"அன்று அம்பேத்கர் தோற்றார்; ஆனால் அவரின் அந்த வாதங்கள் இன்று சட்டமாகியிருக்கின்ற...
சென்னை: நண்பரின் பேச்சைக் கேட்டுப் பிரிந்த காதலி; நண்பரின் மனைவிக்கு மிரட்டல் விடுத்த இளைஞர்
சென்னை, கோடம்பாக்கம், சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின் மனைவி சர்மிளா (24). கார்த்திக்கும் சூளைமேடு பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த அருணும் சிறு வயது முதல் நண்பர்களாக இருந்து வந்தனர்.
அருண் மீது திருட்டு, வழிப்பறி, அடிதடி உட்பட 6 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அருண், அந்தப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். திடீரென அருணின் காதலி அவரைப் பிரிந்து சென்றுவிட்டார். அதனால் மனவேதனையடைந்த அருண், காதலியின் பிரிவுக்கு என்ன காரணம் என விசாரித்தார்.
அப்போது, தன்னைப் பற்றி காதலியிடம் தன்னுடைய நண்பன் கார்த்திக், தவறாகப் பேசிய தகவல் அருணுக்குக் கிடைத்தது. அதனால் கார்த்திக் மீது கடும் கோபத்திலிருந்தார் அருண்.

இதையடுத்து 13.01.2026-ம் தேதி கார்த்திக்கைத் தேடி அவரின் வீட்டுக்குச் சென்றார் அருண். அப்போது வீடு பூட்டியிருந்தது. உடனே அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது சூளைமேடு, ஶ்ரீராமபுரம் மெயின் ரோட்டில் உள்ள கார்த்திக்கின் மாமியார் வீட்டுக்கு கார்த்திக் குடும்பத்தோடு சென்ற தகவல் கிடைத்தது.
உடனே அங்கு சென்ற அருண், கார்த்திக்கின் மனைவி சர்மிளாவிடம் கார்த்திக் எங்கே என்று விசாரித்திருக்கிறார். 'என்னுடைய காதலி பிரிந்து சென்றதற்கு கார்த்திக்தான் காரணம். அவனைக் கொல்லாமல் விடமாட்டேன்' என அருண் கூறியிருக்கிறார்.
அதனால் சர்மிளாவுக்கும் அருணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே கோபத்திலிருந்த அருண், நண்பன் கார்த்திக்கின் மனைவி சர்மிளா, அவரின் அம்மா ஆகியோரை கைகளால் தாக்கியதோடு, 'உங்களையும் கொலை செய்துவிடுவேன்' என மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
பின்னர் நடந்த சம்பவம் குறித்து சர்மிளா சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி, அருணைக் கைது செய்தனர்.



















