திருச்சியில் கிழக்கு: ரேஸில் பலர்; களமிறங்கும் கு.ப.கிருஷ்ணன் மகன்? - பரபரக்கும்...
"முதிர்ச்சியற்ற செயல்" முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்த கேரள காங்கிரஸ் எம்.பி!
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் கருத்துக்கு முரண்பட்ட நிலையில் கேரளம் இருந்துவருகிறது. கேரளத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணியுடன் த.வெ.க ஆட்சி நடைபெறுகிறது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடுக்கி நாடாளுமன்ற தொகுதி எம்.பி டீன் குரியகோஸ் முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைபாட்டை விமர்சித்துள்ளார். இதுகுறித்து டீன் குரியகோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் , "முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்ற தமிழக அரசின் நிலைப்பாடு துரதிர்ஷ்டவசமானது. இந்த விவகாரம் தற்போது மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் செயல்படும் மேற்பார்வைக் குழுவின் அதிகாரங்கள் புதிய சட்டப்படி தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதன்படி, கண்காணிப்பு, மேற்பார்வை மற்றும் பராமரிப்புப் பணிகள் அனைத்தும் இப்போது தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் வந்துள்ளன. தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த அனில் ஜெயின் தலைமையில் இதற்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.

தற்போது, அடுத்தகட்டமாக நடுநிலையான நிபுணர் குழு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் இதற்கான முடிவை எடுக்கவிருந்த சூழலில், தலைவர் அனில் ஜெயின் ஓய்வு பெற்றதும், புதிய தலைவராக ரீடிங் ஷிமரி பொறுப்பேற்றதும், அத்துடன் இரு மாநிலங்களிலும் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடந்ததும் இந்த ஆய்வில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்திற்குத் தண்ணீர், கேரளாவிற்குப் பாதுகாப்பு என்பதுதான் கேரளாவின் உறுதியான மற்றும் வெளிப்படையான நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டை கேரளம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழகம் இதற்கு முரணான நிலைப்பாட்டையே தொடர்ந்து எடுத்து வருகிறது.

இந்த விவகாரத்தில் அதிகாரப்பூர்வமான முடிவு, தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் அமைக்கப்படும் நடுநிலையான நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையிலேயே அமையும். இந்த உண்மைகளைத் தாண்டி, புதிய அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் எனத் தமிழக அரசு கொள்கை ரீதியாக அறிவித்திருப்பது முதிர்ச்சியற்ற செயலாகும். மேலும், அணையின் பாதுகாப்பு குறித்த முறையான ஆய்வுகள் முடிவதற்கு முன்பே, நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று கூறுவது பொறுப்பற்றத்தனமானது. கேரள மக்களின் அச்சத்தைப் போக்கி, இரு மாநிலங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தமிழகத்திற்குத் தேவையான தண்ணீர் தடையின்றி கிடைக்கவும் புதிய அணை கட்டுவதே நிரந்தரத் தீர்வாகும். இதற்குச் சகோதர மாநிலமான கேரளத்துடன் தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்பதே தற்போதைய அவசியமாகும்" என்றார்.














