உலக நாடுகளுக்கு நெருக்கடி? - $1.2 டிரில்லியன் அபரிமிதத்தில் சீனா - யாரும் செய்தி...
`10 ரூபாய்க்கு பசி தீரும் அளவுக்கு சாப்பாடு!' - நெகிழ வைக்கும் சேலம் தம்பதியின் கதை
விலைவாசி போற நிலைமையில, 10 ரூபாய்க்கு சாப்பாடுனு யாராவது சொன்னா எப்படி இருக்கும். அதெல்லாம் சாத்தியம் இல்லனு சொல்லுவோம்... 10 ரூபாய்க்கு ஒரு தம்பதி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சாப்பாடு கொடுத்து வர்ராங்கானு கேள்விபட்டா, அவங்கள எப்படி சந்திக்காம இருக்க முடியும்..
சேலம், செவ்வாய் பேட்டையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ‘பத்து ரூபாய் சாப்பாட்டு கடை’யை நடத்திவரும் தம்பதியினரான ரவி தங்கதுரை, விஜயலட்சுமி அவர்களை நேரடியாக சென்று சந்தித்தோம்...
``எதற்காக இந்த பத்து ரூபாய் சாப்பாட்டு கடை?"
“இந்த சுற்றுவட்டாரத்தில் நிறைய கூலி தொழிலாளர்கள் இருக்காங்க. தினசரி சம்பளத்தில வயிறு நிறைய சாப்பிட முடியாத நிலை.
ஒரு டீயும், ஒரு போண்டாவும் சாப்பிட்டு பசியை அடக்கிக்கொள்றத நான் கண்கூடாக பார்த்தேன்,” என்கிறார் ரவி தங்கதுரை.
ஒரு போட்டோகிராபராக இருக்கும் அவர், நண்பர்களுடன் சேர்ந்து கடந்த பத்து ஆண்டுகளாக முடிந்த அளவுக்கு அன்னதானம் செய்து வந்திருக்கிறார்.

ஆனால், அதுவே அவருக்குள் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
“நாம அன்னதானம்னு சொல்லிட்டு மக்களை சோம்பேறியாக்குறோமா?
இலவசம்னா உணவு வீணாகுதே… அந்த மன வருத்தத்தோட வெளிப்பாடுதான் இந்த பத்து ரூபாய் சாப்பாட்டு கடை.”
இந்த கடை தினமும் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை இயங்குகிறது.

`10 ரூபாய் கொடுத்தால், பசி தீரும் அளவுக்கு உணவு'
மூத்த குடிமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள்,கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களிடமிருந்து ஒரு ரூபாய்கூட வாங்கப்படுவதில்லை.
இன்று ஒரு நாளைக்கு சுமார் 400 பேர் இங்கு உணவருந்துகிறார்கள்.
`பல வகை உணவுகள் ஏன்?'
“பசியை போக்க ஏதாவது ஒரு உணவு மட்டும் கொடுத்தா போதும் என்பதில்லை.
நம்ம வீட்ல எத்தனை வகை சாப்பாடு சாப்பிடுறோமோ, அதே மாதிரி இருக்கணும்னு நினைச்சோம்,” என்கிறார் ரவி.
அதன் விளைவாக, ஒரு நாளைக்கு 5 வகை உணவுகள், வாரத்தில் ஒரு நாள் முழு ‘மீல்ஸ்’.

`இந்த விலைவாசி உயர்ந்து வரும் காலத்தில் இது எப்படி சாத்தியம்?'
“இது பிஸ்னஸ் இல்ல… சேவை.
அதனால்தான் இந்த கடைக்கு நாங்க எந்த பெயரும் வைக்கல.”
தேவை உள்ளவர்களையும், கொடுக்க தயாராக இருப்பவர்களையும் இணைப்பதே எங்களின் முறை.
எங்கள் தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் இருந்து ஒரு சிறு பகுதியை இதற்காக ஒதுக்க முடிவு செய்து தொடங்கினோம்.
இன்று, பிறந்தநாள், திருமண நாள், நினைவு நாள்
என்று பலர் தானாகவே உணவுக்கு பொறுப்பு ஏற்க முன்வருகிறார்கள்."
உணவை அன்போடு பரிமாறிக் கொண்டிருந்த திருமதி. விஜயலட்சுமி கூறுகிறார் !
“சின்ன வயசுல இருந்தே சமையல் மீது ரொம்ப ஆர்வம்.
மெஸ் வைக்கலாம்னு யோசிச்சபோ தான், என் கணவர் இந்த எண்ணத்தை சொன்னார்.
பணத்தை தாண்டி, நம்ம திறமை மக்களின் பசியை போக்க உதவுனா அதைவிட சந்தோஷம் வேற என்ன?”
இவர் மற்றும் இந்தப் பகுதியில் இருக்கும் நான்கு மகளிர் இணைந்து, தினமும் திருப்தியுடன் சமையல் பணியை செய்து வருகிறார்கள்.










ஒரு கனவு…
இந்த தம்பதியினர் இருவரும்,
“இதுதான் எங்களுடைய பிறவி பலன்”
என்ற நம்பிக்கையோடு வாழ்கிறார்கள்.
“ஒரு நாள் இந்த உலகமே பசி இல்லாத உலகமா மாறணும்.
அப்போ இதுபோன்ற கடைகளும், அன்னதானமும் தேவையில்லாம போகணும்.”
அந்த நம்பிக்கை, அவர்களின் முகத்தில் தெளிவாக தெரிந்தது.
உணவருந்த வந்த மக்களும், உழைத்த காசு கொடுத்து , வயிறு நிறைய, சுவையாக தான் சாப்பிடுகிறோம் என்ற திருப்தியையும் நன்றியுணர்வையும் வெளிப்படுத்தினர்.!


















