'சேப்பாக்கத்தில் சேட்டனின் வெறியாட்டம்!' - எப்படி சதமடித்தார் சஞ்சு சாம்சன்?
"220 ரன்கள் எல்லாம் எங்களுக்கு ஒரு மேட்டரே இல்லை!" – SRH பந்துவீச்சை சிதறடித்த பஞ்சாப் கிங்ஸ்
போட்டியில் இன்று (ஏப்ரல் 11) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
தோல்வியே காணாத பஞ்சாப் அணி தனது கோட்டையில் ஹைதராபாத்தின் அதிரடியைச் சமாளித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் ஒரு இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஹைதராபாத் அணியின் ஓப்பனர்களான அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் சேர்ந்து பவர் பிளேவிலேயே மைதானத்தைச் சிதறடித்தனர்.
6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 105 ரன்கள் குவித்து மிரட்டினர். அபிஷேக் சர்மா வெறும் 28 பந்துகளில் 74 ரன்கள் (8 சிக்ஸர்கள்) விளாசி ஆட்டமிழந்தார். "300 ரன்கள் வரும்" என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷஷாங்க் சிங் ஒரே ஓவரில் இந்த இரண்டு ஓப்பனர்களையும் காலி செய்து ஆட்டத்தைத் திருப்பினார்.
அபிஷேக் சர்மாவின் அதிரடிக்கு பின் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடி காட்டிய ஹென்ரிச் கிளாசன் 39 ரன்கள் எடுத்திருந்தபோது அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். கடைசி நேரத்தில் அனிகேத் வர்மா 18 ரன்கள் எடுத்து அவுட் ஆக, ஐதராபாத் அணி 219 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது
220 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணிக்கு, இளம் வீரர்கள் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஜோடி ஆரம்பமே அதிரடி காட்டியது.
220 ரன்கள் எல்லாம் எங்களுக்கு ஒரு மேட்டரே இல்லை" என்பது போல் விளையாடிய இந்த ஜோடி, பவர் பிளேவிலேயே 93 ரன்கள் குவித்து ஹைதராபாத் பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையை உடைத்தது.
பிரியான்ஷ் ஆர்யா வெறும் 20 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் எடுக்க, மறுபுறம் பிரப்சிம்ரன் சிங் 25 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அரைசதம் கடந்தார். இவர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், ரன் ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டனர்.
நடுவரிசையில் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், "நானும் இருக்கிறேன்" என்று பொறுப்புடன் ஆடியதோடு, 33 பந்துகளில் 69 ரன்கள் (5 சிக்ஸர்கள்) குவித்து வெற்றியை உறுதி செய்தார். ஹைதராபாத் தரப்பில் ஷிவாங் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்திப் போராடினாலும், மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியதால் அது பலன் அளிக்கவில்லை.

இறுதியில் 18.5 ஓவர்களிலேயே 223 ரன்கள் எடுத்து பஞ்சாப் கிங்ஸ் தனது வெற்றியைப் பதிவு செய்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.





















