'கண்ணியக்குறைவாக பேசுபவர்கள் நேரலையில் அம்பலப்படட்டுமே என மக்கள் கேட்கின்றனர்!' ...
``100 நாள்களில் ரூ.28,000 கோடி கடன்; விஜய்யின் தவெக அரசு நிலைக்காது!" - விளாசிய எடப்பாடி பழனிசாமி
வேலூரில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, ``த.வெ.க அமைச்சரவையில் பல அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒருத் துறை இருக்கிறது. ஆனால், சட்டமன்ற உறுப்பினர் துறைவாரியாக கேள்வி கேட்கும்போது, அந்தத் துறை அமைச்சர் பதில் சொல்வதில்லை. மொத்தமாக பார்த்தால் 4 அமைச்சர்கள்தான் பதில் சொல்கிறார்கள். அதாவது, ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் தான் எல்லாத் துறைகளுக்குமான பதில் சொல்கிறார்கள். மற்ற அமைச்சர்கள் பதில் சொல்வதில்லை.
அதுமட்டுமல்ல, முதலமைச்சரின் துறை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை. மானியக் கோரிக்கையில் முதலமைச்சருக்குப் பதிலாக வேறோரு அமைச்சர் தான் பதில் சொல்கிறார். மக்களுக்குப் பயனுள்ள திட்டம் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட பெரிய வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேற்றவில்லை. ஏதோ சம்பிரதாயத்துக்காக சில வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்கள்.

த.வெ.க அரசு அமைந்த 100 நாள்களில் ரூ.28,000 கோடி கடன் வாங்கியிருக்கிறார்கள். அதில், வருவாய் - செலவு மட்டும் ரூ.25,000 கோடி. இன்னும் ஒரு லட்சம் கோடி கடன் வாங்குவார்கள். நிதி மேலாண்மையைச் சரிசெய்யவும், நிதி கையாளுவது எப்படி என்பதற்காகவும் ஒரு குழு போட்டு, அதற்கு தலைவரையும் போட்டுள்ளார்கள். ஏற்கெனவே இருந்த அரசும் இப்படித்தான் நிதி மேலாண்மையைச் சரிசெய்வதற்காக ஒரு குழு அமைத்தது. குழு அமைத்த பிறகு 5 லட்சம் கோடி கடன் வாங்கினார்கள். இப்போது, 10 லட்சம் கோடி கடன் இருக்கிறது.
இந்த த.வெ.க அரசாங்கம் 5 ஆண்டுகள் நிலைக்காது. அப்படி நிலைத்தால் 10 லட்சம் கோடி கடன் என்பது 20 லட்சம் கோடி கடனாக உயர்ந்துவிடும். மக்கள் எல்லோரும் கடன்காரர்களாக ஆவதுதான் மிச்சம். இன்றைக்குப் பார்த்தால் விலைவாசி விண்ணை முட்டுகின்ற அளவுக்கு உயர்ந்துவிட்டது.
நான் சட்டமன்றத்தில், சம்பந்தப்பட்ட உணவுத்துறை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுச்சென்றேன். சர்க்கரை விலை அதிகமாகிவிட்டது. சுமார் 75 ரூபாய்க்கு ஒரு கிலோ சர்க்கரை விற்கப்படுகிறது. அரிசி கிலோவுக்கு 15 ரூபாயில் இருந்து 20 ரூபாய் உயர்ந்திருக்கிறது. புளி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவுப்பொருள்கள் விலை உயர்ந்துவிட்டது. இவற்றின் விலையைக் குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? என்று கேட்டால், உணவுத்துறை அமைச்சரிடமிருந்து சரியான பதில் வரவில்லை. இதனால், ஏழை மக்கள்தான் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
எம்.எல்.ஏ-க்களுக்கு கார் கொடுப்பது அரசின் விருப்பம். ஆனால், அவர்களிடம் நான் கார் வாங்கப் போவதில்லை. எனக்கு கார் வேண்டாம் என்று கூறிவிட்டேன். அதாவது, கார் என்பது அவர்கள் சொந்தமாக கொடுப்பதில்லை. பதவி இருக்கும் வரை காரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பதவி முடிந்த பிறகு காரை திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். நான் முதலமைச்சராக இருக்கும்போதும், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதும் அரசாங்கத்தின் காரை தான் பயன்படுத்தி வந்தேன். இப்போது என்னிடமே கார் இருப்பதால், அவர்கள் வழங்கும் கார் எனக்குத் தேவையில்லை.
அதேபோல, கார் விவகாரத்தில் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களிடம் `உங்கள் விருப்பப்படி நடந்துகொள்ளலாம்' எனச் சொல்லிவிட்டேன். ஸ்டாலினுக்கு `இசட் ப்ளஸ்' பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது பற்றி நீங்கள் (செய்தியாளர்கள்) முதலமைச்சர் விஜய்யிடம்தான் கேட்க வேண்டும். அவருக்குத்தான் தெரியும்.

சட்டமன்றம் ஆளுங்கட்சியின் கன்ட்ரோலில் இருக்கிறது. போன முறை தி.மு.க ஆட்சியிலும் இப்படித்தான். நான் பேசுவதை ஒளிபரப்பு செய்ய மாட்டார்கள். அமைச்சர்கள் பேசுவதை மட்டுமே காட்டுவார்கள். அதே பாணியில்தான் இன்றைக்கு இருக்கின்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசாங்கமும் நடந்து கொள்கிறது. அந்தக் கட்சியிலிருந்து தான் சட்டப்பேரவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆக, ஆளுங்கட்சிக்கு சாதகமாகத்தான் அவர் செயல்படுவார். அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து கிடையாது.
`ஆளுங்கட்சியின் அராஜகத்தை மட்டும் நேரலையில் காட்டுவதில்லை' என்று வெளியில் மக்கள் பேசிக்கொள்கிறார்கள். எதிர்க்கட்சிகள் தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கிறோம். மக்களின் பிரச்னைகளை எழுப்புகிறோம். அதை அவர்கள் மறிக்கின்றபோது, வாக்குவாதமாக மாறுவதால், நேரலையில் அதனை காட்டுகிறார்கள். சட்டப்பேரவைத் தலைவர் 10 மணி நேரம் பேரவையை நடத்துவதாக சொல்கிறார். நேரலையில் பார்த்திருப்பீர்கள். 10 மணி நேரத்தில் மக்களுடைய பிரச்னைகளை எத்தனை மணி நேரம் பேசியிருப்பீர்கள் என்று நாங்கள் கேள்வி கேட்டால், அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. மக்களின் பிரச்னைகளை அதிக நேரம் எடுத்துக்கொள்வது கிடையாது. 10 மணி நேரத்தில் இரண்டரை மணி நேரம்கூட மக்கள் பிரச்னைகளை எடுத்துக்கொள்ளவில்லை. மீதி ஏழரை மணி நேரமும் தேவையில்லாத பிரச்னைகளை எழுப்பி, அவையின் பொன்னான நேரத்தை வீண்டிப்பதுதான் இன்றைய அரசின் நிகழ்வாகப் பார்க்கிறோம்.
நேரலை தேவை என்பது தான் எங்களுடைய நோக்கம். மக்கள் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சியைப் பொறுத்தவரை மக்களின் குரலை பிரதிபலிப்பது. அந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது ஆளுங்கட்சியின் கடமை. ஆனால், அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவது கிடையாது. ஏதாவது மக்கள் பிரச்னைகளை எடுத்துச் சொன்னால், அதற்கு நேர்மாறாக பேசி அவையின் கவனத்தை திசை திருப்புகிறார்கள்" என்றார்.















