`தங்கம் பெட்டியில் இருப்பது போன்று பெண்கள் வீட்டில்.!' - இஸ்லாமிய மத குரு கருத்த...
'கண்ணியக்குறைவாக பேசுபவர்கள் நேரலையில் அம்பலப்படட்டுமே என மக்கள் கேட்கின்றனர்!' - சபாநாயகர் விளக்கம்
சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தின் இடையே பேசிய சபாநாயகர் 'சட்டமன்ற நேரலை' குறித்து விரிவாக பேசியிருந்தார்.

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், 'சட்டமன்றத்தில் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும் விஷயங்களை அவர்கள் ரீல்ஸாக போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை உரிமைக்குழு நடவடிக்கைக்கு எடுக்க வேண்டுமென கேட்டோம். ஆனால், இன்னும் உரிமைக்குழு அமைக்கப்படவில்லை. அதனால் பேரவைத் தலைவரே முடிவெடுக்க வேண்டும்' என்றார்.
இதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகர் பதிலளிக்கையில், 'செப்டம்பர் 8 ஆம் தேதி வரைதான் அவை இருக்கிறது. உரிமைக் குழு உட்பட எல்லா கமிட்டிக்கான தேர்தலும் இந்த வார இறுதியில் நடக்கும். அதன்பிறகு 'அவைக் குறிப்பு' விவகாரத்தை உரிமைக் குழு எடுத்துக் கொள்ளும். அவையில் இருந்து நீக்கப்படுபவை எல்லாம் ரீல்ஸாக வருகிறது என நீங்கள் வருந்துகிறீர்கள். ஆனால், நேற்று நான் ஒரு தனியார் நிகழ்ச்சிக்காக திண்டுக்கல் சென்றேன். அப்போது ஒரு இளைஞர் கூட்டம் என்னிடம் வந்து பேசினர்.

அவர்கள் பேசும் போது, 'சட்டமன்ற நேரலை எங்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. எங்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. எங்கள் குடும்பத்தில் யாரும் எம்.எல்.ஏ இல்லை, அமைச்சர் இல்லை. ஆனால், நேரலையை பார்த்து எங்களுக்கு அரசியலில் ஈடுபட வேண்டும் என்கிற ஆர்வம் வந்திருக்கிறது. நேரலை மற்றும் அவைக்குறிப்பு பற்றி பேசினீர்கள். நீங்கள் ஏன் உறுப்பினர்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்காதபடிக்கு கண்ணியத்தோடு பேச கற்றுக்கொடுக்கக் கூடாது?' என்றனர்.
இதையும் நான் மனதில் கொள்ள வேண்டும்.
பேசுகின்ற உறுப்பினர்கள் இந்த அவை மற்றும் வாக்காளர்களின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் கருத்தில் கொண்டு பேசினால் இந்த பிரச்னையே எழாது. அதையும் மீறி பேசுபவர்கள் நேரலை மூலம் அம்பலப்பட்டால் என்ன? என்றும் மக்கள் கேட்கின்றனர். இதைப் பற்றியெல்லாம் பின்னர் உங்களிடம் நான் விரிவாக பேசுகிறேன்' என்றார்.
















