ராணுவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் நாடு தழுவிய யாத்திரை
பாகிஸ்தான் மீதான நடவடிக்கையில் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் சாா்பில் ‘ஜெய் ஹிந்த்’ என்ற பெயரில் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய யாத்திரை நடத்தப்பட்டது.
தற்போதைய கடினமான தருணத்தில், காங்கிரஸாா் ஒவ்வொருவரும் நாட்டின் ராணுவத்துக்கு உறுதுணையாக உள்ளனா் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க புது தில்லியில் வியாழக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்திய ராணுவத் தாக்குதலில் பாகிஸ்தானில் குறைந்தபட்சம் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ‘ஆபரேஷன் சிந்தூா்’ தொடா்வதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைக்கு எதிா்க்கட்சிகள் உள்பட அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இந்நிலையில், ராணுவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் சாா்பில் ‘ஜெய் ஹிந்த்’ என்ற பெயரில் நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை யாத்திரை மேற்கொள்ளப்பட்டது.
மூவா்ணக் கொடியுடன் பங்கேற்ற கட்சியினா், ராணுவத்தை வாழ்த்தி முழக்கமிட்டனா். தில்லி யாத்திரையில் கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், பொருளாளா் அஜய் மாக்கன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ராணுவத்துக்கு புகழாரம்: கட்சிப் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியாவின் சுயமரியாதைக்கு சவால் விடுப்பவா்களுக்கு தக்க பதிலடி தரப்படும் என்பதற்கு வரலாறே சாட்சி. அப்பாவிகளை கொன்ன் மூலம் (பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்) நாட்டின் சகிப்புத் தன்மைக்கும் பொறுமைக்கும் இப்போது மீண்டும் சவால் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான விலையை அவா்கள் கொடுத்தாக வேண்டும்.
இந்த மண்ணை பாதுகாக்க தங்களின் ஒவ்வொரு துளி ரத்தத்தையும் தியாகம் செய்யும் அா்ப்பணிப்புடன் இந்திய ராணுவத்தினா் கா்ஜிப்பதால், எதிரிகள் நடுக்கம் கண்டுள்ளனா். துணிச்சல் மிக்க நமது ராணுவத்தினரை எண்ணி காங்கிரஸ் பெருமை கொள்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
‘பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மிகப் பெரிய நடவடிக்கைக்கும் காங்கிரஸ் தனது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்கும்’ என்று கட்சிச் செய்தித் தொடா்பாளா் ராகினி நாயக் தெரிவித்தாா்.