பாலியல் வழக்கில் கைதான காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கு DNA பரிசோதனை; கனடாவில் இருந்து த...
வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained
ஓர் இரவு அனைத்தையும் மாற்றுமா?
ஈரானில் மாற்றியிருக்கிறது... மாறியிருக்கிறது.
கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலையில் இருந்து ஈரானில் பெரும் போராட்டம் வெடித்திருக்கிறது.
இதற்கு காரணம், முந்தைய நாள் உறங்கும்போது இருந்த சமையல் எண்ணெய், சிக்கன் போன்றவற்றின் விலை, அடுத்த நாள் அபரிமிதமாக உயர்ந்ததுதான்.
ஆம்... ஈரானின் தற்போதைய பணவீக்க விகிதம் கிட்டத்தட்ட 42 சதவிகிதம். இந்தியாவின் தற்போதைய பணவீக்க விகிதம் 2 - 3 சதவிகிதம்.
மக்கள் தொகை, பொருளாதாரம், தொழில்நுட்ப வளர்ச்சி, உள்கட்டமைப்பு போன்றவற்றால் இந்தியாவையும், ஈரானையும் ஒப்பிட முடியாது தான். ஆனாலும், உதாரணத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும், அமெரிக்க டாலருக்கு எதிரான ஈரானின் நாணயமான ரியால் பெரிதும் வீழ்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஓர் அமெரிக்க டாலரின் மதிப்பு 9,94,055 ரியால் ஆகும்.

உலக அளவில் மிக மோசமாக இருக்கும் நாணயங்களில் ஈரானின் ரியால் டாப் இடங்களில் ஒன்றைப் பிடிக்கிறது.
இதில் எல்லாம் வெறுத்துப் போய்தான், ஈரான் மக்கள் தங்களது அரசிற்கு எதிராக கொதித்து எழுந்துள்ளனர்.
ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள பஜாரில் முதன்முதலாக போராட்டம் தொடங்கியது. அது கொஞ்சம் கொஞ்சமாய் பரவி, இப்போது ஈரான் முழுக்க 15 நாள்களைக் கடந்து போராட்டம் தொடர்ந்து வருகிறது.
ஏன் அதிக பணவீக்கம்?
பிற நாடுகளில் இருந்து பொருள்களை இறக்குமதி செய்ய அமெரிக்க டாலர்கள் தேவை. ஆனால், அதை இறக்குமதியாளர்களுக்கு ஈரான் அரசு தரவில்லை.
அதனால், இறக்குமதியாளர்களால் இறக்குமதிகளைச் செய்ய முடியவில்லை. பல பொருள்களை ஈரானின் சந்தைக்குக் கொண்டுவந்து சேர்க்க முடியவில்லை.
இதனால், விலைவாசி அதிக உயர்ந்தது. மக்கள் பாதிக்கப்பட்டனர்.
ஈரானின் பஜார் வர்த்தகர்கள் வீதியில் இறங்கி, போராட்டத்தைத் தொடங்கினர்.
இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, மாதம் 7 அமெரிக்க டாலர்கள் கொடுக்க முன்வந்தது ஈரான் அரசு. ஆனால், அது போராட்டக்காரர்களைக் கொஞ்சம்கூட அசைத்துப் பார்க்கவில்லை.

பஜார் வர்த்தகர்களின் சக்தி
'பஜார் வர்த்தகர்களின் போராட்டம் நாடு தழுவிய போராட்டமாக மாறுமா?' என்கிற கேள்வி, இந்த இடத்தில் உங்களுக்கு எழலாம். ஈரானைப் பொறுத்தவரை எழும்.
ஈரானில் மதத் தலைமைகளும், பஜார் வர்த்தகர்களும் முக்கியமான சக்திகள்.
1979-ஆம் ஆண்டு நடந்த ஈரானியப் புரட்சிக்கு நிதியுதவி அளித்தவர்கள் இவர்கள்தான். அந்தப் புரட்சியில்தான், அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரானை ஆட்சி செய்து வந்த ஷா முகமது ரெசா பஹ்லவி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.
ஆக, ஈரான் அரசிற்கும், ஈரானின் மதத் தலைமைகளுக்கும், ஈரான் பஜார் வர்த்தகர்களுக்கும் எப்போதும் ஒரு கூட்டு இருந்தது. அதுதான் இப்போது உடைந்துள்ளது.
கமேனியின் மீது கோபம்
ஈரானைப் பொறுத்தவரை, கமேனி மத குரு. அங்கு நடக்கும் ஒவ்வோர் அரசியல் நகர்வுகளும் கமேனியின் கண் அசைவில்தான் நடக்கும்.
ஈரானை வெளி உலகில் பிரதிநிதித்துவப்படுத்துவதும் அவரே.
அவருக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று ஈரான் மக்கள் கொந்தளித்திருப்பது நிலைமையின் தீவிரத்தை உணர்த்தும்.

அதிபர் பெஷேஷ்கியன்
ஈரானில் நடக்கும் போராட்டத்திற்கு பணவீக்கத்தை மட்டும் கைகாட்டி நின்றுவிடக் கூடாது. அதையும் தாண்டி, ஊழல் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
ஈரானில் ஊழல்கள் தலைவிரித்து ஆடுகிறது.
2024-ம் ஆண்டு ஈரானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மசூத் பெஷேஷ்கியன். `ஊழலை முடிவுக்குக் கொண்டு வருவேன்... ஈரானின் நடுத்தர மக்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் நண்பனாக இருப்பேன்' என்று கூறி, பெருவாரியான ஓட்டுகளை அள்ளினார் இவர்.
ஆனால், இவர் ஆட்சிப் பொறுப்பேற்றும் மாற்றத்தில் 'மா'வைக் கூட காணவில்லை ஈரான் மக்கள். அதுவும் ஈரான் மக்களின் கோபத்திற்கு முக்கிய காரணம்.
ஈரான் Vs அமெரிக்கா
உள்நாட்டிலிருந்து தான் ஈரானுக்கு பிரச்னை என்றால், வெளிநாடுகளும் ஈரானை விட்டுவைக்கவில்லை. முக்கியமாக, அமெரிக்கா.
அமெரிக்கா உடன் முட்டி மோதிகொண்டிருக்கிறது ஈரான் அரசு. இதனால், கடந்த சில மாதங்களில் தாக்குதல் முதல் தடை வரை பலவற்றைச் சந்தித்துவிட்டது ஈரான்.
இவை ஈரான் அரசை எந்த அளவுக்குத் தாக்குகிறதோ, அதே அளவுக்கு அந்த நாட்டின் மக்களையும் பாதிக்கும்.
இதெல்லாமே ஈரான் மக்களின் கொதிப்பிற்கும், போராட்டத்திற்கும் காரணம்.
இந்தப் போராட்டத்தில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். ஈரானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், இதுவரை அல்லாத அளவிற்கு பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ட்ரம்ப் எச்சரித்தார்.
இதற்கு கமேனி கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
இப்போதைய நிலவரப்படி, ட்ரம்ப் ஈரான் அரசு பேச்சுவார்த்தைக்காக அழைத்துள்ளது என்று கூறியுள்ளார். இது அவருக்கும், ஈரான் அரசுக்கும்தான் வெளிச்சம்.
ஈரான் முன்னிருக்கும் கண்ணிவெடிகள்
ட்ரம்ப் ஒரு பக்கம் பேசிக்கொண்டிருக்க, பெஷேஷ்கியன் மெல்ல வெள்ளைக்கொடியை எடுத்துள்ளார். அவர் தற்போது போராட்டக்காரர்களின் கோரிக்கையைக் கேட்க தயார் என்று கூறியிருக்கிறார். இது எப்படி முடியும் என்பதைப் பொறுத்துதான் ஈரானின் எதிர்காலம் அமையும்.
ஏற்கெனவே ஈரானின் பொருளாதாரம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், மக்கள் போராட்டம் என்றால், அது நிலைமையை இன்னமும் மோசமாக்கும்.
சில மாதங்களுக்கு முன், ஈரான் மீது தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. தாக்குதல் முடிந்தாலும், ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் உறவு சரியில்லை.

இன்னொரு பக்கம், இஸ்ரேலும் ஈரான் மீது கோபத்தில்தான் இருக்கிறது. ஈரானில் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்பட்டால், அது இஸ்ரேலுக்கு சாதகமாக அமையும்.
பஜார் வர்த்தகர்கள் ஈரானின் மிகப்பெரிய சக்திகளில் ஒன்று. அவர்களை அனுசரித்துப் போவது தான் ஈரானின் தற்போதைய அரசுக்கு நல்லது. ஏற்கெனவே ஈரான் மக்கள் இந்த அரசின் மீதும், கமேனியின் மீதும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
இத்துடன் பஜார் வர்த்தகர்களின் கோபமும் சேர்ந்தால், 1979-ம் ஆண்டின் காட்சி மீண்டும் ஈரானில் அரங்கேறலாம்.
அதனால், அடுத்து ஈரான் அரசு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனமுடன் இருக்க வேண்டும்.













