`நேபாளமும் இந்தியாவில் ஆக்கிரமித்துள்ளது; இப்போ தான் தெரியவந்தது' - அதிர்ச்சி கி...
வீடு, நிலம் வாங்கும்போது 'டக்'கென முடிவு எடுக்காதீங்க; என்னென்ன கட்டாயம் இருக்கணும்?|பணம் வளர்ப்போம்
பணம் வளர்ப்போம் - ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பதுதான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும்.
அப்படி இந்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை வரை, நாம் பார்க்கப்போகும் டாபிக், 'ரியல் எஸ்டேட்'.
'சாகறதுக்குள்ள ஒரு வீடு', 'நமக்குனு சொந்தமான ஒரு நிலம்' என்பது இங்கு பலரின் எமோஷன். இந்த எமோஷன் அனைவருக்கும் நனவாகி விடுவதில்லை.

அப்படியே நனவாகிறது என்றாலும், நிலம் அல்லது வீடு வாங்குகையில் சட்டென எந்த முடிவையும் அவசர கதியில் எடுத்துவிடக் கூடாது. நிலம் அல்லது வீட்டைத் தேர்வு செய்கையிலேயே அனைத்து காரண காரியங்களும் சரிபார்த்துவிடுவது நல்லது.
வாங்கியப் பின் யோசிக்கலாம் என்பது புத்திசாலித்தனமானது அல்ல.
அதனால், நிலம் அல்லது வீடு வாங்கும் ஏரியாவை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை கூறுகிறார் வழக்கறிஞர் மற்றும் பில்டர் முத்துசாமி.
"அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு, சோர்வோடு வரும் நம்மைத் தாங்கும் மடிதான் நம் வீடு. குறிப்பாக, கொரோனா பேரிடருக்குப் பின், வொர்க் ஃப்ரம் ஹோம் இயல்பாகிவிட்டது. அப்படி வீட்டிலேயே வேலை பார்ப்பவர்களுக்கு ரிலாக்ஸான இடமாக வீடு இருக்க வேண்டும்.
வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள், இல்லத்தரசிகள், வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் என அனைவருக்கும் வீடு ஃபிரெண்ட்லியாக இருக்க வேண்டும்.
இவை அனைத்தும் ஒரு இடத்தில் கைக்கூடி வந்தால்தான், அது சௌகரியமான இடமாக இருக்கும். அதற்கேற்ற மாதிரியான வீடு தான் நமக்கு பெஸ்ட் சாய்ஸ்.

பொதுவாக, நிலம் என்று எடுத்துக்கொண்டால், அதை முதலீடாகவோ, வருங்காலத்தில் வீடு கட்டவோ தான் வாங்குகிறோம். விற்பதாக இருந்தால், நல்ல விலை போவதாகவும், சுலபமாக உடனடி விற்பனை செய்யக் கூடிய நிலையில் இருத்தல், வீடு கட்டுவதாக இருந்தால், அனைத்து அத்தியாவசிய வசதிகளும் உள்ள நிலையில் நாம் தேர்ந்தெடுக்கும் நிலம் இருக்க வேண்டும்.
வீடு, நிலம் அருகே என்னென்ன முக்கிய அம்சங்கள் இருக்க வேண்டும்?
நாம் தேர்ந்தெடுக்கும் வீடு, நிலம் அருகே தொழிற்சாலை, ஐ.டி பார்க்கு, கல்லூரி, பள்ளி, தொழில் நுட்ப மையம், சூப்பர்மார்கெட் ஆகியவை இருப்பது போல பார்த்துக்கொள்வது நல்லது. இது நம்முடைய நிலம் அல்லது வீட்டின் மதிப்பை வேகமாக பன்மடங்கு ஏற்றிக்கொண்டே போகும்.
அடுத்தது, வீடு ஒரு பக்கம், வேலை பார்க்கும் இடம் ஒரு பக்கம் என இருந்தால், தினசரி போக்குவரத்துப் பயண அலைச்சல் அதிகமாக இருக்கும். அதனால், பெரும்பாலும் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகாமையில் வீடு அமைப்பது நல்லது.
குழந்தைகளுக்கு பள்ளி, கல்லூரி, தொழில் நுட்ப மையம், மருத்துவ வசதி, பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை அரங்கு அருகிலேயே இருந்தால், அன்றாட பயண நேரம், அதற்காகும் போக்குவரத்து கட்டண செலவுகளைப் பெருமளவில் குறைக்கலாம். குழந்தைகள் மற்றும் முதியோர் தினசரி நீண்ட தூரப் போக்குவரத்து களைப்பு இல்லாமல் இருக்கும்.

பஸ் ஸ்டேன்ட், ரயில்வே ஸ்டேஷன், மெட்ரோ ஸ்டேஷன், விமான நிலையம் போன்றவை எப்போதுமே போக்குவரத்திற்கு அத்தியாவசியமானவை. அதனால், நிலம் அல்லது வீடு அருகாமையில் இவை இடம்பெற்றிருப்பது ஆப்ஷன் அல்ல... அவசியம்.
தரமான தார் சாலை, பூங்காக்கள், கோயில்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், வங்கிகள், ஏ.டி.எம், ஹோட்டல்கள், பலசரக்குக் கடைகள், பொழுது போக்கு, கேளிக்கை அரங்கம், சமுதாயக் கூடம் போன்றவை நிலம் அல்லது வீட்டின் அருகே அமைந்து இருப்பது இப்போது மட்டுமல்ல... எப்போதுமே தேவை.
நிலம் அல்லது வீடு வாங்கும் போது, மேலே சொன்னவற்றை செக் செய்வதற்கு முன், அவ்விடம் தடையில்லா மின்சாரம், குடிநீர் வழங்கல், மழைநீர் வடிகால், சாக்கடை வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
இவை 'இல்லை' என்றால், உடனே அந்த நிலம் அல்லது வீட்டிற்கு 'நோ' சொல்லிவிட்டு யு-டர்ன் போட்டுவிடுங்கள். ஏனெனில், ஒரு இருப்பிடத்திற்கு இவை அத்தியாவசிய அடிப்படை வசதிகள் ஆகும்.

இவை இல்லாமல், எது இருந்தாலும், அந்த இடம் சௌகரியமானது அல்ல.
எங்கும், யாருக்கும் தனிமனிதப் பாதுகாப்பு உறுதி என்பது மிக மிக அவசியம். எனவே, சாலைகளில் தேவைக்கு ஏற்ப தெரு விளக்கு இருக்கிறதா, அந்த இடம் நாம் வசிப்பதற்குப் பாதுகாப்பானதா என்பதையும் செக் செய்துகொள்ளவும்.
வீடு, முதலீடு என்று எதற்காக நிலம் அல்லது வீடு வாங்கினாலும், அதன் அடிப்படை நமக்கு ஒரு சொத்து என்பதே ஆகும்.
நம் அடுத்த தலைமுறையினரும், சந்ததியினரும் எந்த ஒரு பிரச்னை இன்றி நிம்மதியாக சொத்தினை முழு சுதந்திரமாக அனுபவிக்கவும், தேவைக்கு ஏற்ப எப்போதும் விற்பதற்கும் வசதியாக இருக்கும் படி பார்த்து கொள்ள வேண்டும்.
மேலும், எதிர்காலத்தில், நாம் வாங்கும் சொத்தின் மதிப்பு விரைவில் பன்மடங்கு உயருமா, உடனடியாகச் சந்தையில் நல்ல விலைக்கு விற்பனை செய்ய கூடிய நிலையில் உள்ளதா என்பதையும் கணக்கில் கொள்ளுங்கள்".


















