'சேப்பாக்கத்தில் சேட்டனின் வெறியாட்டம்!' - எப்படி சதமடித்தார் சஞ்சு சாம்சன்?
'சேப்பாக்கத்தில் சேட்டனின் வெறியாட்டம்!' - எப்படி சதமடித்தார் சஞ்சு சாம்சன்?
சேப்பாக்கத்தில் நடந்து வரும் டெல்லிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் அசத்தலான சதம் ஒன்றை அடித்திருக்கிறார்.

சென்னை அணி இந்த சீசனில் மிக மோசமாக ஆடி வருகிறது. முதல் 3 போட்டிகளிலும் சென்னை அணி தோற்றிருந்தது. சென்னை தோற்ற அந்த 3 போட்டிகளிலும் சாம்சனும் மிக மோசமாகவே ஆடியிருந்தார். சாம்சனின் மீது சென்னை அணி நிர்வாகம் பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்தது. டி20 உலகக்கோப்பையின் தொடர் நாயகன் என்பதால் சென்னை அணியின் ரசிகர்களும் சாம்சனை கொண்டாட்டமாய் வரவேற்றிருந்தனர்.
ஆனால், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலான ஆட்டத்தை சாம்சன் ஆடவில்லை.
சென்னையில் நடந்த பஞ்சாபுக்கு எதிரான போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் பயிற்சியாளர் ப்ளெம்மிங் பேசுகையில், 'சாம்சனை ஒன்றிரண்டு போட்டிகளை வைத்து அளவிட முடியாது. அவர் எப்போது வேண்டுமானாலும் பார்முக்கு வருவார். மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை ஆடுவார்' என்றார். அந்த வார்த்தைகளை சாம்சன் இன்று நிஜமாக்கி காட்டியிருந்தார். ஸ்லோயர் ஒன்கள், ஷார்ட் பிட்ச் டெலிவரிக்கள் என டெல்லியின் பௌலர்கள் விதவிதமாக வீசிய அத்தனை பந்துகளையும் பக்குவமாக கையாண்டார். அக்சர் படேல் அத்தனை டைட்டாக வீசியும் அவரை கச்சிதமாக அடித்து வெளுத்தார்.

மேலும், இன்னிங்ஸை சாம்சன் தான் முன்னெடுத்து சென்றார். சாம்சனுடன் ஓப்பனிங் இறங்கிய ருத்துராஜூக்கும் பந்து அவ்வளவாக கனெக்ட் ஆகவில்லை. பவர்ப்ளே முடிவில் அவர் 17 பந்துகளில் 15 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.
அதேமாதிரி, நம்பர் 3 இல் வந்த ஆயுஸ் மாத்ரேவும் ஆரம்பத்தில் Run a ball இல் மட்டுமே ஆடிக்கொண்டிருந்தார். இடையில் கொஞ்சம் வேகமெடுத்தாலும் கடைசியில் அவரை ரிட்டையர் அவுட் ஆக வெளியேற வைத்தனர். ஆக, சாம்சன் மட்டுமே ஆரம்பத்தில் பிடித்த வேகத்தை சதத்தை தாண்டிய பிறகும் தொடர்ந்தார். மொத்தமாக 56 பந்துகளில் 115 ரன்களை அடித்திருந்தார். கடைசி வரை நாட் அவுட் ஆக இருந்தார்.
சாம்சன் அடித்த அடியால் மட்டுமே சென்னை அணி 200 ரன்களை கடந்தது. மூன்று அடி வாங்கிவிட்டு எம்.ஜி.ஆர். ஸ்டைலில் திருப்பி அடித்திருக்கிறார் சாம்சன்!





















