Rajini: "சாரி, அதைப்பத்தி கருத்து சொல்ல விரும்பல" - 'ஜனநாயகன்' பற்றிய கேள்விக்கு...
மும்பை: வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் பூச்சி; கொதித்த பயணிகள்; ரயில்வேயின் பதில் என்ன?
நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் என்ற அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. குளிர்சாதன வசதியுடன் இருக்கை வசதி கொண்ட இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவும் வழங்கப்படுகிறது. இந்த உணவு குறித்து சில நேரங்களில் விமர்சனம் எழுவதுண்டு.
இந்நிலையில், மும்பையில் இருந்து அகமதாபாத்திற்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட சாப்பாட்டில் பூச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பயணிக்குக் கொடுக்கப்பட்ட பருப்பு குழம்பில் பூச்சி ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதனை அப்பயணி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனக்கு மட்டுமல்லாது தான் பயணம் செய்த பெட்டியில் இருந்த வேறு சிலரது உணவிலும் இது போன்று பூச்சி இருந்ததாக அந்தப் பயணி பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவு வைரலாகி இருக்கிறது. பூச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் யாரும் சாப்பிட மறுத்துவிட்டனர். இது தொடர்பான சமூக வலைத்தளப் பக்க பதிவுக்கு ஐ.ஆர்.சி.டி.சி பதிலளித்துள்ளது.
சம்பந்தப்பட்ட ரயிலில் உணவு சப்ளை செய்யும் ஒப்பந்ததாரருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதோடு அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு அந்த ஒப்பந்ததாரர் உணவு தயாரிக்கும் சமையல் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்யும் ரயிலில் இது போன்று சாப்பாட்டில் பூச்சிகள் இருப்பது பயனிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதே போன்று வாரனாசியில் இருந்து தியோகர் நகருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த ஒரு பெண் பயணி ரயிலில் வழங்கபட்ட சாப்பாட்டைச் சாப்பிட்டதால் தனக்கு அலர்ஜி ஏற்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
பயணத்தின் போது வழங்கப்பட்ட சாப்பாட்டைச் சாப்பிட்ட தனது இரண்டு வயது மகன் நோய்வாய்ப்பட்டதாகவும், வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆன்லைனில் பகிரப்பட்ட படங்களில், மருத்துவரின் மருந்துச் சீட்டுடன், வீங்கிய உதடுகளுடன் அப்பெண் தனது படத்தைப் பகிர்ந்து இருந்தார். சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருந்திருந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும் என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.





















