கோத்தகிரி: அனுமதியின்றி கிணறு தோண்டிய காட்டேஜ் நிர்வாகம்; மண்ணில் புதைந்து தொழி...
மும்பை: "பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து" - புறாக்களுக்கு உணவளித்தவருக்கு நீதிமன்றம் அபராதம்
மும்பையில் பொது இடத்தில் புறாக்களுக்குச் சாப்பாடு கொடுக்க மும்பை உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தடை விதித்து இருக்கிறது. பொது இடத்தில் புறாக்களுக்குச் சாப்பாடு போடுவதால் பொதுமக்களின் உடல் நலத்திற்குத் தீங்கு ஏற்படுவதாகக் கூறி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவுக்கு மும்பையில் வசிக்கும் ஜெயின் மதத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புறாக்களுக்குச் சாப்பாடு கொடுப்பது தங்களது மதத்தோடு தொடர்புடையது என்று கூறி, தடைக்கு எதிராகப் போராட்டமும் நடத்தினர்.
மும்பையில் பல இடங்களில் புறாக்களுக்குச் சாப்பாடு கொடுக்க வசதி செய்யப்பட்டு இருந்தது. மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அந்த இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் தடுப்பு வைத்து அடைத்தனர். இதனால் அங்கு புறாக்களுக்கு பொதுமக்களால் சாப்பாடு போட முடியவில்லை.
அதோடு தடையை மீறி புறாக்களுக்குச் சாப்பாடு கொடுத்தவர்களிடம் மாநகராட்சியினர் அபராதம் விதித்தனர். அதையும் மீறி புறாக்களுக்கு பொது இடத்தில் சாப்பாடு கொடுத்தவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

அது போன்று மும்பை தாதர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின் என்பவர் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் மாகிம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு கூடுதல் தலைமை நீதிபதி மிஷால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நிதின் மீது பொதுமக்களின் உடல் நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக புறாக்களுக்கு பொது இடத்தில் உணவு கொடுத்தது, அரசு உத்தரவை மீறியது ஆகிய இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்தன.
இவ்வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தொழிலதிபர் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.
நீதிபதி தனது உத்தரவில், ''உங்கள் செயல் மனித உயிருக்கும், ஆரோக்கியத்திற்கும் அல்லது பாதுகாப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசாங்கத்தின் உத்தரவுகளையும் மீறியுள்ளது.
எனவே, இது தண்டனைக்குரிய குற்றமாகும். உயிருக்கு ஆபத்தான எந்தவொரு நோயின் தொற்றையும் பரப்பக்கூடும் என்று நீங்கள் அறிந்தோ அல்லது நம்புவதற்கு நியாயமான காரணம் இருந்தோ, மேற்கூறிய செயலை நீங்கள் சட்டவிரோதமாகவோ அல்லது கவனக்குறைவாகவோ செய்துள்ளீர்கள்'' என்று கூறிய நீதிபதி, குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் நிதினுக்கு இரண்டு குற்றங்களுக்கும் முறையே ரூ.3000 மற்றும் ரூ. 2000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

புறாக்களுக்கு உணவளித்த வழக்கில் முதல் முறையாக நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. மும்பையில் 51 இடங்களில் கபூத்தர்கானா எனப்படும் புறாக்களுக்கு உணவளிக்கும் இடங்கள் இருந்தன.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் இவை அனைத்தும் மூடப்படும் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் உதய் சாவந்த் அறிவித்தார்.
இவற்றை மூடிவிட்டு பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து 4 இடங்களில் மட்டும் புதிதாக புறாக்களுக்கு உணவளிக்க மாநகராட்சி அனுமதி கொடுத்து இருக்கிறது.
















