தொடரும் முந்தைய அரசின் திட்டங்கள்; புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் கீ...
ஸ்லீப்பர் பஸ்ஸுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட பெண் - டெல்லியில் பயங்கரம்
நாட்டின் தலைநகர் டெல்லியின் நங்லோய் பகுதியில், நிறுத்தப்பட்டிருந்த ஒரு தனியார் பேருந்துக்குள் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண், பிதம்புரா குடிசைப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், மங்கோல்புரியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார் என்றும் காவல்துறை கூறியுள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு, அவர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சரஸ்வதி விஹார் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஒரு ஸ்லீப்பர் பேருந்து நின்றுள்ளது.

அந்தப் பேருந்தின் வாசலில் நின்றுகொண்டிருந்த ஒருவரிடம் நேரம் கேட்பதற்காக அந்தப் பெண் அணுகியுள்ளார். அப்போது, அவர் வலுக்கட்டாயமாகப் பேருந்துக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், ராணி பாக் பகுதியிலிருந்து பேருந்தை நங்லோய் பகுதிக்கு ஓட்டிச் சென்று, அங்கு அந்தப் பெண்ணை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் குறித்து புகார் பெறப்பட்டதும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக அனைத்துக் கோணங்களிலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தலைநகரில் மீண்டும் ஒருமுறை பெண்ணுக்கு எதிரான வன்முறை அரங்கேறியுள்ளது, பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த வழக்கில் மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
















