டத்தையும், நீலகிரி மாவட்டத்தையும் இணைக்கும் மேட்டுப்பாளையம் தொகுதியில் சிறுபான்மை மக்கள், அருந்ததியர், ஒக்கலிக கவுடர், கவுண்டர் மற்றும் பழங்குடி மக்கள் இருக்கிறார்கள்.
அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான ஏ.கே. செல்வராஜ் மீண்டும் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

தி.மு.க-வில் கூடலூர் பேரூராட்சி தலைவர் அறிவரசு, தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர். சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி கல்யாணசுந்தரம் மனைவி கவிதா என பலர் முயற்சி செய்கிறார்கள்.
தி.மு.க-வில் நிலவிய உள்கட்சி பிரச்னையால் கடந்தமுறை நூலிழையில் அறிவாலயம் தவறவிட்ட தொகுதி இது.
தி.மு.க தங்களின் உள்கட்சி பிரச்னைகளை சரி செய்யாவிடின் இந்தமுறையும் மேட்டுப்பாளையம் அ.தி.மு.க வசமாகும்.
8. கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி
பசுமை போர்த்திய கிராமங்களையும், பரபர மாநகரப் பகுதியையும் கொண்டு கிணத்துக்கடவு தொகுதியில் கவுண்டர், கோனார், சிறுபான்மை சமுதாய மக்கள் கணிசமாக இருக்கிறார்கள்.
அ.தி.மு.க- வில் சிட்டிங் எம்.எல்.ஏவமான தாமேதரனுக்கு மிகவும் வயதாகவிட்டதால் மீண்டும் சீட்டு கிடைக்க வாய்ப்பு கடினம். அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம், வேலுமணியின் மைத்துனர் சண்முகராஜா, விவசாயி அணி செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் முயற்சி செய்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.கவும் கிணத்துக்கடவை அதிகம் எதிர்பார்க்கிறது.
பா.ஜ.க கிணத்துக்கடவு தொகுதி அமைப்பாளர் வசந்தராஜன் தீவிரமாக முயற்சி செய்கிறார்.


தி.மு.க-வில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் ஆகியோர் முயற்சிக்கிறார்கள். இந்தப் பகுதியில் த.வெ.கவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016, 2021 சட்டமன்ற தேர்தல்களில் மிகவும் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தான் அ.தி.மு.க வென்றது. அதனால் இந்தமுறை கடுமையான போட்டி நிலவுகிறது.
9.பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி
தென்னை நகரமான பொள்ளாச்சி தொகுதியில் கவுண்டர், செட்டியார், அருந்ததியர் சமுதாய மக்கள் அதிகளவு இருக்கிறார்கள். அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏவான பொள்ளாச்சி ஜெயராமன் மீண்டும் களம் காண தயாராகிவிட்டார்.


தி.மு.க-வில் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா, ஐ.டி விங் இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன் முயற்சி செய்கின்றனர். கொ.ம.தே.கவும் தீவிரமாக களமாடி வருகிறது. அந்தக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் நித்தியானந்தம் முயற்சி செய்கிறார்.
அ.தி.மு.க கொ.ம.தே.க போட்டி உருவானால் அ.தி.மு.க எளிதான வெற்றி பெறுவதற்கான சூழலே களத்தில் நிலவுகிறது.
10. வால்பாறை (தனி) சட்டமன்ற தொகுதி
மலைப் பகுதியையும், சம வெளியையும் கொண்ட வால்பாறை தொகுதியில் கவுண்டர், அருந்ததியர், பழங்குடிகள், சிறுபான்மை மக்கள் கணிசமாக வாழ்கிறார்கள்.
அ.தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி கடந்தாண்டு உடல்நலக்குறைவால் காலமாகிவிட்டார். முன்னாள் எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு, கவுன்சிலர் வசந்த், டி.எல். சிங் முயற்சி செய்கிறார்கள்.
தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் மகள் சத்யா, நகர செயலாளர் சுதாகர் குட்டி, திப்பம்பட்டி ஆறுசாமி ஆகியோர் முயற்சி செய்கிறார்கள்.


தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் முயற்சி செய்கின்றனர். தி.மு.க மலைப் பகுதியிலும், அ.தி.மு.க சமவெளியிலும் பலமாக இருப்பார்கள். சமீப காலமாக சமவெளியில் இருந்த முக்கிய அ.தி.மு.க நிர்வாகிகள் தி.மு.க-வில் இணைந்துவிட்டனர்.
தி.மு.க நேரடியாக களமிறங்கினால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது கூட்டணிக்கு ஒதுக்கினால், அதிமுக கடும் சவால் அளிக்கும் நிலையே தற்போது உள்ளது.
கோவை மாவட்டம்:
கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில், இரண்டு தொகுதிகளில் தற்போதைய நிலையில் திமுக முந்துகிறது. 3 தொகுதிகளில் திமுக கடும் போட்டி அளிக்கிறது.
அதிமுக பாஜக கூட்டணியை பொறுத்த வரையில் தற்போது கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 5 தொகுதிகளில் முந்துகிறது. முதலில் சொன்ன மாதிரி, மூன்று தொகுதிகளில் இரு கூட்டணி கட்சிகளும் கடும் சவால் அளிக்கிறது. இது தற்போதைய கள நிலவரமாக உள்ளது. கூட்டணிக்கு தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வு முதலியவை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.!















