Rajini: "சாரி, அதைப்பத்தி கருத்து சொல்ல விரும்பல" - 'ஜனநாயகன்' பற்றிய கேள்விக்கு...
Sooryavanshi: `பயம்னா என்னனு தெரியல.!' - வைபவ்வின் ஆட்டத்தை வியந்து பாராட்டிய ஹர்திக் பாண்டியா!
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல் 2026 போட்டியில், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு தருணம் அரங்கேறியது. உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவின் ஓவரில், 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார்.
இந்த மிரட்டலான ஆட்டத்தால், எதிரணி கேப்டன் ஹர்திக் பாண்டியா உட்பட பலரும் வியந்து போயினர்.
வைபவ் என்னும் அதிவேக சூறாவளி!
மழையால் 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் களமிறங்கினார் வைபவ் சூர்யவன்ஷி. முதல் பந்திலிருந்தே அதிரடிதான் அவரது ஒரே மந்திரமாக இருந்தது.

வெறும் 14 பந்துகளைச் சந்தித்த அவர், 39 ரன்களைக் குவித்து மும்பை பந்துவீச்சை சிதறடித்தார். குறிப்பாக, ஜஸ்பிரித் பும்ரா வீசிய ஒரே ஓவரில் இரண்டு இமாலய சிக்ஸர்களை விளாசியது, அவரது அசாத்திய திறமைக்கும், பயமற்ற அணுகுமுறைக்கும் சான்றாக அமைந்தது.
ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து அவர் அமைத்த அசுரத்தனமான தொடக்கத்தால், ராஜஸ்தான் அணி வெறும் 2.4 ஓவர்களிலேயே 50 ரன்களைக் கடந்து வரலாறு படைத்தது.
ஹர்திக் பாண்டியாவின் மனமார்ந்த பாராட்டு!
போட்டிக்குப் பிறகு பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, இளம் வீரர் வைபவ்வின் ஆட்டத்தைக் கண்டு தனது பிரமிப்பை மறைக்கவில்லை. "ஒரு 16 அல்லது 17 வயது சிறுவன் இப்படி விளையாடுவதைப் பார்ப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. நாங்கள், இந்தப் போட்டிக்குத் தயாராகும்போதே நாங்கள் அவரைப் பற்றித்தான் அதிகம் விவாதித்தோம்," என்று குறிப்பிட்டார்.
That’s sportsmanship
— CricketBlaze (@cricketblazeco) April 7, 2026
Hardik Pandya appreciating young Vaibhav Sooryavanshi pic.twitter.com/nMMpWdqULZ
மேலும், "அவர் பேட்டிங் செய்யும் விதம், அவரிடம் இருக்கும் அந்தத் துணிச்சல், அவர் ஆடும் ஷாட்கள் எல்லாம் அபாரமானவை. அவரது எதிர்காலம் பிரகாசமாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்," என்று கூறி தனது விளையாட்டு உணர்வை வெளிப்படுத்தினார்.
போட்டி முடிந்ததும் வைபவ்வை நேரில் சென்று பாராட்டிய பாண்ட்யாவின் செயல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஜெய்ஸ்வாலின் ஆங்கர் ஆட்டம்!
ஒருபுறம் வைபவ் அதிரடியில் மிரட்ட, மறுபுறம் ஜெய்ஸ்வால் நிதானத்தையும், நேர்த்தியையும் கலந்து ஒரு அற்புதமான இன்னிங்ஸை வெளிப்படுத்தினார்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற அவர், 32 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் குவித்தார். இந்த ஜோடியின் 80 ரன் பார்ட்னர்ஷிப்பால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.
சரிந்த மும்பை இந்தியன்ஸ்!
ஓவருக்கு 13 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் ஆட்டம் தொடக்கத்திலேயே தள்ளாடியது. ரியான் ரிக்கெல்டன் (8), ரோஹித் சர்மா (5), சூர்யகுமார் யாதவ் (6) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

வெறும் 3 ஓவர்களில் 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறியது. திலக் வர்மா (14) மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா (9) சிறிது நேரம் தாக்குப்பிடிக்க முயன்றாலும், ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சுக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.
இறுதியில், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 8 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஒரு சிறிய நம்பிக்கையை அளித்தாலும், சந்தீப் சர்மாவின் அற்புதமான கேட்ச்சால் அவரது ஆட்டம் முடிவுக்கு வந்தது. முடிவில், மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.




















