திருவண்ணாமலை: கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 15 வயது சிறுமி; திமுக அரசுக...
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல், நின்ற நாராயண பெருமாள்: 5 தேவியருடன் பெருமாள் அருளும் அற்புதத் தலம்
ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலங்கள் அனைத்துமே மிகவும் சிறப்புப் பெற்றவை. அத்தகைய தலங்களுக்குச் சென்று வந்தாலே வாழ்வில் திருப்பம் ஏற்படும். அப்படிப்பட்ட ஒருதலம் தான் திருத்தங்கள்.
பெருமாள் சயன கோலம், அமர்ந்த கோலம், நின்ற கோலம் என மூன்று திருக்கோலங்களையும் அருளும் தலமிது. திருத்தண்கால் எனப் பாசுரங்கள் பாடி மகிழ்ந்த தலமிது. பூதத்தாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் இக்கோயிலை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

சிவகாசியில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருத்தங்கல். ஊரின் மத்தியில் சிறிய மலை மேல் அமைந்துள்ளது ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் கோயில். அருகே கருநெல்லிநாதர் என்கிற சிவாலயமும் அமைந்துள்ளது. இந்த மலையின் மேலே பழநி ஆண்டவர் கோயில் கொண்டுள்ளார்.
நின்ற நாராயணப் பெருமாளுக்குத் துணையாக ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, ஜாம்பவதி ஆகிய நான்கு நாச்சியார்களும், உடன் பேரன் அநிருத்தன் அவரின் மனைவி உஷை, அருணன், மார்க்கண்டேயர், பிருகு முனிவர் ஆகியோர் கருவறையில் காட்சி தருகிறார்கள்.
இப்படி ஒரு காட்சியை வேறு தலங்களில் காண்பது அரிது. இத்தலம் ஒன்றுக்கு நான்காக தேவியர்களுடன் பெருமாள் அருளுவதால்... இது கல்யாண வரமருளும் தலமாக உள்ளது. உற்சவராக செங்கமல நாச்சியார் உடனுறை திருத்தண்காலப்பன் அருளுகிறார்.
ஒருமுறை ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி மூவருக்கிடையே யார் சிறந்தவர் என்ற சர்ச்சை எழுந்தது. இதனால் மூவரும் பூலோகம் புறப்பட்டனர். இதில், ஸ்ரீதேவி முதலில் வந்து தங்கிய இடம் என்பதால் இது திருத்தங்கல் என்றானது. பிறகு, மற்ற தேவியரும் வந்து பெருமாளை சரண் அடைந்து இணைந்த இடம் இது.
இதனால் இங்கு வந்து வழிபட, பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வர், அவர்கள் பிணக்குகள் மாறி ஒற்றுமை கூடும் என்கிறார்கள். மேலும் இங்குதான் பெருமாள் ஜாம்பவதியை மணந்துகொண்டார் என்கிறது தலவரலாறு. திருமகளே செங்கமலத் தாயாராக இங்கு அவதரித்து பெருமாளை மணந்தார் என்றும் கூறுகின்றது.
மூலவர் சுதைத் திருமேனி என்பதால் இங்கே அவருக்குத் திருமஞ்சனம் கிடையாது. செங்கமலவல்லித் தாயாருக்கு மட்டும் தினந்தோறும் எண்ணெய்க் காப்பு திருமஞ்சனம் நடைபெறும். குடைவரைக் கோவிலாக அமைந்துள்ள இந்த அற்புதத் திவ்யதேசத்தில் ரங்கநாதர், கருடாழ்வார், ஆஞ்சநேயர், ராமாநுஜர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், நாகமுனிவர் சந்நிதிகளும் உள்ளன.

செங்கமலத் தாயார் வேறெங்கும் காண முடியாத அளவுக்கு நின்ற திருக்கோலத்தில் தனிச் சந்நிதியில் ஆறடி உயரத்தில் எழுந்தருளி இருக்கிறார். வந்தவருக்கு எல்லாம் மங்கல வாழ்வு அருளி வாழ்வித்துவருகிறார். பிரம்மாண்ட புராணத்தின் ஷேத்திர காண்டத்தில் எட்டு அத்தியாயங்களில் இந்தத் தலத்தின் விசேஷம் கூறப்பட்டுள்ளது.
புரூரவ மன்னன் இங்கே பெருமாளை சேவித்து வரம் பெற்றார். மன்னனது வேண்டுதலால்தான் துவாரகையில் நடக்க வேண்டிய அநிருத்தன்-உஷை திருமணம் இங்கு நடந்ததாம். கருடாழ்வார் இங்கு விசேஷமாக நான்கு திருக்கரங்களுடன் உள்ளார்.
முன் கைகள் வணங்கியும், பின் கைகளில் அமிர்த கலசமும், நாகமும் உள்ளன. இதனால் சர்ப்ப தோஷங்களுக்கும் ராகுகேது தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய சிறந்த கோயிலிது என்கிறார்கள்.
பாஸ்கர, பாபநாச தீர்த்தங்களும், அர்ச்சுனா நதியும் தல தீர்த்தமாக உள்ளன. விசேஷமான தேவச்சந்திர விமானம் அமைந்துள்ளது.
மார்கழி மாதம் முழுக்க இங்கு விசேஷ விழாக்கள் நடைபெறும். அதேபோல ஆனி மாத பிரம்மோற்சவமும் இங்கு வெகு விமர்சை. 9-ம் நாள் தேரோட்டம், 5-ம் நாள் மங்களாசாசனம், கருடசேவை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவில் உற்சவர் திருத்தங்கலாப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சென்று அங்கு திருமாலையைப் பெறுவது சிறப்பு. இந்தத் திருக்கோயிலில் அனைத்து திவ்யதேசங்களின் திருமால் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் செங்கமலத்தாயாருக்குப் பட்டு சாத்தி, வழிபட்டால் திருமண வாழ்க்கையில் ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளும் முடிவுக்கு வரும்.
தாயாரின் விக்கிரகம் பிரமாண்டம் என்பதால், ஒன்பது கஜ புடவை வாங்கி வர வேண்டும் என்பது முக்கியம். புடவை சாத்தி வழிபட்டால் எந்தக் கோரிக்கையையும் நாற்பத்தெட்டே நாள்களில் இந்தத் தாயார் நிறைவேற்றி விடுவாள் என்கிறார்கள் பக்தர்கள்.
இத்தகைய சிறப்புகளை உடைய பெருமாள் தலத்துக்கு ஒருமுறை சென்று வாருங்கள். வாழ்க்கை வளமாகும், நலமாகும்.






















