ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன...
வாயைத் திறக்காத தலைமை; காத்திருப்பில் உடன்பிறப்புக்கள்; திமுக விருப்ப மனு அப்டேட்!
முடிந்த விருப்ப மனு விநியோகம்!
கடந்த பிப்ரவரி 20-ம் தேதி திமுகவில் தொடங்கிய விருப்ப மனு விநியோகம் மார்ச் 2-ம் தேதியுடன் நிறைவடையும் என்று அறிவிப்பு வெளியானது. கூடுதலான விருப்ப மனு வந்த காரணத்தினால் கடைசித் தேதி மார்ச் 6-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது.
கடந்த 15 தினங்கள் மொத்தம் 15,372 திமுக உறுப்பினர்கள் அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்திருக்கிறார்கள். இதில் தங்களுக்கான விருப்ப மனுக்களைத் தாண்டி, திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டி 1,473 பேர் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள்.

முதல்வரைப் போலவே, துணை முதல்வர் ஸ்டாலினுக்கும் பல்வேறு தொகுதிகளிலிருந்தும் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு அளித்திருக்கிறார்கள். அடுத்தபடியாக கனிமொழிக்கும் நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளிலிருந்தும் பலநூறு பேர் விருப்ப மனு அளித்திருக்கிறார்கள்.
முக்கிய தலைவர்களைத் தாண்டி, அந்தந்தப் பகுதி மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் எனப் பலரும் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். இதில், வட்ட, பகுதி செயலாளர்கள் மட்டுமே 500-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு அளித்திருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தகவல் சொல்கின்றன.
ஆசையில் உடன்பிறப்புகள்!
விருப்ப மனு கொடுத்து முடித்திருக்கும் நிலையில், யாருக்கு சீட் என்பது குறித்து தி.மு.க தலைமை கனத்த மௌனமாக இருப்பதாகச் சொல்கிறது திமுக வட்டாரம். இந்த விவகாரம் குறித்து அறிவாலய வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம்.
"ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் ஒவ்வொரு தொகுதிகளிலும் சிலர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி பணம் காட்டுவார்கள். இன்னும் சிலர் கட்சித் தலைவரை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்புக்காக பணம் காட்டுவார்கள். அப்படி இந்த முறை மற்றவர்களுக்காகத் தாண்டி தனித்தனியாக மட்டுமே 12,000-க்கும் மேற்பட்டவர்கள் விருப்பமனு கொடுத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறையில் விருப்ப மனு கொடுத்து முடிந்ததுமே அந்தந்தத் தொகுதிக்குள் விருப்ப மனு கொடுத்த தரப்புக்கும், இப்போது இருக்கும் ஒரு தரப்புக்கும் இடையே பல்வேறு குழப்பங்களும் வந்து சேர்வது இயல்பான ஒன்றுதான். எல்லாவற்றையும் தாண்டி ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் தேர்தல் தேதிக்கு முன்பாக தலைமையே குறிப்பிட்ட ஒருசிலருக்கு சீட் கன்பார்ம் செய்து வேலையை ஆரம்பிக்கச் சொல்வது வழக்கம். ஆனால், இம்முறை தேர்தலே நெருங்கிவிட்டது. இப்போதுவரை அப்படி யாருக்குமே சீட் உறுதி செய்தது குறித்து தலைமை இப்போதுவரை வாயைத் திறக்கவில்லை.
உறுதி ஆகாத சீட்!
இத்தனைக்கும் தலைவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருப்பவர்கள் சீட் குறித்து ஏதாவது பேசினாலும் 'சீட் பத்தி யாரும் பேசாதீங்க' என்று முகத்தில் அடித்ததுபோல பேசிவிடுகிறார். இதனால், வரும் தேர்தலில் புது முகங்கள் மட்டுமல்ல யாருக்கு சீட் கிடைக்கும் என்று தெரியாமல் கட்சியினர் பலரும் கிலியில் இருக்கிறார்கள்.
இதில் சீட் உறுதி என்ற நம்பிக்கையில் கடந்த சில மாதங்களாக தொகுதியில் முகாமிட்டு செலவு செய்தவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது.

உண்மையில் கூட்டணி குழப்பமே இப்போதுவரை தீராமல் இருக்க, கட்சி சீட் பஞ்சாயத்தை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறார் தலைவர். திருச்சி மாநாடு முடிந்ததுமே, நேர்காணல் நடத்தும் திட்டத்தில் இருக்கிறது தலைமை. நேர்காணல் நடந்து முடிந்தாலும், உடனடியாக வேட்பாளர் பட்டியல் வெளியாகப்போவதில்லை.
கூட்டணிக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பின்னரே திமுகவில் பட்டியல் வெளிவரக்கூடும். தொகுதி கிடைக்கும் என்ற ஆசையில் இருப்பவர்கள் முகத்தில் இருள் விலகப் போவதில்லை. அதுவரை தங்கள் சக்திக்கு ஏற்றார் போலப் பலரும் திமுக தலைமை மட்டத்தில் இருப்பவர் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கிறார்கள்" என்றார்கள் விளக்கமாக.













